உண்மையிலேயே நீங்கள் தமிழகத்தின் முதல்வரா அல்லது எதிரியா ஜோசப் விஜய் அவர்களே.. நயினார் கேள்வி
சென்னை: மத்திய அரசு சார்பாக, தமிழகத்தைச் சேர்ந்த 13 சாதனையாளர்களுக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டு, அதில் 7 பேருக்கு பத்மஸ்ரீ மற்றும் பத்ம பூஷண் விருதுகள் வழங்கப்பட்டு 24 மணி நேரங்கள் கடந்துவிட்டன. முதல்வராக இல்லாவிடிலும் சாதாரண தமிழனாக நீங்கள் கொண்டாடி களிக்க வேண்டிய நிகழ்வல்லவா இது? பின்பு எதற்கு இந்த கனத்த மௌனம்? என்று முதல்வர் விஜய்க்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார்.
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள பதிவில் கூறுகையில், "உண்மையிலேயே நீங்கள் தமிழகத்தின் முதல்வரா அல்லது தமிழினத்தின் எதிரியா ஜோசப் விஜய் அவர்களே? நமது மத்திய அரசு சார்பாக, தமிழகத்தைச் சேர்ந்த 13 சாதனையாளர்களுக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டு, அதில் 7 பேருக்கு பத்மஸ்ரீ மற்றும் பத்ம பூஷண் விருதுகள் வழங்கப்பட்டு 24 மணி நேரங்கள் கடந்துவிட்டன. விருது வாங்கியவர்கள் எல்லாம் செல்வச் செழிப்பில் திளைத்து, பண மெத்தையில் புரண்டவர்கள் இல்லை. சாதாரண குடும்பத்தில் பிறந்து தங்களது அசாத்திய திறமையினால் உலகை திரும்பிப் பார்க்கச் செய்த தமிழர்கள்.

அவர்களின் இந்த வெற்றி கண்டு உங்களுக்கு அகம் மகிழவில்லையா? நமது நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகள் அவர்களைப் போன்ற சாமானியர்களுக்கு கிடைத்தது உங்களுக்கு பிடிக்கவில்லையா? முதல்வராக இல்லாவிடிலும் சாதாரண தமிழனாக நீங்கள் கொண்டாடி களிக்க வேண்டிய நிகழ்வல்லவா இது? பின்பு எதற்கு இந்த கனத்த மௌனம்?
நமது சோழ மன்னர்களின் வரலாற்று அடையாளமான "ஆனைமங்கல செப்பேடுகள்" நமது தாயகம் திரும்பியதற்கும் நீங்கள் வாயைத் திறக்கவில்லை. நமது தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு நாட்டின் உயரிய விருதுகள் கிடைத்ததற்கும் நீங்கள் வாழ்த்துக் கூறவில்லை. உங்களைத் தோள் வலிக்க தாங்கிப்பிடித்து உச்சாணியில் ஏற்றிவிட்ட தமிழகத்திற்கு நீங்கள் காட்டும் நன்றிக்கடன் இதுதானா திரு. ஜோசப் விஜய்? இப்படியொரு ஆணவ முதல்வரை தமிழக வரலாறு இதுவரைக் கண்டதில்லை" இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
முன்னதாக நயினார் இன்று காலை வெளியிட்ட ட்வீட் பதிவில், "கடந்த ஆட்சிக்கு கொஞ்சமும் சளைத்ததல்ல தவெக ஆட்சி!
தேர்தலுக்கு முன்பு மாற்றத்திற்கான நேரம் என்று சூளுரைத்த தவெகவின் போலி பரப்புரையை நம்பிய தமிழக மக்களுக்கு, பெருத்த ஏமாற்றத்தை மட்டுமே கொடுத்துக் கொண்டிருக்கிறார் திரு. ஜோசப் விஜய் அவர்கள்.
பிற கட்சிகளுக்குள் புகுந்து குதிரை பேரம் பேசி எப்படி ஆட்களை உருவலாம் என்பதில் மட்டும் கவனம் செலுத்திக் கொண்டு, மாநிலத்தின் அடிப்படையான சட்டம் ஒழுங்கை கோட்டை விட்டு விட்டார்!" என்று கூறியிருந்தார்.












Click it and Unblock the Notifications