Armstrong: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்.. சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி
சென்னை: பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கினை சிபிஐக்கு மாற்றம் செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் 6 மாதத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ள சென்னை உயர் நீதிமன்றம், வழக்கு தொடர்பான ஆவணங்களை உடனடியாக சிபிஐயிடம் ஒப்படைக்கவும் சிபிசிஐடிக்கு உத்தரவிட்டுள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஆண்டு ஜூலை மாதம் சென்னையில் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் இதுவரை 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

6 மாதங்களுக்குள் குற்றப்பத்திரிக்கை
முதன்மை அமர்வு நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து வருகிறது. வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றக்கோரி ஆம்ஸ்ட்ராங் சகோதரர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். ஆம்ஸ்ட்ராங்க் மனைவியும் இதே கோரிக்கையை வைத்து மனு தாக்கல் செய்து இருந்தார்.
இந்த வழக்கில் விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இன்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது. வழக்கில் 6 மாதங்களுக்குள் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங். இவர் கடந்த ஆண்டு ஜூலை 5-ஆம் தேதி தனது வீட்டின் அருகே வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் இதுவரை 27 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கை செம்பியம் காவல்துறையினர் நியாயமாக விசாரிக்கவில்லை என கூறி, விசாரணையை சிபிஐக்கு மாற்றக் கோரி பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில பொதுச் செயலாளரும், ஆம்ஸ்ட்ராங்கின் சகோதரருமான கீனோஸ் ஆம்ஸ்ட்ராங் சென்னை ஹைகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.
போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை
அந்த மனுவில், "ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பல முக்கிய அரசியல் கட்சியினரின் தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுகிறது. எனவே, மாநில காவல்துறை இந்த வழக்கை சுதந்திரமாக விசாரிக்க முடியாது. ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்புடைய சம்போ செந்தில் மற்றும் மொட்டை கிருஷ்ணன் ஆகியோர் தலைமறைவாக உள்ள நிலையில், அவர்களை கைது செய்வதற்கான முழுமையான நடவடிக்கைகளை போலீசார் எடுக்கவில்லை" என்று கூறியிருந்தார்.
சிபிஐ-க்கு மாற்றம் செய்து உத்தரவு
இந்த வழக்கு நீதிபதி வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், விசாரணை நியாயமாக நடைபெற்றது என்று தெரிவிக்கப்பட்டது. மேலும், இது அரசியல் கொலை அல்ல என்றும், இந்த வழக்கில் விசாரணை முடிந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுவிட்டதால் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் கோரப்பட்டது.
மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிடுகையில், "கைது செய்யப்பட்டவர்களிடம் பெற்ற வாக்குமூலத்தின் அடிப்படையில் மட்டுமே போலீசார் அவசரக் கதியில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்" என்று வாதிடப்பட்டது.
வழக்கில் அனைத்து தரப்பினரின் வாதங்களையும் கேட்ட நீதிபதி, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார். இந்த நிலையில்தான் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி தொடர்ந்த மனுவில், நீதிமன்றம் வழக்கை சிபிஐக்கு மாற்றி தீர்ப்பளித்துள்ளது.












Click it and Unblock the Notifications