ஹரியானாவில் இஸ்லாமிய மக்கள் மீது தாக்குதல்! ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேல்முருகன் அழைப்பு!
சென்னை: ஹரியானாவில் இஸ்லாமிய மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு பஜ்ரங் தளத்தைச் சேர்ந்த ஒருவர் வெறுப்பை தூண்டிவிடும் வகையில் வீடியோ வெளியிட்டதே காரணம் என வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
ஆர்.எஸ்,எஸ் கும்பலின் வன் செயல்களை தடுத்து நிறுத்த ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவு வருமாறு;

''மணிப்பூர் வன்முறை, பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, அவர்கள் நிர்வாணமாக அழைத்து செல்லப்பட்ட விவகாரம், இந்திய ஒன்றியம் மட்டுமின்றி, உலக நாடுகளே கொந்தளிப்பில் ஆழ்த்தியது. ஆனால், மணிப்பூர் வன்முறையை நிறுத்தவோ, மக்களை பாதுகாக்கவோ, மாநில பாஜக அரசு, ஒன்றிய பாஜக அரசும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. உலகமே சுற்றி வரும் பிரதமர் மோடிக்கு, மணிப்பூர் வன்முறை தொடர்பாக விளக்கமளிக்க நேரமில்லை.
இந்நிலையில், பாஜக ஆளும் அரியானாவில், பாஜக - ஆர்.எஸ்.எஸ் கும்பல்கள், இசுலாமிய மக்கள் மீது பெரும் தாக்குதலை தொடுத்து வருகிறது. தேர்தல் நெருங்க நெருங்க தங்களுடைய வெறுப்பு அரசியல் எனும் வெறுப்பை நாட்டின் பல பகுதிகளில் பாஜக பரிவாரம் பற்ற வைத்துக் கொண்டிருக்கிறது.
குருகிராமில் விஷ்வ ஹிந்து பரிசத் ஏற்பாடு செய்த யாத்திரை, பதற்றம் ஏற்படும் என்று தெரிந்தும் அரியானா பாஜக அரசு எவ்வித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவில்லை. குறிப்பாக, இசுலாமியர்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளில் இந்த ஊர்வலத்தை நடத்த அம்மாநில பாஜக அரசு திட்டமிட்டு அனுமதி அளித்துள்ளது.
ஊர்வலத்தின் போது ஏற்பட்ட வன்முறையில் காவலர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளன. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இசுலாமிய மக்கள் மீது தாக்குதல் நடைபெற்றுள்ளது. முக்கியமாக, பஜ்ரங் தளத்தைச் சேர்ந்த ஒருவர் வெறுப்பை தூண்டிவிடும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டது வன்முறைக்கு காரணமாக அமைந்துள்ளதாக அம்மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.
மேலும், இசுலாமியர்கள் எங்கள் எதிரிகள். நாங்கள் ஒருபோதும் அவர்களுக்கு சகோதரர்களாக இருக்க முடியாது. மதம், பெண்கள் மற்றும் பசுக்களை பாதுகாப்பதற்காக ஆயிரக்கணக்கானவர்களை கொல்வது நியாயமானது என்று வேதங்களில் கூறப்பட்டுள்ளது என விஷ்வ ஹிந்து பரிசத் சேர்ந்த சிவானந்த மகராஜ் என்பவர், விழா ஒன்றில் தனது விஷமத்தை கக்கியுள்ளார்.
இத்தகைய வெறியூட்டும் பேச்சுக்களின் பின் புலத்தில் தான் அரியானாவில் ஆர்.எஸ்,எஸ் கும்பல்கள், தங்களது கோரத்தாண்டவத்தை துவக்கியுள்ளது.
மணிப்பூரில் மாநில அரசும், காவல்துறையும் வன்முறையை வேடிக்கை பார்த்தது போலவே, அரியானாவிலும் நடந்து கொண்டிருக்கிறார்கள்.
எனவே, அரியானாவில் உடனடியாக வன்செயல்களை தடுத்து நிறுத்த, இந்திய ஒன்றியத்தில் உள்ள ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டும். இதற்காக, ஒன்றியத்திற்கே முன் மாதிரி மாநிலமாக திகழும், தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.''












Click it and Unblock the Notifications