ஆம்ஸ்ட்ராங் கொலை.. முன் விரோதத்தில் நடந்ததா? ஆற்காடு சுரேஷ் சகோதரர் பாலுவும் சரண்! திடுக் தகவல்கள்
சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங்க் கொலை வழக்கில் கொலையாளிகளை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில், அண்ணா நகர் காவல் நிலையத்தில் 8 பேர் சரண் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சரண் அடைந்தவர்களில் கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்ட ரவுடி ஆற்காடு சுரேஷின் சகோதர் பாலுவும் ஒருவர் எனக் கூறப்படுகிறது.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங். 52 வயதான இவர் சென்னை பெரம்பூரில் உள்ள தனது வீட்டின் அருகே, நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்த போது, அங்கு வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டப்பட்டார்.

ஆம்ஸ்ட்ராங்கை வெட்டிய கும்பல் கண் இமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பி ஓடியது. இந்த தாக்குதலில் படுகாயமடைந்த ஆம்ஸ்ட்ராங்கை மீட்ட அக்கம் பக்கத்தினர், உடனடியாக காவல் துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு பெரம்பூர் மற்றும் செம்பியம் விரைந்து வந்தனர்.
ஆம்ஸ்ட்ராங்கை மீட்டு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால், சிகிச்சை பலனளிக்காமல் ஆம்ஸ்ட்ராங் உயிரிழந்தார். பிரபல அரசியல் கட்சியின் மாநில தலைவர் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு என ஒன்று இருக்கிறதா என எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இதனிடையே, ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்த கும்பல் ஆயுதங்களுடன் தப்பி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. இந்த சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கோண்டு வருகிறார்கள். மேலும் கொலையாளிகளை பிடிக்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரனை நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் தான் சென்னை அண்ணா நகர் காவல் நிலையத்தில் 8 பேர் சரண் அடைந்தனர். அவர்களை கைது செய்து போலீசார் முதற்கட்ட விசாரணை நடத்தி வருகின்றனர். சரண் அடைந்தார்களில் கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்ட ரவுடி ஆற்காடு சுரேஷின் சகோதரர் பாலுவும் ஒருவர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
ஆற்காடு சுரேசை பொறுத்தவரை கடந்த ஆண்டு கொலை வழக்கில் ஒன்றி ஆஜராகிவிட்டு பட்டினப்பாக்கம் கடற்கரை சாப்பிட சென்ற போது, அவரை ஒரு கும்பலால் வெட்டி கொலை செய்தது. இந்த கொலை தொடர்பாக போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த கொலைக்கும் ஆம்ஸ்ட்ராங்க்கிற்கும் தொடர்பு இருப்பதாக அப்போது ஒரு பேச்சு அடிபட்டது. இந்த நிலையில் தான் ஆற்காடு சுரேஷின் சகோதரர் பாலு உள்பட 8 பேர் சரண் அடைந்துள்ளனர். இதனால், முன் விரோதத்தால் இந்த கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications