ராயப்பேட்டையில் "டீப் டிஸ்கஷன்".. ஆட்டத்தை கலைத்தாடும் எடப்பாடி பழனிசாமி.. 2வது இன்னிங்ஸ் துவங்கியது
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் அரசியல் அதிரடிகள் வேகம் எடுத்துள்ள நிலையில், இன்றைய தினம் கட்சியிலுள்ள நிர்வாகிகளிடம், 2ம் கட்ட ஆலோசனையை இன்று முதல் மேற்கொள்கிறார்.
கடந்த லோக்சபா தேர்தலில், அதிமுக 32 இடங்களிலும் தனித்து போட்டியிட்டது. ஆனால், 32 இடங்களிலுமே படுதோல்வியை சந்தித்தது. அதுவும் தென் சென்னை, கன்னியாகுமரி, புதுச்சேரி, தேனி, தூத்துக்குடி, நெல்லை மற்றும் வேலூர் ஆகிய 7 தொகுதிகளிலும் அதிமுக டெபாசிட் இழந்தது.

படுதோல்வி: நெல்லை, கன்னியாகுமரி, புதுச்சேரியில் 4வது இடத்திற்கு தள்ளப்பட்டது.. விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலிலும் அதிமுக 4வது இடத்துக்கு தள்ளப்பட்டது.
ஆகமொத்தம் 10 தொகுதிகளில் டெபாசிட்டை பறிகொடுத்தது அதிமுக. இதனால் ஒட்டுமொத்த அதிமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் அதிர்ச்சியடைந்தனர்... அதிருப்தியையும் அடைந்தனர்.. அதிமுக மேலிடம் மீது வருத்தமும் கொண்டனர். அதிலும் சில எம்ஜிஆர் விசுவாசிகள், தங்கள் எதிர்ப்பையும், கண்டனத்தையும் வீடியோ மூலம் கொந்தளித்து வெளிப்படுத்தினர்.
கடந்த சட்டமன்ற தேர்தலைபோலவே, இந்தமுறையும் பலவீனமான கூட்டணி என்றும், கட்சியில் ஒற்றுமையில்லாததே இந்த படுதோல்விக்கு காரணம் என்றும் வெளிப்படையாகவே ஆதங்கத்தை கொட்டினார்கள்.
விறுவிறு பணிகள்: இதையடுத்து, அதிமுக மேலிடம், விறுவிறு பணிகளை மேற்கொண்டு வருகிறது. நீண்ட காலத்துக்கு பிறகு, நிர்வாகிகளை நேரடியாக வரவழைத்து, அவர்களிடன் கருத்தை கேட்டு வருகிறார் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி..
நடந்து முடிந்த தேர்தலில் என் தோல்வி? என்பதுடன் வரப்போகும் தேர்தலில் யாருடன் கூட்டணி வைக்கலாம்? என்பது வரை ஒன்றுவிடாமல் மாவட்ட நிர்வாகிகளிடம் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார் எடப்பாடி பழனிசாமி.. இதில் பல மாவட்ட நிர்வாகிகள் பாமகவுடன் கூட்டணி வைத்திருந்தால் அரக்கோணம் போன்ற தொகுதிகளில் எளிதாக வெற்றி பெற்றிருக்க முடியும் என்றும் அடுத்து வர தேர்தலில் பாமகவை கைநழுவ விடக்கூடாது என்றும் சொன்னார்களாம்.
ஓபிஎஸ், சசிகலா: அதேபோல மேலும் பல நிர்வாகிகள் வரப்போகும் சட்டமன்ற தேர்தலில், நாம் தமிழர் கட்சியுடன் கூட்டணி வைத்தால் நன்றாக இருக்கும் என்று சொன்னார்களாம். மேலும் சிலர், ஓபிஎஸ், சசிகலா தரப்பை ஒன்றிணைத்து கொள்ளலாம், அப்போதுதான் முக்குலத்தோர் வாக்குகளை எளிதாக பெற முடியும் என்று சொன்னார்களாம்.
ஒவ்வொரு தொகுதியிலும், நிர்வாகிகள் சொல்லும் ஒவ்வொரு கருத்துக்களை உன்னிப்பாக கவனத்தில் கொண்டு வருகிறார் எடப்பாடி பழனிசாமி. ஆனால், வரப்போகும் தேர்தலில் நிச்சயம் பலமான கூட்டணி அமைப்போம் என்று நிர்வாகிகளிடம் உறுதி தந்துள்ளாராம்.. ஆனால், கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்களுக்கு, மீண்டும் அதிமுகவில் இடமில்லை என்பதிலும் உறுதியாக இருப்பதாக தெரிகிறது.
அந்தவகையில், முதற்கட்டமாக கடந்த 10ம் தேதி இந்த ஆலோசனை கூட்டத்தை, ஒவ்வொரு மாவட்ட நிர்வாகிகளுடனும் எடப்பாடி பழனிசாமி மேற்கொண்டிருந்தார்.. அந்த ஆலோசனை கூட்டமானது நேற்று முன்தினம் நிறைவடைந்தது... இதையடுத்து, பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் குறித்த அதிமுகவின் 2ம் கட்ட ஆலோசனை கூட்டம் இன்று அதாவது 24ம் தேதி முதல் ஆகஸ்ட் 5ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது..
இன்று ஆலோசனை: அதன்படி, காலை, மாலை என இரு வேளைகளில் தொகுதி வாரியாக எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்த போகிறார்.. இன்று 24ம் தேதி தேனி மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனையை சென்னை ராயப்பேட்டை அலுவலகத்தில் நடத்தி வருகிறார் எடப்பாடி பழனிசாமி. தேனி மாவட்டத்தை தொடர்ந்து இன்று மாலை ஆரணி மாவட்ட நிர்வாகிகளுடனும் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.
இதுஒருபுறமிருந்தாலும், திமுக அரசை கடுமையாக எதிர்ப்பதில் தீவிரம் காட்டி வருகிறார் எடப்பாடி பழனிசாமி.. கடந்த மாதங்களை போலல்லாமல், தமிழக அரசின் ஒவ்வொரு செயல்பாட்டையும் விமர்சித்து வருகிறார்.. மாநில அரசை கண்டித்து போராட்டங்களையும் முன்னெடுத்து வருகிறார்.. தினந்தோறும் ஏதாவது ஒரு கண்டன அறிக்கையை வெளியிட்டு, அதிமுகவின் எதிர்ப்பையும் பதிவு செய்து வருகிறார். அந்தவகையில், அதிமுகவின் அரசியல் வேகம், தற்போது அதிகரித்துள்ளதாகவே தெரிகிறது.
முனைப்பு: ஆகமொத்தம், கட்சியின் கட்டமைப்பை பலப்படுத்தும் முயற்சியில் இறங்கிக்கொண்டே, மறுபுறம் திமுக அரசின் எதிர்ப்பிலும் எடப்பாடி பழனிசாமி முனைப்பு காட்டிவருவதால், அதிமுக தொண்டர்களிடம் தற்போது புதுத்தெம்பு ஏற்பட்டுள்ளதாம்...!!












Click it and Unblock the Notifications