ஆதாயம் தரும் இரட்டை பதவி.. ஆளுநர் ஆர்என் ரவிக்கு புதுசிக்கல்..பதவி நீக்ககோரி உயர்நீதிமன்றத்தில் மனு
சென்னை: தமிழக ஆளுநர், ஆரோவில் அறக்கட்டளை தலைவர் என ஆதாயம் தரும் வகையில் இரட்டை பதவியை ஆர்என் ரவி வகித்து வருகிறார். இது அரசியல் சாசனத்துக்கு எதிரானது. இதனால் ஆளுநர் ஆர்என் ரவியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழக ஆளுநராக ஆர்என் ரவி செயல்பட்டு வருகிறார். இவர் தான் பங்கேற்று வரும் நிகழ்ச்சிகளில் புதிய கல்வி கொள்கை, இந்திய பொருளாதாரம், சனாதன தர்மம் பற்றி பேசி வருகிறார்.
மேலும் திராவிட கொள்கைகள் மற்றும் திராவிடம் சார்ந்த விஷயங்களை அவர் விமர்சனம் செய்து வருகிறார். இதனால் ஆளுநர் ஆர்என் ரவிக்கும், ஆளும் திமுக மற்றும் கூட்டணி கட்சியினருக்கும் இடையே வார்த்தை போர் நீடித்து வருகிறது.

ஜனாதிபதியிடம் கடிதம்
மேலும், தமிழக அரசு நிறைவேற்றும் சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்என் ரவி அனுமதி அளிக்காமல் கிடப்பில் போட்டுள்ளார். இது இருதரப்புக்கும் இடையேயான மோதலை அதிகரித்துள்ளது. சமீபத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி எம்பிக்கள் சார்பில் ஜனாதிபதி திரெளபதி முர்முவுக்கு கடிதம் அனுப்பினர். அதில், ஆளுநர் ஆர்என் ரவியை திரும்ப பெற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. இதுதொடர்பாக தற்போது வரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

உயர்நீதிமன்றத்தில் மனு
இந்நிலையில் தான் தமிழக ஆளுநர் ஆர் என் ரவியை பதவி நீக்க கோரி காஞ்சிபுரம் மாவட்டம் தந்தை பெரியார் திராவிட கழக செயலாளர் கண்ணதாசன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார். அந்த வழக்கில் தமிழக ஆளுநராக ஆர்என் ரவி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 18 ம் தேதி பதவியேற்றுகொண்டதாகவும், பதவியேற்ற நாளிலிருந்து அவர் ஒரு பிரச்சனைக்குரிய நபராகவே உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

மக்கள் நலனுக்கு எதிராக..
மேலும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்று சனாதன தர்மம் பற்றியும், திராவிட இயக்கக் கொள்கைகளுக்கு எதிராகவும் பேசி வருவதாகவும் தெரிவித்துள்ளார். தமிழக அரசு அனுப்பியுள்ள கோப்புகளுக்கு உரிய கையெழுத்து போடாமல், காலம் தாழ்த்தி வருவதாகவும் சுட்டிக்காட்டி உள்ளார். எந்த ஒரு காரணமும் இல்லாமல் மாதக்கணக்கில் கோப்புகளை நிலுவையில் வைத்து பொதுமக்களின் நலனுக்கு எதிராக செயல்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆரோவில் அறக்கட்டளை தலைவர் பதவி
மேலும் ஆர்.என். ரவி, புதுவையில் உள்ள ஆரோவில் பவுண்டேஷன்(அறக்கட்டளை) அமைப்பின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டி உள்ளார். 1988 ஆரோவில் பவுண்டேஷன் சட்டத்தின் கீழ் தலைவர் பதவி என்பது சம்பளம் மற்றும் ஓய்வூதியம் பெறக்கூடியது என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டி உள்ளார். பொதுவாக இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 158 உட்பிரிவு 2 ன் கீழ் ஆளுநர் எந்த ஒரு லாபம் தரக்கூடிய நிறுவனத்திலும் பொறுப்பு வகிக்க கூடாது என்று குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அதையும் மீறி அவர் தலைவராக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அரசியலமைப்புக்கு எதிரானது
இதன் மூலம் அவர் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எதிராக செயல்படுவதாகவும் ஆளுநராக அவர் பதவியேற்கும்போது எடுத்துக் கொண்ட உறுதிமொழிக்கு எதிராக செயல்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.எனவே அவர் ஆளுநராக பதவி வைக்க தகுதியற்றவர், அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். மனுதாரர் சார்பில் சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் துரைசாமி இந்த மனுவை தாக்கல் செய்திருக்கிறார். இந்த மனு விரைவில் விசாரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications