டாஸ்மாக் சரவெடி.. யாருப்பா அது புதுஸ்ஸா? மதுக்கடைகளில் வெளிநபர்களா? இதோ பறந்து வருகிறது "ஆக்ஷன்"
சென்னை : டாஸ்மாக்குகளில் நடைபெற்று வரும் முறைகேடுகளை தடுப்பதில், அரசு மிகுந்த தீவிரம் காட்டி வருகிறது. அந்தவகையில், மிக முக்கிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
தமிழ்நாட்டை பொறுத்தளவில், டாஸ்மாக்குகள் மூலம் கிடைக்கும் வருவாயே பிரதானமாக கருதப்படுகிறது.. அரசுக்கு கிடைக்கும் மொத்த நிதி ஆதாரத்தில் 3ல் ஒரு பங்கு வருமானம், டாஸ்மாக், மதுக்கடைகள் மூலம் கிடைத்து வருவதாக கூறப்படுகிறது.

வருமானம்: இப்போதைக்கு மொத்தம் 4829 மதுக்கடைகள் தமிழகத்தில் செயல்பட்டு வருகின்றன. இதன்மூலம் வருடத்துக்கு ரூ.45 ஆயிரம் கோடி வரை வருமானமும் கிடைத்து வருகிறது... அதாவது சராசரியாக தினந்தோறும் 150 கோடி ரூபாய்க்கும், விடுமுறை தினங்களில் அதிகமாகவும் மதுபானங்கள் விற்பனையாகி வருகின்றன.
எனினும், அரசின் நிதிச்சுமையை குறைப்பதற்காகவும், வருவாயை பெருக்குவதற்காகவும், டாஸ்மாக் மதுபானங்கள் விலைகளும் சமீபத்தில் உயர்த்தப்பட்டிருந்தன.
விற்பனைகள்: சில இடங்களில் விற்பனையாளர்களும் ஆங்காங்கே 10 ரூபாயை கூடுதலாக ஒவ்வொரு பாட்டிலுக்கும் வசூலித்து கொண்டேயிருக்கிறார்களாம். அதிலும், குவார்ட்டர் பாட்டிலை மட்டுமே அதிக அளவில் விற்பனை செய்வதாக குடிமகன்கள் கொந்தளிக்கிறார்கள்.. எனவே, டாஸ்மாக் ஊழியர்களுக்கும் அவ்வப்போது அறிவுரைகள் வழங்கபபட்டு வருகின்றன.
தமிழகத்தில், 4,820 மதுக்கடைகளில், 25,000 பேர் தொகுப்பூதியத்தில் பணிபுரிந்து வரும்நிலையில், வேறு சில சிக்கல்களும் எழுந்துள்ளன.. இதில் சில ஊழியர்கள், வேலைக்கு ஒழுங்காக வருவதில்லையாம்.. டியூட்டி நேரத்தில் இவர்கள், வேறு வேலைகளை கவனிப்பதாகவும், தங்கள் சார்பில், நண்பர்கள், உறவினர்களை கடையில் நியமித்து இருப்பதாகவும் புகார்கள் கிளம்பி உள்ளன.
முறைகேடுகள்: குறிப்பாக, இதுபோன்ற முறைகேடுகள், சென்னை உட்பட பல மாவட்டங்களில் அதிகமாக நடக்கிறதாம். அதுவும், மதுக்கடைகளில், மது பாட்டிலுக்கு அரசு நிர்ணயித்துள்ள விலையை விட கூடுதலாக, 30 ரூபாய் வரை வசூலிக்கப்படுவதாக பகீர் கிளம்பியிருக்கிறது. அந்த பணத்தில் இருந்து, தங்களின் பணியை செய்யும் வெளிநபர்களுக்கு தினமும், 500 ரூபாய் முதல் 1,000 ரூபாய் சம்பளம் தருவதாகவும் கூறப்படுகிறது.
இதற்கெல்லாம்தான் டாஸ்மாக், இன்னொரு கிடுக்கிப்பிடியை போட தயாராகிவருகிறது. அதாவது, கடைகளில் அதிரடி ஆய்வுகள் மேற்கொண்டு, நிர்வாகத்திற்கு தொடர்பு இல்லாத நபர்கள் யாராவது பணிபுரிந்தால், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்படியும், வெளி நபரை நியமித்த ஊழியர்கள் மீது துறை ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறதாம்.
கிடுக்கிப்பிடி: ஒருவேளை இவர்களின் தவறு உறுதியாகும்பட்சத்தில், சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் முடிவாகி உள்ளதாம். மதுக்கடைகளில் நிர்வாகத்திற்கு தொடர்பில்லாத நபர்கள் பணிபுரிந்தால், சம்பந்தப்பட்ட ஊழியர் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு, மாவட்ட மேலாளர்களை டாஸ்மாக் அறிவுறுத்தியிருப்பது, நிலவிவரும் முறைகேடுகளை மேலும் தடுக்கும் என்று நம்பப்படுகிறது.












Click it and Unblock the Notifications