ஜெ.வுக்கு நடந்தது என்ன?.. பெருமாள்சாமியை விசாரிக்க கேள்விகளுடன் காத்திருக்கும் ஆறுமுகசாமி ஆணையம்!
சென்னை: ஜெயலலிதாவின் பாதுகாப்பு அதிகாரியாக இருந்த பெருமாள்சாமி நாளை விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பி உள்ளது.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து ஆறுமுகசாமி விசாரணை நடத்தி வருகிறது. தமிழக அரசு உயர்துறை அதிகாரிகள், அப்போலோ மருத்துவக்குழுவினர் என ஆணையத்தின் விசாரணை நீண்டு கொண்டே செல்கிறது.
ஆறுமுகசாமி ஆணையம், ஜெயலலிதாவின் பாதுகாப்பு அதிகாரியாக இருந்த பெருமாள்சாமியை விசாரிக்க ஏற்கெனவே சம்மன் அனுப்பியது. அச்சமயத்தில் அவர் முதலமைச்சரின் பாதுகாப்பு பணியில் இருந்ததால், வேறொரு நாளில் ஆஜராக அனுமதி கோரியிருந்தார்.
இந்நிலையில், நாளை அவர் ஆஜராக ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செப்டம்பர் 22ம் தேதி நடந்த நிகழ்வுகள் குறித்தும், ஜெயலலிதாவின் பாதுகாப்பு அதிகாரிகள் கூறிதான் சிசிடிவி கேமராக்களை அணைத்தோம் என்ற அப்போலோ மருத்துவமனையின் விளக்கம் குறித்தும் பெருமாள்சாமியிடம் விசாரிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
மேலும், இந்த வாரத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அல்லது செயலாளர் ராதாகிருஷ்ணனுக்கு சம்மன் அனுப்பவும் ஆணையம் திட்டம் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.