“விடமாட்டோம் விடமாட்டோம்” விண்ணை முட்டும் கோஷம்! மக்கள் வெள்ளத்தில் மிதந்துசெல்லும் ஆம்ஸ்ட்ராங் உடல்
சென்னை: ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வல வாகனம், வழிநெடுக திரண்ட ஆயிரக்கணக்கான மக்களின் கண்ணீருக்கு மத்தியில் ஊர்ந்து செல்கிறது. வீரவணக்க கோஷம் விண்ணை முட்டி வருகிறது.
சென்னை பெரம்பூர் பகுதியில், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், அவர் வீட்டருகே மர்ம கும்பலால் அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த படுகொலை சம்பவத்தில் தொடர்புடைய ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு உள்ளிட்ட 8 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். மேலும் 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

பெரம்பூரில் உள்ள மாநகராட்சி பள்ளியில் ஆம்ஸ்ட்ராங் உடல் கட்சித் தொண்டர்கள், பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் உடலை பெரம்பூரில் உள்ள கட்சியின் அலுவலக வளாகத்தில் அடக்கம் செய்ய அனுமதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடியால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிமன்றம், செங்குன்றம் அருகே உள்ள பொத்தூரில் அடக்கம் செய்ய அனுமதி அளித்து உத்தரவிட்டது.
மேலும், பெரம்பூரில் உள்ள பகுஜன் சமாஜ் கட்சி அலுவலகத்தில் நினைவு மண்டபம் அமைத்துக் கொள்ளலாம் எனவும் குறிப்பிட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து பெரம்பூரில் இருந்து பொத்தூருக்கு ஆம்ஸ்ட்ராங் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது. பெரம்பூரில் இருந்து மூலக்கடை, மாதவரம் ரவுண்டானா வழியாக உடல் எடுத்துச் செல்லப்படுகிறது. அங்கு அவருக்கு இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டு நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
பெரம்பூரில் இருந்து 21 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள பொத்தூருக்கு ஆம்ஸ்ட்ராங் உடல் ஊர்வலமாக எடுத்துசெல்லப்படுகிறது. இறுதி ஊர்வலத்தில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், உறவினர்கள் என 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலத்தையொட்டி அந்த வழித்தடம் முழுவதும் 2 ஆயிரத்துக்கும் அதிகமான காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஆம்ஸ்ட்ராங்கின் சவப்பெட்டியில் 'ஜெய்பீம்', 'சமத்துவ தலைவர் ஆம்ஸ்ட்ராங்' என்ற வாசகங்கள் பொதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வல வாகனம், வழிநெடுக திரண்ட ஆயிரக்கணக்கான மக்களின் கண்ணீருக்கு மத்தியில் ஊர்ந்து செல்கிறது.
ஆம்ஸ்ட்ராங்குக்கு வீரவணக்கம், சமத்துவ தலைவருக்கு வீரவணக்கம், ஜெய்பீம் என்ற கோஷங்கள் விண்ணை முட்ட ஆம்ஸ்ட்ராங்கின் இறுதி ஊர்வல வாகனம் மக்கள் வெள்ளத்தில் மிதந்து வருகிறது. கூட்டம் அதிகமாக இருப்பதால், ஆம்ஸ்ட்ராங் உடலைச் சுமந்தபடி இறுதி ஊர்வல வாகனம் மெதுவாகச் சென்று வருகிறது.
இந்த இறுதி ஊர்வலத்தின்போது, "பாதுகாப்பில்லை.. பாதுகாப்பில்லை.. தலித் மக்களுக்கு பாதுகாப்பில்லை.. தலித் தலைவர்களுக்கு பாதுகாப்பில்லை.. விடமாட்டோம் விடமாட்டோம்.. கண்டிக்கிறோம்.. கண்டிக்கிறோம்.. ஸ்டாலின் அரசை கண்டிக்கிறோம் " என கோஷங்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications