ஆம்ஸ்ட்ராங் வழக்கில் கைதான என் கணவர் அருளை என்கவுன்ட்டர் செய்துடுவாங்க! மனைவி மனு
சென்னை: தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான வழக்கறிஞர் அருளையும் என்கவுன்ட்டர் செய்துவிடுவார்கள் என்பதால் அவரது உயிருக்கு பாதுகாப்பு வழங்குமாறு அவருடைய மனைவி அபிராமி, ஆவடி காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது மனுவில் கூறியிருப்பதாவது: எனது கணவர் அருளையும் போலீஸார் என்கவுன்ட்டர் செய்துவிடுவார்கள். அருள் செய்தது தவறுதான். அதற்குரிய தண்டனையை அவருக்கு தர வேண்டும். அருளை போலீஸ் கஸ்டடியில் எடுக்கக் கூடாது. அவரது உயிருக்கு ஆபத்து ஏதும் நேரவே கூடாது. அவருக்கு உரிய பாதுகாப்பு தர வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் அருளின் மனைவி கோரிக்கை விடுத்துள்ளார்.

பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5ஆம் தேதி பெரம்பூர் வேணுகோபால் சுவாமி கோயில் தெருவில் உள்ள அவரது வீட்டின் முன் மர்ம கும்பலால் வெட்டிக் கொல்லப்பட்டார்.
இந்த கொலை தொடர்பாக ஏற்கெனவே கொலை செய்யப்பட்ட பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த 11 பேரிடமும் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அந்த 11 பேரில் கைது செய்யப்பட்ட திருவேங்கடத்தின் வங்கிக் கணக்குகளில் இந்த கொலைக்கான பணம் செலுத்தப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்வதற்காக பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களும் திருவேங்கடத்தின் வீட்டருகே புதைக்கப்பட்டதாக தெரியவந்தது. இது குறித்து விசாரிப்பதற்காக திருவேங்கடத்தை புழல் சிறையில் இருந்து நேற்று அதிகாலை 5.30 மணி அளவில் மாதவரத்தில் உள்ள வெஜிடேரியன் வில்லேஜ் என்ற பகுதியில் போலீஸார் கவனத்தை திசை திருப்பி திருவேங்கடம் தப்பித்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து போலீஸார் துரத்திய போது அந்த பகுதியில் பதுக்கி வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து காவலர்களை சுட முயன்றுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தற்காப்புக்காக அவரை நோக்கி போலீஸார் துப்பாக்கியால் இரு முறை சுட்டுள்ளனர். இதையடுத்து அவரது இடது பக்க நெஞ்சு பகுதியிலும் வயிற்று பகுதியிலும் குண்டுகள் பாய்ந்ததில் அவர் படுகாயமடைந்தார்.
பின்னர் அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் திருவேங்கடம் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடலை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது.
ரவுடி திருவேங்கடத்தின் மீது 2015 ஆம் ஆண்டு பகுஜன் சமாஜ் கட்சி மாவட்டச் செயலாளர் தென்னரசு கொலை வழக்கு உள்பட 3 கொலை வழக்குகள் இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த என்கவுன்ட்டர் சம்பவத்திற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
இந்த ரவுடி திருவேங்கடம்தான் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு முக்கிய மூளையாக செயல்பட்டார் என்பது குறித்து நேற்று வெளியான சிசிடிவி காட்சிகள் மூலம் தெரியவருகிறது. அந்த காட்சியில் ஆம்ஸ்ட்ராங்கை முதலில் திருவேங்கடம்தான் வெட்டுகிறார். அதிலும் ஆம்ஸ்ட்ராங் உயிர் பிழைக்காத மாதிரி ரத்தம் வெளியேறும் நரம்புகளிலேயே திருவேங்கடம் வெட்டியுள்ளார்.
இந்த நிலையில் திருவேங்கடத்தின் என்கவுன்ட்டர் குறித்த பின்னணி தற்போது வெளியாகியுள்ளது. அதாவது ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்தது ஏன் என்பது குறித்த காரணங்களும் யார் யார் உதவினார்கள் என்ற தகவல்களும் வழக்கறிஞர் அருளுக்கும் திருவேங்கடத்திற்கும்தான் தெரியும் என போலீஸார் கருதுகிறார்கள். அதாவது அருளுக்கு திருவேங்கடம் நெருக்கமானவர் என தெரிகிறது.
விசாரணையில் கொலை தொடர்பாக அருளும் திருவேங்கடமும் ஒரே மாதிரியான விஷயங்களை விசாரணையில் தெரிவித்தனராம். 3 நாட்கள் காவலில் எடுத்து அவர்களை தனித்தனியே விசாரித்தும் அருளும் திருவேங்கடமும் உண்மைக் காரணத்தை மறைக்கிறார்கள் என போலீஸார் கருதுகிறார்கள்.
திருவேங்கடம்தான், ஆம்ஸ்ட்ராங்கை பின்னால் இருந்து தாக்கி முதலில் காலில் அரிவாளால் வெட்டியவர். திருவேங்கடம் வெட்டிய பிறகு அதில் ஆம்ஸ்ட்ராங் நிலைத்தடுமாறியதும் தான் அவரை மற்ற கொலையாளிகள் சுற்றி வளைத்து வெட்டத் தொடங்கினர்.
அருளிடம் இருந்து உண்மையை வெளிக் கொண்டு வரவே திருவேங்கடம் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் வழக்கறிஞர் அருள் உயிர் பயத்தில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications