அன்று சொன்னார்... இன்று செய்தார்... ராஜேஷ்குமாரை ராஜ்யசபாவுக்கு ஸ்டாலின் தேர்வு செய்த பின்னணி..!
சென்னை: நாமக்கல் திமுக கிழக்கு மாவட்டச் செயலாளர் ராஜேஷ்குமாருக்கு ராஜ்யசபா எம்.பி.சீட் கொடுத்து, கட்சிக்காக உழைத்தவர்களை தாம் கைவிடமாட்டேன் என்பதை உணர்த்தியிருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ராஜேஷ்குமாருக்கு எம்.எல்.ஏ.சீட் கிடைக்காத போதும், 3 தொகுதிகளில் தேர்தல் பொறுப்பேற்று 3 எம்.எல்.ஏ.க்களை சட்டமன்றத்திற்கு அனுப்பி வைத்தார்.
3 நாட்கள்தான்.. ஆளுநராக சனிக்கிழமை பதவி ஏற்கும் ஆ.என் ரவி.. களமிறக்கப்பட்டது ஏன்? என்ன காரணம்?
ராஜேஷ்குமாரை ராஜ்யசபா எம்.பி.பதவிக்கு ஸ்டாலின் தேர்வு செய்த பின்னணியை இப்போது பார்க்கலாம்.
நாமக்கல் மாவட்டம்
நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணிச் செயலாளராக இருந்த ராஜேஷ்குமார் கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் மாவட்டச் செயலாளராக புரோமோஷன் செய்யப்பட்டார். முன்னாள் மத்திய அமைச்சர் காந்திச்செல்வனுக்கும் இவருக்கும் உள்ளூர் அரசியலில் ஏழாம் பொருத்தமாகவே இருக்கும். இதனால் லோக்கல் பாலிடிக்ஸில் ஒருவரை ஒருவர் தோற்கடித்துவிடுவார்களோ என்ற அச்சத்தில் காந்திச்செல்வனுக்கும், ராஜேஷ்குமாருக்கு சட்டமன்றத் தேர்தலில் ஸ்டாலின் சீட் கொடுக்கவில்லை.
சீட் இல்லை
இருப்பினும் தனக்கு சீட் கிடைக்காத வருத்தத்தை வெளிக்காட்டிக்கொள்ளாமல் தனது நிர்வாகத்திற்குட்பட்ட 3 தொகுதிகளிலும் திமுக வேட்பாளர்களை ராஜேஷ்குமார் வெற்றிபெற வைத்தார். அதிலும் குறிப்பாக சேந்தமங்கலம் தொகுதியை பொறுத்தவரை கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அதிமுகவின் கோட்டையாக திகழ்ந்த நிலையில், அதனை உடைத்தெறிந்து திமுக வேட்பாளரை வெற்றிபெற வைத்தார். இதற்காக கட்சி கொடுத்த நிதியை தாண்டி சொந்த நிதியிலும் தாராளம் காட்டினார்.
ராமசாமி பேரன்
இதுமட்டுமல்லாமல் ராஜேஷ்குமாரின் தாத்தா ராமசாமி திமுகவின் மூத்த முன்னோடிகளில் ஒருவராக திகழ்ந்தவர். மறைந்த பேராசிரியர் அன்பழகனும் ராமசாமியும் நெருங்கிய நண்பர்கள். திருச்செங்கோடு நாடாளுமன்ற தொகுதியில் ராமசாமி போட்டியிடுவார் என அண்ணாவால் அறிவிக்கப்பட்ட பிறகு அங்கு பேராசிரியர் அன்பழகன் வேட்பாளராக மாற்றி நிறுத்தப்பட்டார். அப்போது எந்த வருத்தமும் தெரிவிக்காமல் பேராசிரியர் அன்பழகனுக்கான உழைத்தவர் ராமசாமி.
திமுக பாரம்பரியம்
இப்படி திமுக பாரம்பரியமும் உதயநிதி ஸ்டாலின், அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோரின் நெருக்கமும் ராஜேஷ்குமாருக்கு பலமாக இருந்து வந்தது. தேர்தலுக்கு முன்பாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், உங்களில் பலருக்கும் சீட் கிடைக்காமல் போகலாம், ஆனால் அதற்காக சோர்வடைந்து விடாமல் உழைத்து நான் நிறுத்தும் வேட்பாளர்களை முழுமையாக வெற்றிபெற வைத்தால் உரிய பதவிகள் தருவேன் என உறுதியளித்திருந்தார்.
உழைப்பு
அந்த உறுதியை நிறைவேற்றும் வகையில், மாவட்டச் செயலாளர் என்ற முறையில் முழு வெற்றியை ஈட்டிக்கொடுத்த ராஜேஷ்குமாருக்கு இப்போது ராஜ்யசபா சீட் கொடுத்து அழகு பார்த்துள்ளார் ஸ்டாலின். இது கட்சியின் மற்ற மாவட்ட நிர்வாகிகளுக்கும், மாவட்டச் செயலாளர்களுக்கும் புதிய நம்பிக்கையை கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது. இதுமட்டுமல்லாமல் உரிய முறையில் உழைத்தால் பதவி தேடி வரும் என்பதை இளம் தலைமுறையினருக்கு திமுக தலைமை உணர்த்தியுள்ளது.