செயற்கைத்தனமாக காட்சியளிக்கும் த.வெ.க. தலைவர் விஜய்.. 'ஆந்திரா ஜெகன்' ஸ்டைல் அப்படியே காப்பி!
சென்னை: தேர்தல் அரசியல் களத்தில் சுவிட்ச் போட்டால் இயக்கப்படும் இயந்திரங்களைப் போல அரசியல் தலைவர்கள் உருமாறி வருவது பட்டவர்த்தமான செயற்கைத்தனமாகவே தெரிகிறது. ஆந்திரா அரசியலில் பெரும் புயலை கிளப்பி அதிகாரத்தைக் கைப்பற்றிய முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் பாணியை அப்படியே தமிழ்நாட்டில் பின்பற்றுகிறார் நடிகர் விஜய். இன்றைய மாமல்லபுரம் நிகழ்ச்சியிலும் இது அப்பட்டமாக வெளிப்பட்டது.
மிட்டா மிராசுகள், பட்டாடை ஜமீன்கள், பங்களா முதலாளிகள் பிடியில் இருந்த அரசியல் களத்தை சாமானிய குப்பனுக்கும் சுப்பனுக்கும் உரியதாக திறந்துவிட்டது திராவிடர் பேரியக்கம். தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கம் தொடங்கி நீதிக்கட்சி, திராவிடர் கழகம், திமுக, அதிமுக என 100 ஆண்டுகளை தாண்டி தொடருகிறது அந்த திராவிடர் பேரியக்கத்தின் அரசியல்.

மாடமாளிகைகளில் கூடி களிப்புறும் நேரங்களில் பேசப்பட்ட அரசியலை சலூன் கடைகளிலும் தேநீர் கடைகளிலும் உரையாடக் கூடிய களத்தை அமைத்து தந்தது திராவிடர் இயக்கம்,. இந்த தமிழ்நிலத்தின் முதல்வர்களாக திராவிடர் இயக்கத்தால் பதவி வகித்த போது இவ்வளவு எளிய மனிதர்களாக இவ்வளவு பெரிய நாற்காலியில் அமருவது என விக்கித்துப் போனவர்கள் உண்டு.
ஆனால் இப்போது 'தேர்தல் வியூக' வல்லுநர்கள் என்கிற புதிய அரசியல் இயந்திரங்களின் கடிவாளத்தில் சிக்கிக் கொண்டிருக்கிறது ஒட்டுமொத்த அரசியல் களம். குஜராத்தில் நரேந்திர மோடியை அசைக்க முடியாத முதல்வராக்கியது முதல் தேசத்தின் பிரதமராக்கியது வரை... ஆந்திராவில் பெரும் புயலென வீசி ஆட்சியை கைப்பற்றிய ஜெகன் மோகன் ரெட்டி தொடங்கி மேற்கு வங்கத்து மமதா வெற்றி வரை தேர்தல் வியூக வல்லுநர்களின் கொடிதான் கோலோச்சுகிறது..
தற்போது தமிழ்நாட்டு அரசியல் களத்தில் இறங்கியிருக்கும் நடிகர் விஜய்யும் இதற்கு விதிவிலக்கு அல்லவே. அதுவும் அப்பட்டமாக ஆந்திராவின் ஜெகன் மோகன் ரெட்டிக்கு வியூக வல்லுநர்கள் என்னவெல்லாம் பாடத்தை கற்றுத் தந்தனரோ அதை அப்படியே அச்சு பிசகாமல் இப்போதும் பின்பற்றி வருகிறார் நடிகர் விஜய்.
விக்கிரவாண்டியில் நடிகர் விஜய் நடத்திய மாநாட்டின் அத்தனை நிகழ்ச்சியும் பட்டவர்த்தமானகவே யதார்த்தமாகவே இல்லாமல் வியூக வல்லுநர்களின் 'கட்டளைப்படியா'னதாகவே இருந்தது. இப்போது மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது ஆண்டு தொடக்க விழாவும் அப்படித்தான் இருக்கிறது. அதுவும் தேர்தல் வியூக வல்லுநர்கள் மேடையில் புடைசூழ விஜய் அமர்ந்திருக்க அந்த நிகழ்ச்சி அப்படித்தான் இருக்கும் என்பதில் சந்தேகமும் இல்லை. அதற்காக ஆந்திரா ஜெகன் அணிந்திருந்த அதே கலர் பேண்ட்டை விக்கிரவாண்டி முதல் மாமல்லபுரம் வரை 'கழற்றிவிடாமல்' விஜய் அணிந்திருப்பது எல்லாம் எந்த வகையில் சேர்ப்பது என்கிற கேள்வியும் எழாமல் இல்லையே என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்












Click it and Unblock the Notifications