திமுக இடத்திற்கு வந்த தவெக.. ஓட்டுகளை பிரித்த தவெக.. தமிழக பாஜகவை மறுசீரமைக்க அமித் ஷா புது கணக்கு
சென்னை: அமித் ஷாவின் தமிழக அரசியல் வியூகங்களை த.வெ.க.வின் அதிரடி தேர்தல் முடிவுகள் முற்றிலும் தலைகீழாக மாற்றியமைத்து விட்டதாம்.. இப்படியொரு அசுர வெற்றியை பாஜக மேலிடம் கொஞ்சமும் எதிர்பார்க்கவும் இல்லையாம்.. இதனால் நிலவி வரும் தற்போதைய அரசியல் சூழலில் அவசரப்பட்டு எந்தவொரு முடிவையும் எடுக்காமல் சில மாதங்களுக்கு அமைதியாக இருக்க டெல்லி தலைமை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.. என்ன நடக்கிறது பாஜக மேலிடத்தில்?
மத்தியில் கடந்த 2014ல் பாஜக ஆட்சி அமைந்தது முதல் தமிழகத்தில் கட்சியை வலுப்படுத்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பல்வேறு தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.. ஆனாலும் அந்த முயற்சிகள் பெரிய பலனைத் தரவில்லை.

பாஜக தலைவர் அண்ணாமலை
கடந்த 2021 சட்டசபை தேர்தலில் அதிமுக, பாஜக கூட்டணி தோல்வி அடைந்த பிறகு, தமிழக பா.ஜ.க. தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டார்.. அவர் கடந்த 2024 லோக்சபா தேர்தலில் பா.ஜ.க. தலைமையில் தனி அணி ஒன்றை அமைத்துக் களமிறக்கினார்.. அந்தத் தேர்தலில் பாஜகவுக்கு 11 சதவீதமும், பா.ஜ.க. கூட்டணிக்கு 18 சதவீதமும் ஓட்டுகள் கிடைத்தன.. ஆனால் இந்த தனி அணி வியூகம் திமுக கூட்டணிக்கு சாதகமாக மாறி, தமிழகத்தின் 39 இடங்களையும் அக்கூட்டணி கைப்பற்றியது..
இதையடுத்து, அதிமுகவுடன் கூட்டணி வைத்திருந்தால் குறைந்தது 20 இடங்களில் வெற்றி பெற்றிருக்கலாம் என்று அதிமுக, பாஜக தரப்பில் பலரும் அமித் ஷாவிடம் சொன்னார்களாம்.. இதனால் 2026 சட்டசபை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க டெல்லி தலைமை முடிவு செய்தது.
நயினார் நாகேந்திரன் நியமனம்
எனினும், அமித் ஷாவின் இந்த முன்கூட்டிய அரசியல் திட்டங்களை, தமிழக வெற்றிக் கழகத்தின் அதிரடி வருகை சிதைத்து விட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.. காரணம், சமீபத்தில் நடந்து முடிந்துள்ள தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் குறித்து, பா.ஜ.க. முக்கிய தலைவர்களுடன் அமித் ஷா தீவிரமாக விவாதித்துள்ளார்.
அப்போது தமிழக தேர்தல் முடிவு அமித் ஷாவை முற்றிலும் ஆச்சரியப்பட வைத்து விட்டதாம்.. ஆரம்பத்தில் அதிமுக கூட்டணிதான் வெற்றி பெறும் என்று அமித்ஷா நினைத்திருந்தாராம்.. ஆனால் தேர்தல் நெருங்கிய நேரத்தில், த.வெ.க. பெரிய அளவில் ஓட்டுகளைப் பெறும் என்பது தெரியவந்துள்ளது.. இருந்தாலும் மாநிலத்தில் ஆட்சி அமைக்கும் அளவுக்கு அக்கட்சி தனித்து வெல்லும் என அவர் நினைக்கவில்லையாம்.
சிறுபான்மையினர் ஓட்டுக்கள்
இதையடுத்து, முக்கிய தலைவர்கள் அமித்ஷாவுடன் விவாதிக்கும்போது, "கிறிஸ்துவர்களில் 80 சதவீதம், முஸ்லிம்களில் 60 சதவீதம் என மொத்தமாக தவெகவுக்கு வாக்களித்துள்ளதால், திமுக படுதோல்வியை சந்தித்துள்ளது.. இனி சிறுபான்மையினர் ஓட்டுகள் திமுகவுக்கு திரும்புவது சந்தேகம்தான். அதாவது திமுக இடத்தை தவெக பிடித்துள்ளது.
அதிமுகவை பொறுத்தவரை திணறி கொண்டிருக்கிறது.. அதனால் சிறுபான்மையினர் ஓட்டுக்களை அதிமுகவும் பிடிக்குமா என்பதும் சந்தேகம்தான்.. தமிழகத்தில் பாஜக வளர்வதற்கான சூழல் உருவாகியுள்ளது" என்றெல்லாம் அமித்ஷாவிடம் தெரிவித்தார்களாம்.
திமுக, அதிமுக அதிருப்தி
அனைத்தையும் கவனமாக கேட்டு கொண்ட அமித்ஷா, இப்போதைக்கு அமைதி காப்போம், நடப்பதை சில மாதங்களுக்கு வேடிக்கை பார்ப்போம்.. அதன்பிறகு பாஜகவை மறு சீரமைப்பது உள்ளிட்ட, எதிர்கால திட்டங்களை வகுப்போம்" என்று தெரிவித்தாராம்...
மேற்கண்ட இந்த தகவல்தான் அரசியல் களத்தில் பரபரப்பை தந்து வருகிறது.. பாஜக தலைமையின் தற்போதைய முடிவும்,அமித் ஷாவின் பொறுத்திருந்து வேடிக்கை பார்க்கும் முடிவும், மிகவும் சாணக்கியத்தனம் வாய்ந்த ஒரு தற்காலிக பின்வாங்கலாகவே கருதப்படுகிறது.
திமுகவின் வாக்கு வங்கி சரிந்துள்ள நிலையிலும், அதிமுக பலவீனமாக உள்ள சூழலிலும், அவசரப்பட்டு அடுத்த கட்ட நகர்வை எடுக்காமல் கள நிலவரங்களை உன்னிப்பாகக் கவனிக்க அமித் ஷா திட்டமிட்டுள்ளதும் அறிய முடிகிறது.. தவெகவின் அடுத்தகட்ட நகர்வுகள் மற்றும் அ.தி.மு.க.வின் எதிர்கால நிலையை முழுமையாகப் பொறுத்திருந்து பார்த்துவிட்டு, அதற்கேற்ப தமிழக பா.ஜ.க.வை அடிமட்ட அளவில் இருந்து மறுசீரமைப்பு செய்து நீண்ட கால நோக்கில் களமிறங்கவே டெல்லி தலைமை இந்த அமைதி வியூகத்தைக் கையில் எடுத்துள்ளது.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!












Click it and Unblock the Notifications