அமைச்சர் காந்தியிடமிருந்து கதர் கிராமத் தொழில் துறை பறிபோன பின்னணி! ராஜகண்ணப்பன் ஏமாற்றம்!
சென்னை: அண்மையில் நடைபெற்ற அமைச்சரவை மாற்றத்தின் போது அமைச்சர் ராணிப்பேட்டை காந்தியிடம் இருந்த கதர் கிராம தொழில் வாரியத் துறை, அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது.
அமைச்சர் காந்தி மீது முதல்வருக்கு கோபமெல்லாம் கிடையாது என்றும் உடல்நலக் காரணங்கள் கருதியே அவருக்கு பணிச்சுமைகள் குறைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதனிடையே அண்ணனுக்கு ஜாக்பாட் அடித்திருப்பதாக அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆதரவாளர்கள் கொண்டாடி வரும் வேளையில், அவருக்கு என்னவோ இன்னும் மனம் நிறைவடையவில்லை என்று கூறப்படுகிறது.
அமைச்சரவை மாற்றம்
2 நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற தமிழக அமைச்சரவை மாற்றத்தின் போது அமைச்சர் ராணிப்பேட்டை காந்தியின் கைவசம் இருந்த கதர் கிராமத் தொழில் துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டது. இது அமைச்சர் காந்தி மீது கோபம் கொண்டோ, அவரது செயல்பாடுகளில் அதிருப்தி அடைந்தோ முதல்வர் எடுத்த முடிவில்லையாம். இதன் பின்னணியில் உடல்நலக் காரணங்கள் தான் இருக்கின்றனவாம்.
பணிச்சுமை
இதனால் தான் அமைச்சர் காந்திக்கு பணிச்சுமைகளை குறைக்க விரும்பிய முதல்வர் ஸ்டாலின் அவர் வசம் இருந்த கதர் கிராமத் தொழில் துறையை ராஜக்கண்ணப்பனுக்கு கொடுத்திருக்கிறார். இதனிடையே கைத்தறித் துறை அமைச்சராக காந்தி தொடர்வது குறிப்பிடத்தக்கது. பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையுடன் கதர் கிராமத் தொழில் துறையையும் அமைச்சர் ராஜகண்ணப்பன் கூடுதலாக கவனித்து வருகிறார்.
ராஜகண்ணப்பன் ஏமாற்றம்
இதனிடையே அமைச்சர் ராஜகண்ணப்பனின் ஆதரவாளர்கள் அண்ணனுக்கு ஜாக்பாட் அடித்திருப்பதாகவும் அதனால் தான் கூடுதல் துறை ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் ஒரு பக்கம் பெருமிதம் தெரிவித்து வரும் நிலையில், அமைச்சர் ராஜகண்ணப்பனோ மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தவித்து வருகிறாராம். அமைச்சரவை மாற்றத்தின் போது வேறு இலாகா தனக்கு ஒதுக்கப்படும் என எதிர்பார்த்த அவருக்கு கதர் கிராமத் தொழில் துறையை மட்டும் கூடுதலாக ஒதுக்கியது ஏமாற்றத்தை தந்ததாம்.
ராஜகண்ணப்பன் எதிர்பார்ப்பு
அமைச்சர் ராஜகண்ணப்பனை பொறுத்தவரை சுற்றுலாத் துறை அல்லது வனத்துறை ஆகிய 2 துறைகளில் ஏதேனும் ஒன்று தனக்கு கொடுக்கப்படும் என் எதிர்பார்த்திருக்கிறார். முதல்வரோ கூடுதலாக ஒரு துறையை தலையில் கட்டி கணக்கை நேர் செய்திருக்கிறார்.