24 மணிநேரத்தில் 3 இடங்களில் போலீசார் மீது தாக்குதல்.. என்ன செய்கிறது காவல்துறை? இரும்புக்கரம் எங்கே?
சென்னை : தமிழகத்தில் 24 மணி நேரத்தில் 3 இடங்களில் போலீசார் மீது தாக்குதல் நடைபெற்ற சம்பவங்கள் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
பொதுமக்களின் கடைசி புகலிடமான காவல்துறை மீதே, சமூக விரோதிகள் கை வைத்துள்ளது மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் கடமையும், கடப்பாடும் கொண்ட காவல்துறையினர் மீதே தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவங்கள், காவல்துறையினருக்கு தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளன.
சட்டம் ஒழுங்கு சீர்கேடுகள், குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், காவல்துறையினர் மீதே கொலைவெறித் தாக்குதல் நடைபெற்ற சம்பவங்கள் மக்களின் நம்பிக்கையைக் குலைத்துவிடும் என்பதால் உடனடியாக கடும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
கள்ளக்குறிச்சி மோடி போஸ்டர் கிழிப்பு! போலீசாரை நோக்கி பீர் பாட்டிலை வீசி பாஜகவினர் ரகளை! இருவர் கைது
கோவில்பட்டி
திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா பேச்சைக் கண்டித்து தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பேருந்து நிலையம் அருகே இந்து முன்னணி அமைப்பினர் நேற்று நள்ளிரவில் போஸ்டர் ஒட்டினர். அப்போது இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் சுஜித் ஆனந்த் மற்றும் அவரது ஓட்டுநர் பாண்டி ஆகியோர் அங்கு வந்து அனுமதி இன்றி போஸ்டர் ஒட்டியதை தடுத்துள்ளனர். அப்போது போஸ்டரை பிடுங்கியதை கண்டித்து பாஜக நகர தலைவர் சீனிவாசன் தலைமையில் பாஜகவினர் காவல் ஆய்வாளர் சென்ற வாகனத்தை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
போலீசாரை தாக்கிய பாஜகவினர்
அப்போது போலீஸ் வாகனத்திலிருந்து இறங்கிய ஆய்வாளர் சுஜித் ஆனந்தை, சீனிவாசன் மற்றும் பாஜக நிர்வாகிகள் தாக்கியுள்ளனர். இதனை தடுக்க முயன்ற காவலர் பாண்டியையும் அவர்கள் தாக்கியுள்ளனர். இதில் ஆய்வாளர் சுஜித் ஆனந்த் மற்றும் காவலர் பாண்டி ஆகியோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
சென்னையில் சம்பவம்
சென்னை திருவொற்றியூர் பலகை தொட்டி குப்பம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் குடிபோதையில் வந்த 4 இளைஞர்கள், வண்ணாரப்பேட்டை துணை ஆணையரின் கார் ஓட்டுநராக பணிபுரிந்து வரும் தலைமை காவலர் செந்தில் குமார் தனது குடும்பத்தோடு வெளியே சென்றுவிட்டு தனது வீட்டுக்கு அருகே காரை நிறுத்தும்போது பாட்டில்களை வீசி ரகளையில் ஈடுபட்டுள்ளனர். அதை தட்டிக்கேட்டே செந்தில் குமாரை கான்கிரீட் கல்லால் தாக்கிவிட்டு தப்பியோடினர். அதில் மூவரை கைது செய்து தலைமறைவான ஒருவரை தேடி வருகிறது போலீஸ்.
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சியில் பாஜகவினர் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்து போஸ்டர்கள் ஒட்டினர். கடை உரிமையாளரின் அனுமதியின்றி போஸ்டர் ஒட்டியதால் ஏற்பட்ட தகராறை அடுத்து அங்கு விசாரிக்கச் சென்ற போலீசார் மீது பாஜக நிர்வாகிகள் பீர் பாட்டிலை வீசி ரகளையில் ஈடுபட்டனர். இதில் போலீஸ் உட்பட இருவர் படுகாயமடைந்தனர். போலீசாரையே பாஜகவினர் தாக்கிய இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அடுத்தடுத்து 3 சம்பவங்கள்
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 24 மணி நேரத்தில் அடுத்தடுத்து போலீசாரை தாக்கிய3 சம்பவங்கள் நடந்துள்ளது காவல்துறையினருக்கும், பொதுமக்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டும் நிலையில், அவற்றைத் தடுக்க சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகக் கூறுகிறது காவல்துறை. இதற்காக குற்றப் பின்னணி கொண்டவர்களைக் கண்காணிக்கும் ஸ்பெஷல் ஆபரேஷன்களையும் அவ்வப்போது நடத்தி வருகிறது போலீஸ்.
காவல்துறை - நண்பன்
இந்நிலையில், காவல்துறையினர் மீதே தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் தொடர்ந்து வருவது மக்கள் மத்தியில் காவல்துறை மீதான நம்பிக்கையைக் குலைக்கிறது. தங்களுக்கு நேரும் பாதிப்புகளுக்கு, பொதுமக்கள் நம்பி இருப்பது காவல்துறையைத் தான். காவல்துறையை தங்களின் உற்ற நண்பனாக பொதுமக்கள் கருத வேண்டும் என போலீசார் கூறும் நிலையில், இதுபோன்ற தாக்குதல் சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன.
கடைசி நம்பிக்கை
பொதுமக்களின் கடைசி புகலிடம் காவல்துறையாகவே இருக்கிறது. தங்களுக்கான உடனடி நீதிக்கு போலீஸையே எப்போதும் நம்புகிறார்கள் பொதுமக்கள். இப்போது காவல்துறையினர் மீதே கை வைக்கும் சமூக விரோதிகள் மீது கடும் நடவடிக்கை எடுத்தால்தான், பொதுமக்களுக்கும், தங்கள் குறையை காவல்துறை தீர்க்கும் என்ற நம்பிக்கை பிறக்கும். எனவே, இரும்புக்கரம் கொண்டு சமூக விரோதிகளை ஒடுக்கி, காவல்துறை தங்களது கண்ணியத்தைக் காக்க வேண்டும் என்பது பொதுமக்களின் வேண்டுகோளாக இருக்கிறது.
இரும்புக்கரம் எங்கே?
அப்பாவிகள் சிலரை போலீசார் கைது செய்து துன்புறுத்திய சம்பவங்கள் மக்களிடையே கடும் எதிர்வினைகளை ஏற்படுத்திய நிலையில், காவல்துறையினர் கண்ணியம் காக்க வேண்டும் என தமிழக முதல்வரும், டிஜிபியும் அறிவுறுத்தி இருந்தனர். அதனை வாய்ப்பாக பயன்படுத்தி சமூக விரோதிகள் போலீசார் மீதே கைவைக்க அனுமதிக்கக் கூடாது, காவல்துறையினரின் இரும்புக்கரம், சமூக விரோதிகளை ஒடுக்குவதில் பணியாற்ற வேண்டும், காவல்துறை மக்களின் நண்பன் என்பதை உறுதி செய்யவேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.