நடுவில் ஈபிஎஸ்.. பொதுக்குழு மேடையிலேயே மாஜிக்கள் வாக்குவாதம்! பிரிவுக்குள் பிரிவா? -என்னாச்சு?
சென்னை: அதிமுக பொதுக்குழு கூட்டத்தின் மேடையிலேயே எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களான சி.வி.சண்முகமும் கே.பி.முனுசாமியும் வாக்குவாதத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
புதிய தீர்மானங்களை நிறைவேற்றக்கூடாது என்ற உத்தரவுடன் கடந்த 23 ஆம் தேதி அதிமுக பொதுக்குழுக் கூட்டம் சென்னை வானகரத்தில் கூடியது.
கூட்டத்தில் பேசிய அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், ஜூலை 11-ஆம் தேதி நிச்சயமாக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்றும் எடப்பாடி பழனிசாமி தான் அதிமுகவின் பொதுச்செயலாளராக வருவார் எனவும் கூறினார். இதனால் தொடங்கிய சில நிமிடங்களிலேயே பொதுக்குழு முடிவுக்கு வந்தது.

அதிமுக பொதுக்குழு
இதன் தொடர்ச்சியாக இன்று நடைபெற்ற அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்கக்கோரி உயர்நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கின் இறுதி விசாரணை இன்று காலை 9 மணிக்கு நடைபெற்றது. வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் பொதுக்குழுவுக்கு தடை விதிக்க மறுத்தது. இதனை தொடர்ந்து சென்னையில் அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் பிரம்மாண்டமாக கூடியது.

இடைக்கால பொதுச்செயலாளராக இபிஎஸ்
ஒருபக்கம் அதிமுக தலைமையகத்தில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களிடையே மோதல் வெடிக்க மறுபக்கம், பொதுக்குழுவில் ஜெயலலிதா அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் என்ற தீர்மானம் ரத்து செய்யப்பட்டது. அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு மேடையிலேயே மலர் கிரீடம், பூ மாலை, வாள் கொடுத்து தொண்டர்கள் மகிழ்ந்தனர்.

கே.பி.முனுசாமி பேச்சு
இந்த கூட்டத்தில் பேசிய கே.பி.முனுசாமி, "முந்தைய பொதுக்குழு கூட்டத்தின் தேதியை ஓ.பன்னீர்செல்வம் ஏற்றுக்கொண்டார். ஆனால், தடைகோரி நீதிமன்றத்தை நாடினார். பொதுக்குழுவில் கலந்துகொண்டு உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என நீதிமன்றம் தெரிவித்தும் வன்முறையை செய்திருக்கிறார். அவர் விரக்தியின் உச்சத்தில் உள்ளார். சுயநலனுக்கான கட்சியை அழிக்க முடிவு செய்திருக்கிறார். அவரை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்ற தீர்மானத்தை பொதுச்செயலாளர் கொண்டு வருவார்." என்றார்.

கோபமடைந்த சி.வி.சண்முகம்
கே.பி.முனுசாமி பேசிவிட்டு எடப்பாடி பழனிசாமி அருகேபோய் அமர்ந்தவுடன் அவரை நோக்கி சி.வி.சண்முகம் ஆவேசமாக இருக்கையிலிருந்து எழுந்து சென்றார். கே.பி.முனுசாமியின் உரை தொடர்பாக எடப்பாடி பழனிசாமி முன்பாகவே சி.வி.சண்முகம் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட கே.பி.முனுசாமியும் அவேசமடைந்தார். அதன் பின்னர் எடப்பாடி பழனிசாமி எஸ்.பி.வேலுமணி முன்னிலையில் சமாதானம் செய்துவைத்தார்.

என்ன காரணம்?
தென் மாவட்டங்களை சேர்ந்த திண்டுக்கல் சீனிவாசனை பொருளாளராக அறிவித்து, ஆர்.பி.உதயகுமார், ஓ.எஸ்.மணியனை வைத்து தீர்மானங்களை வாசித்து, நத்தம் விஸ்நாதனை கொண்டு தீர்மானத்தை முன்மொழிய செய்ததைபோல் தென்மாவட்டத்தை சேர்ந்தவரை வைத்தே ஓ.பி.எஸ்.-ஐ நீக்கும் தீர்மானத்தை முன்மொழிய செய்யலாம் என்று திட்டமிட்டிருந்த நிலையில் எடப்பாடி பழனிசாமியே அதை முன்மொழிவார் என்று கே.பி.முனுசாமி பேசியதாலேயே சி.வி.சண்முகம் ஆவேசமடைந்ததாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications