நாடாளும் யோகம்... அன்றே ஜோதிடர் சொன்னார்.. பெண் கொடுத்தோம்.. துர்கா ஸ்டாலின் தம்பி சுவாரஸ்யம்
சென்னை: இந்த ஜாதகத்திற்கு அரசனுக்கு உரிய அத்தனை தகுதிகளும் உள்ளது என்று ஜோதிடர் கூறினார் நாடாளும் தகுதி உள்ளது என்று சொன்னதால்தான் அக்காவை பெண் கொடுத்தோம் என்று முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலினின் தம்பி கூறியுள்ளார் ஜெய.ராஜ மூர்த்தி. அவர் உழைப்பு இன்றைக்கு அவரை முதல்வராக்கியிருக்கிறது என்றும் ஜெய ராஜமூர்த்தி தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்க்கா ஸ்டானின். அவருடைய தம்பியும் மருத்துவருமான ஜெய. ராஜ மூர்த்தி கவிஞர், எழுத்தாளர், மருத்துவர் என பன்முக தன்மை கொண்டவர். தற்போது ஈஎஸ்ஐ இயக்குநராகவும் உள்ளார். இவர் பெரியாரும் வள்ளலாரும் என்ற ஒரு புத்தகதை எழுதி உள்ளார்.

ஜெய.ராஜ மூர்த்தி செய்தி சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் பல சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
பெரியாரும் வள்ளலாரும் முற்போக்கு சிந்தனையாளர்கள். சமத்துவத்தை சமரச நிலையை கொண்டுவர பாடுபட்டவர். அன்பும் இருக்க வேண்டும் அறிவும் இருக்கவும் வேண்டும் போதித்தவர்.
பெரியாரின் தாக்கம் கலைஞருக்கு இருந்தது. குடியரசு பத்திரிக்கையில் பணி செய்தவர். நாத்திகவாதி ஆத்திவாதி என்று பார்ப்பதை விட பகுத்தறிவாளர்கள் சிந்தனையாளர்கள் என்று சொல்லலாம். கடவுளை யாராலும் கண்ணால் காட்ட முடியாது. இல்லை என்று சொன்னாலும் தவறில்லை இருக்கு என்று சொன்னாலும் தவறில்லை.
அவர்களுக்கு இறை நம்பிக்கை இல்லாமல் இருந்தாலும் அக்காவிற்கு கடவுள் நம்பிக்கை அதிகம். சிறுவயதில் இருந்தே கோவிலுக்கு போவது. குல தெய்வ வழிபாடு, திருப்பதிக்கு போவங்க அது மட்டுமல்ல வேளாங்கண்ணிக்கும் நாகூருக்கும் செல்வார்கள் என்று கூறினார். இந்து கோவில்களுக்கு மட்டுமல்ல பிற மதங்களின் மீதும் நம்பிக்கையும் ஈடுபாடும் கொண்டிருக்கின்றனர். அது அவர்களின் சுதந்திரம். பக்தி என்பது தனிப்பட்ட சுதந்திரம் என்பதால் அதில் யாரும் தலையிடுவதில்லை. கோவிலுக்கு போகாதே என்று யாரும் சொல்வதில்லை.
எனக்கும் முதல்வருக்கும் இடையே நிறைய வயது வேறுபாடு உள்ளது. நான் ஆறாவது படிக்கும் போது அக்காவிற்கு திருமணம் நடந்தது. மிக உயர்ந்த இடத்தில் வைத்து பார்க்கிறோம். தமிழக முதல்வர் வீட்டு சம்பந்தம் வரும் என்று பார்க்கவில்லை. மிகப்பெரிய அரசியல் தலைவர்கள் திரை உலக பிரபலங்கள் வந்தனர். எனக்கு பிரமிப்பாக இருந்தது. காமராஜரின் காலடியில்தான் நான் அமர்ந்திருந்தேன்.
நல்லதொரு குடும்பம்.. வாழ்க்கை எல்லாமே நன்றாக போய்க்கொண்டிருக்கிறது. இதற்கு எல்லாமே காரணம் எங்கள் வீட்டு மூத்த மாப்பிள்ளைதான் என்று கூறினார்
ஜாதகத்தில் முதல்வராகும் யோகம் இல்லை என்று பலரும் கூறிய நிலையில் அது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் கூறிய ஜெய.ராஜ மூர்த்தி,
2011ஆம் ஆண்டு என் அப்பா இறந்து விட்டார். அவர் உயிரோடு இருக்கும் போது இது பற்றி அடிக்கடி சொல்வார். வைத்தீஸ்வரன் கோவில் அரசு உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் ஆக இருந்தார். உறவினர்கள் மூலம் அக்காவிற்கு வரன் வந்தது. முரசொலி மாறன் குடும்பம் எங்களுக்கு தூரத்து சொந்தம். நாங்களும் விசாரித்தோம். மு.க ஸ்டாலின் ஜாதகம் வந்த போது அதை மயிலாடுதுறை ஜோதிடரிடம் அப்பா காண்பித்தார். அதற்கு அந்த ஜோதிடர் நீங்கள் தாராளமாக கொடுக்கலாம். இந்த ஜாதகத்தில் பிறந்தவர்களுக்கு நாடாளும் யோகம் இருக்கிறது அரசனுக்கு உரிய அத்தனை தகுதிகளும் இருக்கிறது என்று சொல்லியிருக்கிறார். அதை அடிக்கடி எங்கள் அப்பா சொல்வார். அது அப்படியே இன்றைக்கு பலித்திருக்கிறது.
நானே ஜாதகத்தை நம்ப மாட்டேன். ஆனால் அப்பா சொன்னது இன்றைக்கு நடந்திருக்கிறது. அதை பார்ப்பதற்கு இன்றைக்கு அப்பா இல்லை. எம்எல்ஏ, மேயர், துணை முதல்வர் ஆகும் வரை உயிரோடு இருந்து பார்த்திருக்கிறார். தமிழ்நாட்டின் முதல்வர் என்ற உயர்ந்த நிலைக்கு வந்ததை பார்க்க அப்பா இல்லை என்று வருத்தத்தோடு பகிர்ந்து கொண்டார்.
அக்கா நிறைய கோவில்களுக்கு போய் நிறைய வேண்டுதல் வைத்தார் அதுதான் காரணம் என்று நினைக்கிறீர்களா என்று கேட்டதற்கு, ஒரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் இருக்கிறார் என்பது உண்மை. குடும்பம் அமைதியாக இருந்தாலே எல்லா வெற்றியும் கிடைக்கும். ஒவ்வொருவருக்கும் ஆன்ம பலம் உள்ளது. ஆள் மனதில் என்ன நினைக்கிறோமோ அது நடைபெறும்.
ஜெயலலிதா பதவியேற்கும் போது எட்டாவது வரிசையில் அமரவைக்கப்பட்டிருந்தார். அதைப்பார்த்து வருத்தப்பட்டோம். எத்தனையோ பேர் அவர் முதல்வராகமாட்டார் என்னு சொன்னார்கள் அதைப்பற்றி எல்லாம் அவர் கவலைப்படாமல் அவரது பணியை செய்தார். அக்காவின் வேண்டுதலும் பலித்தது முயற்சிக்கு சரியான பலன் கிடைத்துள்ளது என்று கூறியுள்ளார் ஜெய ராஜமூர்த்தி. பக்தியும் முயற்சியும் சேர்ந்து பலித்துள்ளது.
இன்றைக்கு செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து பலரும் பாராட்டுகின்றனர். காலை உணவுத்திட்டம், மகளிர் உரிமைத் தொகை, இலவச பஸ் பயணம் போன்றவை மக்கள் மத்தியில் வரவேற்பினை பெற்றுள்ளது என்றும் சொன்னார் ஜெய ராஜமூர்த்தி.












Click it and Unblock the Notifications