"மாரி" யால் மக்கள் தவிக்கிறாங்க.. முதல்வரோ இயக்குநர் "மாரி"யை பாராட்டுகிறார்.. தமிழிசை அட்டாக்
சென்னை: "மாரி"யால் மக்கள் தவிக்கிறார்கள்.. ஆனால் முதல்வர் ஸ்டாலினோ இயக்குந ர் "மாரி"யை பாராட்டுகிறார் என தமிழிசை சவுந்தரராஜன் விமர்சனம் செய்துள்ளார். நேற்று தமிழக முதல்வர் ஸ்டாலின் இயக்குந ர் பைசன் திரைப்படத்தை பார்த்துவிட்டு இந்த படம் மாரி செல்வராஜின் திரைமகுடத்தில் மற்றுமொரு வைரக்கல் என்று பாராட்டி ட்வீட் பதிவிட்டு இருந்தார். இதற்கு தமிழிசை விமர்சனம் செய்து ட்வீட் பதிவிட்டுள்ளார்.
நடிகர் துருவ் விக்ரம் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் பா ரஞ்சித் தயாரிப்பில் தீபாவளி விருந்தாக வெளிவந்த திரைப்படம் பைசன். திரையரங்குகளில் வெற்றிகரமாக இந்த படம் ஓடி வருகிறது. இந்த நிலையில் நேற்று இரவு தமிழக முதல்வர் ஸ்டாலின் பைசன் திரைப்படத்தை பார்த்து ரசித்தார்.

மேலும் இந்த படம் மாரி செல்வராஜின் திரைமகுடத்தில் மற்றுமொரு வைரக்கல் என்று பாராட்டி ட்வீட் பதிவிட்டு இருந்தார். விவசாயிகள் மழையால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் ஸ்டாலின் திரைப்படம் பார்த்து ரசிப்பதாகவும், மக்கள் பற்றி கவலைப்படவில்லை எனவும் தமிழக முன்னாள் பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விமர்சனம் செய்துள்ளார். தமிழிசை சவுந்தரராஜன் எப்போதும் கவிதை வடிவில் விமர்சனம் செய்வார். அந்த வகையில் தான் தற்போதும், "மாரி"யால் மக்கள் தவிக்கிறார்கள்.. ஆனால் முதல்வர் ஸ்டாலினோ இயக்குந ர் "மாரி"யை பாராட்டுகிறார் என தமிழிசை சவுந்தரராஜன் விமர்சனம் செய்துள்ளார்.
இது தொடர்பாக தமிழிசை சவுந்தரராஜன் தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:- தமிழக முழுவதும்... தரையில் மழை எனும் ""மாரி" யால் பாதிக்கப்பட்டு செய்வதறியாது கைகளை பிசைந்து கொண்டிருக்கும் பொழுது முதல்வர்.. அவர்களை சென்று பார்க்காமல் திரையில்.. பார்த்ததை மகிழ்ந்து இயக்குனர் "மாரி"யின் கைகளைப் பற்றிக் கொண்டிருக்கிறார்...
மை சன்னை(my son).. துணை முதல்வர் ஆக்கிவிட்டேன்.. இனிமேல் விவசாயிகளின் சன்(son) களை பற்றிகளைப் பற்றி கவலைப்பட வேண்டாம்.. பைசன் (Bison).. பார்த்தால் போதும் என மகிழ்ந்திருக்கிறார் முதல்வர்... விளையாட்டு ஊக்கப்படுத்தப்பட வேண்டியதுதான்... ஆனால் பொது மக்களின் வாழ்க்கையை விளையாட்டாக எடுத்துக் கொள்ளக் கூடாது முதலமைச்சர் அவர்களே..
மக்கள் "மாரி" யில் நனைந்து இயங்க முடியாமல் இருக்கும் பொழுது இயக்குனர் "மாரி"யை பாராட்டு மழையில் நனைய வைப்பதற்கு காலம் இது இல்லை முதல்வர் அவர்களே... இது மழை காலம், பிழைக்க முடியுமா என மக்கள் தவித்துக் கொண்டிருக்கிற நேரத்தில்.. பிழை செய்து கொண்டிருக்கிறீர்கள் முதல்வர் அவர்களே.. 2026 இதற்கெல்லாம் பதில் சொல்லும்.. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
முன்னதாக ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:- "தன் திறமையை மட்டுமே நம்பி, கிராமத்தில் இருந்து சாதிக்கக் கிளம்பிய ஓர் இளைஞன், கபடிக் கோட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் சந்திக்கும் போராட்டங்களை எதிர்கொண்டு வெற்றி பெற்ற கதையை மிகச் சிறப்பான திரை அனுபவமாக மாற்றியுள்ளார் இயக்குநர் மாரி செல்வராஜ்.
அவரது ஒவ்வொரு படத்தையும் நான் உன்னிப்பாகக் கவனித்து வருகிறேன். ஒவ்வொன்றும் ஒரு 'sharp message'-ஐயும் தாக்கத்தையும் நம் மனங்களில் பதிக்கத் தவறியதே இல்லை. அவ்வகையில் விளையாட்டுத் துறையை மையமாக வைத்து, இளைஞர்கள் கைக்கொள்ள வேண்டிய பாதையை, அரசியலை மிக முதிர்ச்சியுடன் காட்டியிருக்கிறார் மாரி செல்வராஜ் அவர்கள்.
சகோதரர் மாரியின் திரைமொழியும், கலைநேர்த்தியும், மேலும் மேலும் மேம்பட்டு வருவதற்கு எடுத்துக்காட்டாக 'பைசன்' மிளிர்கிறது. இத்திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி, மாரியின் திரைக்கதைக்கு உயிரூட்டியுள்ள துருவ் விக்ரம், பசுபதி, அனுபமா, ரஜிஷா உள்ளிட்ட நடிகர்கள், பின்னணியில் உழைத்த தொழில்நுட்பக் கலைஞர்கள் என அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த பாராட்டுகள்! இதுபோல மேலும் பல படைப்புகளைத் தமிழ்த் திரையுலகுக்கு வழங்க மாரி செல்வராஜ் அவர்களுக்கு எனது வாழ்த்துகள்!" என்று கூறியிருந்தார்.












Click it and Unblock the Notifications