ஆர்.கே.நகர் தொகுதியில் அனல் பறக்கும் போட்டி.. வாக்குறுதிகளை அள்ளி வீசி களமிறங்கிய தவெக வேட்பாளர்!
சென்னை: தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வருகிறது. வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியுள்ள நிலையில், தலைநகர் சென்னையில் உள்ள ஆர்.கே.நகர் தொகுதி களம் பரபரத்துக் கிடக்கிறது. திமுகவில் சிட்டிங் எம்.எல்.ஏ ஜெ.ஜெ.எபினேசர், அதிமுகவில் ஆர்.எஸ். ராஜேஷ், தவெகவில் ஜேப்பியார் குழும தலைவர் மரிய வில்சன் என வரிசைகட்டி நிற்பதால் ஆர்.கே.நகரில் கடும் போட்டி நிலவுவதாகத் தெரிகிறது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் வெற்றி பெற்ற தொகுதி என்பதால் ஸ்டார் தொகுதியாகப் பார்க்கப்படுவது ஆர்.கே.நகர். இந்த முறையும் முக்கிய கட்சிகள் சார்பில் பலமான முகங்கள் களமிறங்குவதால் கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

2015ல் நடைபெற்ற ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்டு வென்றார் ஜெயலலிதா. அதைத்தொடர்ந்து, 2016 சட்டசபை பொதுத் தேர்தலிலும் ஆர்.கே.நகரில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் ஜெயலலிதா. ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து நடைபெற்ற ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன், சுயேட்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார்.
கடந்த 2021 சட்டசபை தேர்தலில் திமுக சார்பில் ஜே.ஜே.எபினேசர், அதிமுகவின் ஆர்.எஸ்.ராஜேஷ் போட்டியிட்டனர். இதில் சுமார் 42 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் திமுகவின் எபினேசர். 1977 ஆம் ஆண்டு முதல் ஆர்.கே.நகர் தொகுதியில் அதிமுக 7 முறையும், திமுக, காங்கிரஸ் தலா 2 முறையும் வெற்றி பெற்றுள்ளன.
இந்நிலையில் இந்த முறை ஆர்.கே.நகரில் அதிமுக சார்பில் வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ், திமுக சார்பில் சிட்டிங் எம்.எல்.ஏவும் திமுக இளைஞரணி மாவட்ட அமைப்பாளருமான எபினேசர், தவெக சார்பில் ஜேப்பியார் கல்வி நிறுவனங்களின் தலைவர் மரிய வில்சன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
ஆர்.எஸ்.ராஜேஷ் அதிமுக மாவட்ட செயலாளராக இருந்து, தொகுதிக்குள் பல்வேறு களப் பணிகளை செய்திருக்கிறார். இது இந்த முறை தனக்கு உதவும் என்ற நம்பிக்கையோடு களமிறங்குகிறார். திமுக எம்.எல்.ஏ எபினேசர், தொகுதிக்குள் நன்கு பரிச்சயமானவராகத் திகழ்கிறார். இளைஞரணி நிர்வாகி என்பதால், இவர் உதயநிதியின் சாய்ஸ் என்பதும் பிளஸ்.
தவெக சார்பாக களமிறங்கி இருக்கும் மரிய வில்சன், ஏராளமான வாக்குறுதிகளை அளித்துள்ளார். தான் வெற்றி பெற்றால் ஆண்டுக்கு 100 மாணவர்களுக்கு இலவச கல்வியும், முதியோருக்கு வீடு தேடி ரேஷனும் கொடுப்பேன். தொகுதியில் ஓராண்டுக்கு கணவரை இழந்த 25 பெண்களின் குழந்தைகளுக்கு இலவச திருமணம் செய்து வைப்பேன். ஆண்டுக்கு 25 பேரை ஹஜ் மற்றும் ஜெருசலேம் பயணத்துக்கு அனுப்பி வைப்பேன் என வாக்குறுதிகளை வழங்கியுள்ளார்.
அடுத்த 15 ஆண்டுகளில் இந்தத் தொகுதியிலிருந்து எக்கச்சக்க கலெக்டர்களும் மருத்துவர்களும் வர வேண்டும். உங்களின் பிரச்னைகளையெல்லாம் தீர்ப்பேன் என ஆர்.கே.நகர் மக்களுக்கு ஏராளமான வாக்குறுதிகளை அளித்துள்ளார். எனவே மூன்று கட்சிகளுக்கும் இடையே கடினமான போட்டி ஏற்பட்டுள்ளது. சென்னையில் கொளத்தூர், சேப்பாக்கம், பெரம்பூர் போல ஆர்கே நகரும் முக்கியமாக கவனிக்கப்படும் தொகுதி ஆகியிருக்கிறது.












Click it and Unblock the Notifications