அரசுப்பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் நியமனம் ஆபத்தானது.. ஹைகோர்ட் மதுரை கிளை எச்சரிக்கை
சென்னை: முறையான வழிகாட்டுதல்கள் இன்றி தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பது ஆபத்தானது என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். மாவட்ட கல்வி அலுவலர்கள் தங்கள் தேவையான தகுதியற்றவர்களை பணியில் அமர்த்த நேரிடும் என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.
சமீபத்தில் தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் தற்போது காலியாக உள்ள 13,331 காலிப் பணியிடங்களை, அந்தந்த பள்ளிகள் அருகில் உள்ள தகுதி வாய்ந்த நபர்களை இடைக்கால ஆசிரியர்களாக நியமித்துக்கொள்ளலாம் என்று பள்ளிக்கல்வித் துறையானது, பள்ளி மேலாண்மை குழுவுக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டது.

இதில் 4,989 இடைநிலை ஆசிரியர்கள் பணியிடமும் 5,154 பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடமும் 3,188 முதுகலை ஆசிரியர்கள் பணியிடம் என மொத்தம் 13,331 பணியிடங்களுக்கு தற்காலிக அடிப்படையில் ஆசிரியர்கள் நியமனம் செய்ய உத்தரவிடப்பட்டது.
டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள பட்டதாரிகள் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அரசின் முடிவை கைவிடக்கோரி டிபிஐ வளாகத்தில் கடந்த 3 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அரசின் இந்த முடிவை ரத்து செய்யக் கோரி ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சங்கத்தின் தலைவர் ஷிலா என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், முறையான வழிகாட்டுதல்கள் இன்றி தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பது ஆபத்தானது என்று கருத்து தெரிவித்துள்ளது. மேலும் மாவட்ட கல்வி அலுவலர்கள் தங்கள் தேவையான தகுதியற்றவர்களை பணியில் அமர்த்த நேரிடும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது. இந்த வழக்கில் தமிழக அரசு தரப்பில் விளக்கம் பெற்று தெரிவிக்க நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் உத்தரவிட்டு, நாளைக்கு தள்ளி வைத்தார்.












Click it and Unblock the Notifications