ஆம்ஸ்ட்ராங் வழக்கு..10 வருடம் மேல் தலைமறைவு! சம்போ செந்திலை பிடிக்க புது ரூட்டை கையில் எடுத்த போலீஸ்
சென்னை: சென்னையில் கடந்த 5 ஆம் தேதி கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அடுத்தடுத்து பல திருப்பங்கள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கொலைக்கு மூளையாக செயல்பட்டதாக கூறப்படும் பிரபல ரவுடி சம்போ செந்தில் என்பவரை காவல் துறையினர் தேடி வருகின்றனர். அவர் இருப்பிடத்தை அறிய இன்ஸ்டாகிரம், டெலிகிராம் உள்ளிட்ட நிறுவனங்களின் உதவியை போலீஸ் நாடியுள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த 5 ஆம் தேதி பெரம்பூர் செம்பியம் பகுதியில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக பொன்னை பாலு, அருள், உள்ளிட்ட 16 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்ட ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிவாங்கவே ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்டது.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பொன்னை பாலு உள்ளிட்ட 11 பேரை 5 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை செய்தனர். அப்போது ரவுடி திருவேங்கடம் என்கவுன்டர் செய்யப்பட்டார். அதன்பிறகு 10 பேர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீசார் பாஜகவை சேர்ந்த அஞ்சலை, அதிமுகவை சேர்ந்த மலர்க்கொடி, தமாகாவைச் சேர்ந்த ஹரிஹரன், திமுக நிர்வாகியின் மகனான சதீஷ், அதிமுகவைச் சேர்ந்த ஹரிதரன் ஆகியோரை கைது செய்தனர்.
கைதான ஹரிதரன் கொடுத்த தகவலின் அடிப்படையில் வெங்கத்தூர் கூவம் ஆற்றில் வீசப்பட்ட 5 செல்போன்களை போலீசார் கைப்பற்றியுள்ளனர். இதுவரை ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவர்களிடம் இருந்து பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் பல்வேறு ரவுடி குழுக்கள் ஒன்றிணைந்து ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது. இந்த கொலை வழக்கில் இதுவரை 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொலையாளிகள் பயன்படுத்திய செல்போன் எண்களை பயன்படுத்தி ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஆற்காடு சுரேசின் தம்பியான பொன்னை பாலுவுடன் செல்போனில் பேசி கொலையாளிகளுக்கு உதவி செய்ததாக எழுந்த குற்றச் சாட்டின் பேரில் முன்னாள் ஊர்க்காவல் படை வீரரான பிரதீப் என்பவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்னும் தலைமறைவாக உள்ள சீசிங் ராஜா, சம்போ செந்தில் உள்ளிட்டோரை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள். ஆனாலும் ரவுடி சம்போ செந்தில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக தலைமறைவாக உள்ளதால் தற்போது எங்கு உள்ளார் என்ற விவரத்தை கண்டறிவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. சம்போ செந்தில் வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கலாம் என சொல்லப்படுகிறது.
தனது கூட்டாளிகளிடம் விபிஎன் பயன்படுத்தி இன்ஸ்டகிராம், டெலிகிராம் மூலமாக பேசி வந்ததால், அவர் தொடர்பு கொள்ளும் நபர்களின் முழு லிஸ்ட்டையும் கேட்டு இன்ஸ்டகிராம், டெலிகிராம் நிறுவனத்திற்கு சென்னை போலீசார் கடிதம் எழுதியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த லிஸ்ட் கிடைக்கும் பட்சத்தில் சம்போ செந்தில் பற்றிய மேலும் விவரங்கள் தெரியவரும் என்பதால் தனிப்படை போலீசார் தீவிரமாக இதை கவனித்து வருகிறார்கள்.
சம்போ செந்திலுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டு 15 வருடத்திற்கு முந்தைய படம் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சம்போ செந்திலின் தற்போதைய உருவம் குறித்து அறிவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இருந்த போதிலும் தனிப்படை போலீசார் சம்போ செந்திலின் முழு விவரங்களை சேகரித்து அவரை பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications