தமிழர்களின் வேரை தேடி.. இந்த ஆண்டு 7 இடங்களில் தொல்லியல்துறை அகழாய்வு நடத்தப்படும்: பி.டி.ஆர்.
சென்னை: தமிழ்நாட்டில் இந்த ஆண்டு 7 இடங்களில் தொல்லியல்துறை அகழாய்வும் 2 இடங்களில் கள ஆய்வும் நடத்தப்படும் என பட்ஜெட்டில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்து உள்ளார்.
Recommended Video
கடந்த ஆண்டு தமிழ்நாட்டில் ஆட்சிப்பொறுப்பு ஏற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசில் நிதியமைச்சராக பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் நியமிக்கப்பட்டார்.
ஆட்சிக்கு வந்த சில மாதங்களில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்த அவர், 2022 - 23 ஆம் அண்டுக்கான தமிழ்நாட்டின் நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் இன்று அவர் தாக்கல் செய்தார்.

ரூ.82 கோடி ஒதுக்கீடு
நடப்பு நிதியாண்டில் தமிழ்நாடு அரசு சார்பில் பல்வேறு துறைகளின் கீழ் மேற்கொள்ளப்பட இருக்கும் பணிகள் மற்றும் திட்டங்களுக்கான நிதியை அறிவித்துள்ளார். குறிப்பாக தமிழ் வளர்ச்சித்துறை தொடர்பான பல்வேறு அறிவிப்புகளை அவர் வெளியிட்டார். தமிழ் வளர்ச்சித்துறைக்கு பட்ஜெட்டில் ரூ.82.86 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது.

7 இடங்களில் அகழாய்வு
தொல்லியல் ஆய்வுகளுக்காக 7 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளதாகவும் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார். இதில் தமிழ்நாட்டில் தொல்லியல் அகழாய்வு இந்த ஆண்டு 7 இடங்களில் நடத்தப்படும் என்றும் 2 இடங்களில் கள ஆய்வு நடத்தப்படும் எனவும் கொற்கையில் முன்கள ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக கூறிய பிடிஆர் இதற்காக ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என்றார்.

கீழடியில் 8 ஆம் கட்ட அகழாய்வு
அதன்படி சிவகங்கை மாவட்டம் கீழடி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளான கொந்தகை, அகரம், மணலூரில் 8 ஆம் கட்ட அகழாய்வு இந்த ஆண்டு நடத்தப்பட உள்ளன. தூத்துக்குடி மாவட்டம் சிவகளையில் மூன்றாம் கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற உள்ளன.

கங்கைகொண்டசோழபுரத்தில் 2 ஆம் கட்ட அகழாய்வு
அதேபோல், அரியலூர் மாவட்டம் கங்கைகொண்டசோழபுரத்தில் இரண்டாம் கட்ட அகழாய்வுப் பணிகளும், கிருஷ்ணகிரி மாவட்டம் மயிலாடும்பாறையில் இரண்டாம் கட்ட அகழாய்வுப் பணிகளும் நடைபெற உள்ளதாக தமிழ்நாடு பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

புதிதாக அகழாய்வு தொடங்கப்பட இருக்கும் இடங்கள்
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் முதல் கட்ட அகழாய்வுப் பணிகளும், திருநெல்வேலி மாவட்டம் துலுக்கர்பட்டியில் முதல் கட்ட அகழாய்வுப் பணிகளும், தருமபுரி மாவட்டம் பெரும்பாலையில் முதல் கட்ட அகழாய்வுப் பணிகளும் இந்த ஆண்டு மேற்கொள்ளப்பட இருப்பதாக நிதியமைச்சர் பட்ஜெட்டில் குறிப்பிட்டு உள்ளார்.

ரூ.10 கோடி செலவில் அருங்காட்சியகம்
அகழாய்வில் கிடைத்த பண்டைகால பொருட்களை காட்சிப்படுத்தவும், மக்கள் மற்றும் வெளிநாட்டு, வெளிமாநில சுற்றுலா பயணிகள் மத்தியில் தமிழ் கலாச்சாரத்தின் தொண்மையை கொண்டு சேர்க்கும் வகையிலும் விழுப்புரம் மற்றும் ராமநாதபுரத்தில் ரூ.10 கோடி செலவில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என பட்ஜெட்டில் நிதியமைச்சர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications