ஆம்ஸ்ட்ராங் படுகொலை.. போலீசாரால் தேடப்பட்டு வரும் அஞ்சலை பாஜகவில் இருந்து நீக்கம்!
சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழகத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பாஜகவின் அஞ்சலையை போலீசார் இப்போது தேடி வருகின்றனர். இந்தக் கொலை சம்பவத்தில் அவருக்குத் தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதற்கிடையே அஞ்சலையை கட்சியில் இருந்து நீக்குவதாகவும் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விடுவிப்பதாகவும் அக்கட்சி சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை 5ம் தேதி பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழகத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் புதிதாகக் கட்டப்பட்டு வரும் அவரது வீட்டின் அருகே வைத்து வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் மாநிலம் முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின.

ஆம்ஸ்ட்ராங் படுகொலை: ஆம்ஸ்ட்ராங் கொலையாளிகளைப் பிடிக்க போலீசார் தனிப்படைகளை அமைத்து தீவிரமாகத் தேடி வருகிறார்கள். இந்தச் சம்பவம் தொடர்பாக முதலில் ஆற்காடு சுரேஷ் தம்பி பொன்னை பாலு உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர். அதில் ரவுடி திருவேங்கடம் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
ஆனால், இந்த கொலை வழக்கு விசாரணை இந்த 11 பேருடன் நிற்கவில்லை. இதில் தொடர்ச்சியாகப் பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர். திமுக நிர்வாகி மகன் சதீஷ், அதிமுக நிர்வாகியாக இருந்த மலர்க்கொடி, அவரது உதவியாளர் ஹரிஹரன் எனப் பலரும் இந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையே ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பாஜகவின் அஞ்சலைக்கும் தொடர்பு இருப்பதாக போலீசார் சந்தேகித்துள்ளனர்.
அஞ்சலை: தலைமறைவாக இருக்கும் அஞ்சலையை பிடித்து விசாரிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே கட்சியின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்ததால் அஞ்சலையை கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விடுவிப்பதாக பாஜக மாநில துணைத் தலைவர் கரு நாகராஜன் அறிவித்துள்ளார்.
பாஜகவில் இருந்து நீக்கம்: இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "வட சென்னை மேற்கு மாவட்டத்தின் மாவட்ட துணைத் தலைவராக பணியாற்றி வந்த அஞ்சலை கட்சியின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்தது தெரியவந்ததால், மாநிலத் தலைமையின் அறிவுறுத்தலின்படி கட்சியின் அனைத்து பொறுப்புக்களில் இருந்தும் உடனடியாக விடுவிக்கப்படுகிறார். ஆகவே கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கட்சியின் சார்பாக எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த அஞ்சலைச் சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்தவர். இவர் முன்பு வடசென்னையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்தவர்.. கூலிப்படை தலைவன் ஆற்காடு சுரேஷின் காதலியான இவர், பின்னர் அவரையே திருமணம் செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இந்தச் சூழலில் தான் அவர் திடீரென பாஜகவில் ஐக்கியமானார். அங்கு அவர் வட சென்னை மேற்கு மாவட்டத்தின் மாவட்ட துணைத் தலைவராக நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications