கோலியை கைது செய்யனும்.. ட்விட்டரில் கதறும் ரோகித் ரசிகர்கள்! பின்னணியில் தமிழ்நாடு “கொலை” சம்பவம்
சென்னை: அரியலூரில் விராட் கோலி ரசிகருக்கும் ரோகித் ஷர்மா ரசிகருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் கோலி ரசிகர் ரோகித் ரசிகரை பேட்டால் அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கோலியை கைது செய்ய வேண்டும் என ரோகித் சர்மா ரசிகர்கள் ட்விட்டரில் ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகிறார்கள்.
அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் அருகே சிட்கோ தொழிற்பேட்டை தொழிற்பேட்டைக்கு அருகே திறந்தவெளியில் தலையில் வெட்டு காயத்துடன் ஆண் சடலம் ஒன்று கடந்த வியாழக்கிழமை கிடந்தது. இதனை பார்த்த மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உயிரிழந்த வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தனர்.
பிக் பாஸ் 6: பிக் பாஸ் வீட்டில் நடந்த ஐந்தாம் நாள் சம்பவங்கள்.. இன்னும் ட்ரெய்னிங் வேணும்..!!
விக்னேஷ் கொலை
அதில் இறந்து கிடந்தவர் பொய்யூர் கிராமத்தை சேர்ந்த புகழேந்தி என்பவரின் மகன் விக்னேஷ் என்பதும், இவர் சிங்கப்பூருக்கு செல்ல விசாவிற்காக காத்திருந்ததும் தெரியவந்தது. மேலும் கடந்த வியாழக்கிழமை இரவு அவரது செல்போன் ஒரு அழைப்பு வந்ததாகவும் அதன் பின்னர் அவர் வீட்டை விட்டு வெளியே சென்றது விசாரணையில் தெரியவந்து இருக்கிறது.
கோலி - ரோகித் ரசிகர்கள்
விக்னேஷ் இறந்து கிடந்த இடத்தில் மது பாட்டில்கள் கிடந்துள்ளன. இதனால் மது போதையில் ஏற்பட்ட தகராறில் வெட்டி படுகொலை செய்யப்பட்டு இருக்கலாம் என போலீசார் கூறினர். இதுதொடர்பாக போலீசார் தீவிரமாக விசாரிக்க தொடங்கினர். இதில் விக்னேசை கொலை செய்ததாக அவரது நண்பர் தர்மராஜ் கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடம் நடத்திய விசாரணையில் விராட் கோலி - ரோகித் சர்மா தொடர்பான விவாதத்தால் கொலை நடந்தது உறுதியாகியுள்ளது.
ஐபிஎல் தோல்வி
ஐபிஎல்-ல் மும்பை - பெங்களூர் அணிகள் மோதிய போது, பெங்களூர் அணி தோல்வியடைந்தது. அப்போது நடந்த மது விருந்தில், பேச்சாற்றல் குறைபாடுடைய தர்மராஜை பார்த்து, உன்னைபோல் தான் ஆர்சிபி அணி உள்ளது என விக்னேஷ் கிண்டல் செய்துள்ளார். இதனால் ஆத்திரத்தில் இருந்த தர்மராஜிடம் மீண்டும் பெங்களூருவை கிண்டல் செய்ததால் பேட்டால் அடித்து கொன்றுள்ளார்.
ட்விட்டர் டிரெண்ட்
இந்த விவகாரம் தமிழ்நாடு மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதனை அடிப்படையாக வைத்து ட்விட்டரில் ரோகித் சர்மா ரசிகர்கள் #ArrestKohli என்ற ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகிறார்கள். இந்த ஹேஷ்டேக்கை பகிர்ந்து இரு வீரர்களின் ரசிகர்களும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். குடிபோதையில் இருவர் செய்துகொண்ட தவறுக்கு அணியில் ஒற்றுமையாக விளையாடும் 2 வீரர்கள் என்ன செய்வார்கள் என்ற கேள்வியை பலர் எழுப்பி வருகிறார்கள்.