16 இன்னோவா.. 16,447 கிமீ பயணம்.. தவெக வெற்றியை கணித்த ஆக்ஸிஸ் மை இந்தியா.. சர்வே செய்தது எப்படி?
சென்னை: தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள 2026 சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், ஆக்ஸிஸ் மை இந்தியா (Axis My India) வெளியிட்டுள்ள எக்ஸிட் போல் முடிவுகள் மாநிலத்தையே உற்றுநோக்கச் செய்துள்ளன. குறிப்பாக, முதல் தேர்தலிலேயே நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (TVK) மிகப்பெரிய சக்தியாக உருவெடுத்துள்ளதை இந்த கணிப்புகள் சுட்டிக்காட்டுகின்றன.
தமிழக அரசியலில் நீண்ட காலத்திற்குப் பிறகு ஒரு மிகப்பெரிய மாற்றத்திற்கான அறிகுறி தென்படுவதாக ஆக்ஸிஸ் மை இந்தியா (Axis My India) வெளியிட்டுள்ள 2026 சட்டமன்றத் தேர்தல் எக்ஸிட் போல் முடிவுகள் தெரிவிக்கின்றன. நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (TVK) தனது கன்னித் தேர்தலிலேயே ஆட்சியைப் பிடிக்கும் அளவிற்கு அல்லது மிகப்பெரிய பலத்துடன் உருவெடுக்கும் என்று இந்தக் கணிப்பு வெளியாகி ஒட்டுமொத்த அரசியல் களத்தையும் அதிரவைத்துள்ளது.

கணிப்பில் உள்ளது என்ன?
ஆக்சிஸ் மை இந்தியா வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் தமிழகத்தில் தவெக ஆட்சியமைக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. திமுக கூட்டணி 91 - 110 தொகுதிகளை கைப்பற்றும் என்று கூறப்பட்டுள்ளது. அதிமுக 22 - 32 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று கூறப்பட்டுள்ளது.
விஜய்யின் தவெக 98 -120 தொகுதிகளில் வெற்றி பெறுவார்கள் என்று சொல்லப்பட்டுள்ளது. வாக்கு சதவீத அடிப்படையில் திமுக, தவெக இரண்டு கட்சிகளும் 35 சதவீதம் வாக்கு பெறுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. அதிமுக 23 சதவீதம் வாக்கு பெறுவார்கள் என்றும் ஆக்சிஸ் மை இந்தியா எக்ஸிட் போலில் கூறப்பட்டுள்ளது.
நாம் தமிழர் கட்சி 3 சதவீதம், மற்றவர்கள் 4 சதவீதம் வாக்கு பெறுவார்கள் என்றும் அந்தக் கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
களத்தில் ஒரு மினி ராணுவம்
இந்த மாபெரும் கருத்துக் கணிப்பை ஆக்ஸிஸ் மை இந்தியா நிறுவனம் எவ்வாறு நடத்தியது என்பது குறித்த சுவாரஸ்யமான மற்றும் நுட்பமான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. இது வெறும் மேலோட்டமான ஆய்வு அல்ல; தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் சென்று, மக்களின் நாடித் துடிப்பைத் துல்லியமாக உணர்ந்து எடுக்கப்பட்ட ஒரு அறிவியல் ரீதியான ஆய்வு என்பது அவர்களின் தரவுகள் மூலம் தெளிவாகிறது.
இந்த பிரம்மாண்ட ஆய்விற்காக ஆக்ஸிஸ் மை இந்தியா நிறுவனம் மொத்தம் 96 அனுபவம் வாய்ந்த ஆய்வாளர்களைத் தமிழகம் முழுவதும் களமிறக்கியது. இவர்கள் வெறும் நகரங்களில் மட்டும் தங்கிவிடாமல், 1,053 கிராமங்கள் மற்றும் நகரங்களுக்கு நேரடியாகச் சென்று ஆய்வை மேற்கொண்டுள்ளனர். தமிழகத்தில் உள்ள அனைத்து 234 சட்டமன்றத் தொகுதிகளையும் இந்த ஆய்வுக் குழு முழுமையாக அணு அணுவாகப் பிய்த்து மேய்ந்துள்ளது.
44,460 நேர்காணல்கள்: மக்களின் நேரடி வாக்குமூலம்
இந்த ஆய்வின் நம்பகத்தன்மைக்கு முக்கியக் காரணமாக இருப்பது அதன் "சாம்பிள் சைஸ்" எனப்படும் நேர்காணல்களின் எண்ணிக்கை. மொத்தம் 44,460 வாக்காளர்களிடம் இந்த ஆய்வாளர்கள் தனித்தனியாகப் பேசியுள்ளனர். குறிப்பாக, பழைய காலத்தைப் போலத் தாள்களில் குறிப்பு எடுக்காமல், நவீன மின்னணு கருவிகள் (Electronic Devices) மூலம் தரவுகள் உடனுக்குடன் சேகரிக்கப்பட்டுள்ளன. முகத்திற்கு நேராக (Face-to-Face) நடத்தப்பட்ட இந்த நேர்காணல்கள், மக்களின் உண்மையான உணர்வுகளையும், அவர்களின் எதிர்பார்ப்புகளையும் துல்லியமாகப் பிரதிபலித்துள்ளன.
16,447 கிலோமீட்டர் பயணம்
தமிழகத்தின் நிலப்பரப்பு முழுவதையும் கவர் செய்ய, இந்த ஆய்வுக் குழுவினர் மேற்கொண்ட பயணம் மலைக்க வைக்கிறது. 16 இன்னோவா கார்களில் இந்தப் பணியாளர்கள் தமிழகம் முழுவதும் வலம் வந்துள்ளனர். சுமார் 16,447 கிலோமீட்டர் தூரம் இவர்கள் பயணித்துள்ளனர். கன்னியாகுமரி முதல் சென்னை வரை அனைத்துப் பகுதிகளிலும் மக்கள் எத்தகைய மாற்றத்தை விரும்புகிறார்கள் என்பதை இந்த நீண்ட நெடிய பயணம் அவர்களுக்கு உணர்த்தியுள்ளது.
கணிக்கப்பட்டுள்ள தொகுதிகளின் விவரம்
இந்த ஆய்வின் முடிவுகள் தமிழக அரசியலில் ஒரு புதிய மும்முனைப் போட்டியை உறுதிப்படுத்தியுள்ளன. ஆக்ஸிஸ் மை இந்தியா கணிப்பின்படி, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 98 முதல் 120 தொகுதிகளைக் கைப்பற்றி முதலிடத்தைப் பிடிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கு அடுத்தபடியாக ஆளும் திமுக கூட்டணி 92 முதல் 110 தொகுதிகளில் வெற்றி பெறக்கூடும் என்றும், அதிமுக கூட்டணி 22 முதல் 32 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்படலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
தங்கள் நிறுவனத்தின் கொள்கைப்படி, எந்தவொரு அரசியல் கட்சியின் சார்புமின்றி, வாக்காளர்களின் உண்மையான தேவைகள், அவர்கள் சந்திக்கும் அன்றாடப் பிரச்சனைகள் மற்றும் கொள்கை ரீதியான எதிர்பார்ப்புகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே இந்த ஆய்வு நடத்தப்பட்டதாக ஆக்ஸிஸ் மை இந்தியா தெரிவித்துள்ளது. குறிப்பாகப் பங்குச்சந்தை மற்றும் அரசியல் செல்வாக்குகளுக்கு அப்பாற்பட்டு, மக்களின் "வாக்காளர் நுண்ணறிவு" (Voters Insights) என்பதை மையமாக வைத்து இந்த முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த எக்ஸிட் போல் முடிவுகள் உண்மையானால், திராவிடக் கட்சிகள் மட்டுமே கோலோச்சிய தமிழக அரசியலில் 2026-ஆம் ஆண்டு ஒரு புதிய வரலாற்றுத் திருப்பமாக அமையும் என்பதில் ஐயமில்லை. மே 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையின் போது இந்தத் தரவுகள் எந்த அளவிற்கு நிஜமாகின்றன என்பதைப் பார்க்க ஒட்டுமொத்த தமிழகமும் ஆவலுடன் காத்திருக்கிறது.












Click it and Unblock the Notifications