நீதிபதி அனிதா சுமந்துக்கு எதிர்ப்பு.. ஆம்ஸ்ட்ராங் அவசர வழக்கில் ஐகோர்ட் நீதிபதி மாற்றம்! என்னாச்சு?
சென்னை: சென்னையில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் உடலை பெரம்பூரில் உள்ள பகுஜன் சமாஜ் கட்சியின் அலுவலகத்தில் புதைக்க அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று அவசரமாக விசாரிக்கப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த வழக்கை நீதிபதி அனிதா சுமந்த் விசாரிக்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர் மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதில் நீதிபதி பவானி சுப்பராயன் இன்று விசாரித்தார்.
மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங். இவர் சென்னை பெரம்பூரில் வசித்து வந்தார். இந்நிலையில் தான் நேற்று முன்தினம் மாலையில் வீட்டின் அருகே அவர் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது பைக்குகளில் வந்த கும்பல் ஆம்ஸ்ட்ராங்கை சூழ்ந்து சரமாரியாக வெட்டியது.

இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த ஆம்ஸ்ட்ராங் உயிருக்கு போராடினார். இதையடுத்து அவர் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்துவிட்டதாக அறிவித்தனர்.
ஆம்ஸ்ட்ராங்கின் இந்த படுகொலை என்பது பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னையில் நேற்று முன்தினம், நேற்று என்று அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கொலையாளிகளை கைது செய்து அவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். இதற்கிடையே தான் ஆம்ஸ்ட்ராங்கின் உடல் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வு செய்யப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
அயனாவரம் இல்லத்துக்கு ஆம்ஸ்ட்ராங்கின் உடல் கொண்டு செல்லப்பட்டது. அங்கு பலரும் இறுதி அஞ்சலி செலுத்தினர். அதன்பிறகு அவரது உடல் இன்று காலை பந்தர் கார்டன் பள்ளிக்கு எடுத்து செல்லபட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே தான் ஆம்ஸ்ட்ராங்கின் உடலை சென்னை பெரம்பூரில் உள்ள பகுஜன் சமாஜ் கட்சியின் அலுவலகத்தில் அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் மாநகராட்சியிடம் அனுமதி கோரி மனு வழங்கப்பட்டது. ஆனால் மாநகராட்சி சார்பில் பதில் அளிக்கப்படவில்லை.
இதற்கிடையே பெரம்பூரில் கட்சி அலுவலகம் இருக்கும் இடம் என்பது குடியிருப்பு பகுதியாகும். இதனால் அங்கு அவரது உடலை அடக்க செய்யவும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இதுதான் மாநகராட்சி மவுனம் காப்பதற்கு முக்கிய காரணம் என்று சொல்லப்படுகிறது. இத்தகைய சூழலில் தான் ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில் ‛‛ஆம்ஸ்ட்ராங்கின் உடலை பெரம்பூர் பகுஜன் சமாஜ் கட்சியின் அலுவலகத்தில் புதைக்க மாநகராட்சியிடம் அனுமதி கோரப்பட்டது. ஆனால் மாநகராட்சி எந்த பதிலும் அளிக்கவில்லை. இதானல் பகுஜன் சமாஜ் கட்சியின் அலுவலகத்தில் அவரது உடலை புதைக்க அனுமதிக்க வேண்டும்'' என கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க தலைமை நீதிபதி நேற்று அனுமதி அளித்தார். இந்த வழக்கு என்பது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அனிதா சுமந்த் முன்னிலையில் இன்று காலை 9 மணிக்கு காணொலி காட்சி மூலம் விசாரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அனிதா சுமந்த் General Miscellaneous வழக்குகளை விசாரித்து வரும் நிலையில் இந்த அவசர வழக்கும் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் அனிதா சுமந்த் விசாரிக்க பகுஜன் சமாஜ் கட்சியின் வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அதாவது ஆம்ஸ்ட்ராங்கின் உடலை பெரம்பூர் பகுஜன் சமாஜ் கட்சியின் அலுவலகத்தில் புதைக்க மாநகராட்சியிடம் அனுமதி கோரப்பட்டது. ஆனால் அவர்கள் பதிலளிக்கவில்லை. இதனால் மாநகராட்சி சார்ந்த வழக்குகளை விசாரிக்கும் நீதிபதி பவானி சுப்பராயன் தான் விசாரிக்க வேண்டும் என்று கூறினர். இந்த கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது. இதையடுத்து நீதிபதி அனிதா சுமந்துக்கு பதில் நீதிபதி பவானி சுப்பராயன் விசாரித்து உத்தரவு பிறப்பித்தார். அதன்படி குடியிருப்பு பகுதி என்பதாலும், குறுகிய இடம் என்பதாலும் பகுஜன் சமாஜ் கட்சியின் பெரம்பூர் அலுவலகத்தில் அடக்கம் செய்வதற்கு பதில் மாற்று இடத்தை தேர்வு செய்ய நீதிபதி பவானி சுப்பராயன் உத்தரவிட்டார்.
இதையடுத்து திருவள்ளூர் மாவட்டம் பொத்தூரில் உள்ள நிலத்தில் உடலை அடக்கம் செய்ய ஆம்ஸ்ட்ராங்கின் குடும்பத்தினர் ஒப்புக்கொண்டனர். இதற்கு தமிழக அரசும் அனுமதி வழங்கிய நிலையில் வழக்கு முடிவுக்கு வந்தது. மேலும் ஆம்ஸ்ட்ராங்கின் நினைவிடத்தை கட்சி அலுவலகத்தில் கட்ட விரும்பினால் அரசு அனுமதியுடன் அதனை செய்து கொள்ளலாம் எனவும் நீதிபதி பவானி சுப்பராயன் தனது உத்தரவில் குறிப்பிட்டார்.












Click it and Unblock the Notifications