"மாநில சிலபஸ்!" ஆளுநரின் விமர்சனம் தவறு.. ஆனா இங்கே வேற ஒரு பிரச்சினை இருக்கு.. பாலகுருசாமி பரபர
சென்னை: தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தின் தரம் மோசமாக இருந்ததாக ஆளுநர் ரவி கருத்து கூறியிருந்த நிலையில், அதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையே அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் பாலகுருசாமியும் ஆளுநர் கருத்து தவறானது என்று கூறியிருக்கிறார். அதேநேரம் பள்ளிகளில் மற்றொரு முக்கிய பிரச்சினை இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
தமிழ்நாடு அரசை பல்வேறு விவகாரங்களில் விமர்சிக்கும் வகையில் கருத்துச் சொல்வதை ஆளுநர் ரவி வாடிக்கையாக வைத்துள்ளார். சமீபத்தில் கூட திராவிட சித்தாந்தத்தை அவர் பிரிவினைவாத சித்தாந்தம் எனக் குறிப்பிட்டது விவாதத்தைக் கிளப்பியது.

இதற்கிடையே நேற்று சென்னையில் தனியார் பள்ளியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஆளுநர் ரவி, தமிழ்நாடு மாநில அரசின் பாடத்திட்டம் குறித்துக் கூறிய கருத்துகள் சர்ச்சையைக் கிளப்பியது.
ஆளுநர் கருத்து: அதாவது மாநில பாடத் திட்டத்தின் தரம் மோசமாக இருப்பதாகவும் மாணவர்களுக்கு சில பாடங்களில் அறிவுத்திறன் குறைவாக இருப்பதாகவும் கூறியிருந்தார். அந்த நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், "தேசிய பாடத் திட்டத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தோம் என்றால் மாநில பாடத் திட்டத்தின் தரம் மோசமாக உள்ளது. நான் தமிழ்நாட்டில் உள்ள மாணவர்களிடம் நேரில் சென்று உரையாடினேன். மாணவர்களுக்குச் செயற்கை நுண்ணறிவு, ரோபோட்டிக்ஸ் பாடங்களில் அறிவுத்திறன் குறைவாக உள்ளது" என்று கூறியிருந்தார்.
ஆளுநர் ரவியின் இந்தக் கருத்துக்கள் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. தமிழக மாநில பாடத்திட்டத்தை விமர்சித்து ஆளுநர் ரவி கூறிய இந்தக் கருத்துக்கு சு. வெங்கடேசன் தொடங்கி பலரும் எதிர்ப்பு கூறி வருகின்றனர். இதற்கிடையே அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் பாலகுருசாமியும் ஆளுநர் ரவியின் கருத்து தவறானது என்று கூறியிருக்கிறார்.
பாலகுருசாமி: இது தொடர்பாக அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் பாலகுருசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகத்தின் மாநில பாடத்திட்டம் மிகவும் மோசமாக உள்ளதாகவும், பிற மாநில பாடத்திட்டங்களுடன் ஒப்பிடும் போது தரமாக இல்லை என்றும் இதனால் தமிழக மாணவர்களால் அவர்களுடன் போட்டியிட முடியாது எனத் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சமீபத்தில் கூறியுள்ளது துரதிர்ஷ்டவசமானது. இது முற்றிலும் தவறு.
2017-18 ஆம் ஆண்டில், அப்போதைய பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக இருந்த கே.ஏ.செங்கோட்டையன் தலைமையில் தமிழ்நாடு பள்ளிப் பாடத்திட்டம் முழுமையாகத் திருத்தப்பட்டு சிபிஎஸ்இ பாடத்திட்டத்திற்கு இணையாக மேம்படுத்தப்பட்டது. சிறந்த பாடப் புத்தகங்களும் உருவாக்கப்பட்டன. இந்தப் பணிகளைச் செய்த உயர்நிலைக் குழு உறுப்பினர்களில் நானும் ஒருவன்.
நீங்களே வந்து கேளுங்க.. மாநில சிலபஸ் பற்றி விமர்சித்த ஆளுநருக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பதிலடி!
பிரச்சினை என்ன: இப்போது பாடத்திட்டத்தில் பிரச்சினை இல்லை.. அரசுப் பள்ளிகளில் உள்ள கற்பித்தல் தரம் மற்றும் உள்கட்டமைப்பில் தான் பிரச்சினை இருக்கிறது. அரசுப் பள்ளிகளில் உள்ள பெரும்பான்மையான ஆசிரியர்கள் அர்ப்பணிப்பு இல்லாமல் உள்ளனர். அவர்களின் அலட்சியப் போக்கே பள்ளிக் கல்வியின் மோசமான தரத்திற்குக் காரணமாக இருக்கிறது. பள்ளிக் கல்வியின் தரத்தை மேம்படுத்தும் வகையில் இந்தப் பிரச்சினைகளுக்கு அரசு உடனடியாக தீர்வு காண வேண்டும்" என்று அவர் கூறியுள்ளார்.
அன்பில் மகேஷ்: முன்னதாக ஆளுநரின் கருத்துக்குத் தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷும் பதிலளித்திருந்தார். இது குறித்து அவர் கூறுகையில், "கல்வித் தரம் குறித்து ஆய்வு செய்ய ஆளுநரை எங்கு வேண்டுமானாலும் அழைத்துச் செல்ல தயார். மாணவர்களிடம் அவரே கேள்வி கேட்கட்டும். மாநில பாடத்திட்டத்தின் தரத்தை அறிய ஆளுநர் ஒரு ஆணையத்தை அமைத்துக் கூட ஆய்வு செய்யட்டும்" என்று கூறியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications