ஆரியர்கள் அன்னியர்கள்.. மோடிக்கு முதுகெலும்பு இல்லையே.. லோக்சபாவில் வெடித்த ஆ.ராசா
சென்னை: முகலாயர்கள் வெளியில் இருந்து வந்தவர்கள் எனில், ஆரியர்கள் மட்டும் யார்? அவர்களும் வெளியில் இருந்து வந்தவர்கள்தான். இதனால்தான் இந்திய நிலத்தை உரிமைக் கொண்டாடும் அருகதை கொண்டவர்கள் திராவிடர்கள் மட்டும்தான் என்றார் அம்பேத்கர் என்று லோக்சபாவில் திமுக எம்பி ஆ.ராசா ஆவேசமாக பேசினார்.
லோக்சபாவில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் ஆ.ராசா எம்பி பேசியதாவது: மத்திய அரசு தனது கருத்துகளை குடியரசுத் தலைவர், சபாநாயகர் உரை மூலம் திணிக்க முயல்கிறது. பாசிச கொள்கைகளையே ஒன்றிய அரசு கடைபிடிக்கிறது. பாஜக ஆட்சியாளர்களுக்கு அவசரநிலை குறித்து பேச எந்த உரிமை கிடையாது. தமிழ்நாட்டு மக்கள் பாசிசத்துக்கு எதிராக 2வது முறையாக வாக்களித்துள்ளார்கள்.

பெரும்பான்மை அரசு அல்ல: 300க்கும் மேற்பட்ட இடங்களை பிடிப்போம் என்று மோடி கூறினார். ஆனால் மக்கள் அதனை நிராகரித்துள்ளார்கள். 240 இடங்களை மட்டும் வைத்துள்ள பாஜக ஆட்சியை எப்படி பெரும்பான்மை அரசு என்று ஜனாதிபதி உரை மூலம் கூற முடியும்? பெரும்பான்மை அரசு என்று கூறுவதே பொய்யானது.
திராவிட மண்: நீட்டுக்கு எதிரான தீர்மானத்தை தமிழ்நாட்டிலிருந்து அனுப்பினோம். இன்னும் ஏற்கப்படவில்லை. நீங்கள் தமிழ்நாட்டை மதிக்கவில்லை. எங்களை குப்பைத் தொட்டி போல் நடத்துகிறீர்கள். அதனால்தான் தமிழ்நாடு 40 தொகுதிகளிலும் உங்களை தோற்கடித்து பாடம் கற்பித்துள்ளது. திராவிட மண் பாசிசத்துக்கு தக்க பாடம் கற்பித்துவிட்டது.
இந்து மத பிரிவினை: உலகம் முழுவதும் தொழில் பிரிவினை இருக்கிறது. இந்தியாவில் மட்டும்தான் தொழிலாளர் பிரிவினை இருக்கிறது. இதைத்தான் பெரியாரும் அம்பேத்கரும் சொல்கின்றனர். இந்தப் பிரிவினையைத்தான் இந்து மதம் என்கிற பெயரில் நீங்கள் தொடர விரும்புகிறீர்கள்.
அரசு வேலை பறிக்கவே விற்பனை: பொதுத்துறையில் லாபம் இல்லை என எல்லாவற்றையும் அழித்துக் கொண்டிருக்கிறீர்கள். பிற்படுத்தப்பட்டோருக்கும் பட்டியல் சாதியினருக்கும் எப்படி அரசு வேலை கிடைக்கும்? இட ஒதுக்கீட்டை மறைமுகமாக அழிக்கவே நீங்கள் இதை செய்கிறீர்கள். ஏனெனில் நீங்கள் உயர்சாதிகள் நடத்தும் இந்து ராஷ்டிரத்தை கட்டமைக்க விரும்புகிறீர்கள்.
நீட் மோசடி: நீட் தேர்வு மூலம் Majority, Management, Payment என்று மூன்று பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதனால்தான் நீட் தேர்வு முறையை எதிர்க்கிறோம். 8 கோடி மக்களின் பிரதிநிதியாக உள்ள தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பட்ட நீட் விலக்கு தீர்மானத்தை ஒன்றிய அரசு கிடப்பில் போட்டுள்ளது.
ஆரியர்கள் அன்னியர்கள்: முகலாயர்கள் வெளியில் இருந்து வந்தவர்கள்- அன்னியர்கள் எனில், ஆரியர்கள் மட்டும் யார்? அவர்களும் வெளியில் இருந்து வந்தவர்கள்தான்.. அன்னியர்கள். இதனால்தான் இந்திய நிலத்தை உரிமைக் கொண்டாடும் அருகதை கொண்டவர்கள் திராவிடர்கள் மட்டும்தான் என்றார் அம்பேத்கர்.
பெரியாரின் திராவிட மண்: பெரியாரின் திராவிட மண்ணில் இருந்து இங்கு வந்துள்ளேன். தமிழ்நாட்டில் அனைவரும் சமமாக வாழவும், உயர்கல்வி பெறவும் பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோரே காரணம். எனவே திராவிட கொள்கைகள் ஏன் நாட்டுக்கு தேவை என்பதை பாஜகவினர் உணர வேண்டும்.
மோடிக்கு முதுகெலும்பு இல்லை: அதானி மோசடி விவகாரத்தில் பதில் சொல்ல பிரதமர் மோடிக்கு முதுகெலும்பு இல்லை. எதிர்க்கட்சிகள் 15 நாட்கள் கருப்பு சட்டை அணிந்து நாடாளுமன்றம் வந்து எதிர்ப்பை தெரிவித்தும், இதுவரை எந்த பதிலும் இல்லை. முறைகேடுகளுக்கு பதில் அளிக்காமல் மௌனமாக இருக்கும் அரசு இதுவரை நான் பார்த்ததில்லை. இவ்வாறு ஆ.ராசா பேசினார்.
ஜாதிவாரி கணக்கெடுப்பு: இந்துக்கள் மீது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுக்கு அக்கறை இருந்தால் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும்.இவ்வாறு ஆ.ராசா பேசினார்.












Click it and Unblock the Notifications