வழுக்கைத் தலையை மறைத்து திருமணம்.. கோபம் அடைந்த மனைவி.. அடித்தே கொன்ற கணவன்..சென்னையில் ஷாக்!
சென்னை: சென்னை தாம்பரம் அருகே இளைஞர் ஒருவர் தனது வழக்கை தலையை மறைத்து விக் வைத்து ஏமாற்றி திருமணம் முடித்துள்ளார். திருமணத்துக்கு பின்னர் இந்த உண்மை மனைவிக்கு தெரிந்ததால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த கணவன் மனைவி அடித்து கொலை செய்துள்ளார்.
சென்னை தாம்பரம் அருகே உள்ள சோமங்கலம் பகுதியில் அமரம்பேடு கிராமம் பஜனைக் கோயில் தெருவைச் சேர்ந்த நபர் கோகுலகண்ணன் (வயது 32). கோகுல கண்ணன் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
கடந்த 8 மாதங்களுக்கு முன்பு கோகுல கண்ணனுக்கு லோகப்பிரியா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. இருவரும் ஒன்றாக வசித்து வந்தனர்.

தூக்கில் தொங்கிய லோகப்பிரியா
இந்த நிலையில் கடந்த மாதம் 27-ம் தேதி அன்று லோகப்பிரியா வீட்டில் தூக்கில் தொங்கியபடி பிணமாக கிடந்தார். லோகப்பிரியா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக சோமங்கலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் லோகப்பிரியாவின் உடலை மீட்டு குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் லோகப்பிரியாவின் மரணம் தொடர்பாக விசாரணை நடத்தினர்.

பல்வேறு திடுக்கிடும் தகவல்கள்
இதையடுத்து போலீசார் லோகப்பிரியாவின் கணவர் கோகுல கண்ணன், மாமியார் ராஜேஸ்வரி ஆகியோரிடமும் விசாரணை நடத்தினர். இதில் பல திடுக்கிடும் தகவல் தெரியவந்தது. லோகப்பிரியா தற்கொலை செய்யவில்லை என்றும் கொலை செய்யப்பட்டுள்ளார் என்றும் தெரியவந்துள்ளது. இது குறித்து போலீசார் தரப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- கோகுல கண்ணனுக்குத் திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் தீவிரமாக பெண் பார்த்து வந்துள்ளனர்.

வழுக்கை தலை என்பதால்..
ஆனால் கோகுல கண்ணனுக்கு வழுக்கை என்பதால் பலரும் அவருக்கு பெண் கொடுக்க முன்வரவில்லை. இதனால் கோகுல கண்ணன் மன வேதனை அடைந்துள்ளார். வழுக்கை தலை என்பதால் தானே நமக்கு திருமணம் நடக்காமல் போகிறது என்று நினைத்த அவர் விக் மாட்டுவதற்கு முன் வந்தார். அதன்படி தன்னுடைய வழுக்கை தலையை விக் மூலமாக மறைத்துக்கொண்டார். இதையடுத்து பெண் பார்க்கும் போதெல்லா விக் தலையோடு தான் கோகுல கண்ணன் சென்றுள்ளார். அப்படித்தான் லோகப்பிரியாவை பெண் பார்க்கும் போது கூட கோகுல கண்ணன் விக் தலையோடு சென்றுள்ளார்.

எண்ணெய் தேய்த்து குளிக்கும்போது...
தனக்கு வழுக்கை தலை என்பதை மறைத்து லோகப்பிரியாவையும் அவரது குடும்பத்தினரையும் ஏமாற்றி திருமணமும் முடித்துள்ளார். திருமணத்துக்கு பின்னரும் அவர் தனக்கு வழுக்கை தலை என்பதை மனைவி லோகப்பிரியாவிடம் சொல்லவில்லை. நீண்ட நாட்களாக அப்படியே சென்றுள்ளது. இந்த நிலையில் ஒருநாள் கோகுல கண்ணனுக்கு லோகப்பிரியா எண்ணெய் தேய்த்து குளிக்க வைக்க முயன்றுள்ளார். ஆனால் எண்ணெய் தேய்த்து குளித்தால் குட்டு அம்பலம் ஆகிவிடும் என பயந்து எனக்கு வெட்கமாக இருக்கிறது என்று கூறி சமாளித்து விட்டார்.

ஏன் உண்மையை மறைத்தீர்கள்
ஆனால் எவ்வளவு நாட்கள் தான் மறைக்க முடியும் என்று கூறும் அளவிற்கு ஒருநாள் கணவர் கோகுல கண்ணனுக்கு வழுக்கை என்றும் அவர் வைத்திருப்பது விக் என்றும் லோகப்பிரியாவுக்கு தெரிந்துவிட்டது. "உங்களுக்கு வழுக்கை தலை என்பதை ஏன் என்னிடம் திருமணத்துக்கு முன்பே கூறவில்லை" என்றும் "ஏன் உண்மையை மறைத்தீர்கள்" என்றும் கணவரிடம் கேட்டுள்ளார். அதற்கு கோகுல கண்ணன் நீங்கள் கூட தான் திருமணத்துக்கு இவ்வளவு நகைகள் போடுவதாக கூறினீர்கள் ஆனால் குறைவாக போட்டு எங்களை ஏமாற்றினீர்கள் என்று கூறியுள்ளார்.

அடித்து கொலை
இவ்வாறாக மாறி மாறி இருவரும் சண்டை போட்டு வந்துள்ளனர். இதே போல் கோகுல கண்ணன் தான் ஐடி நிறுவனத்தில் வேலை பார்ப்பதாகவும் கூறி ஏமாற்றியுள்ளார். இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் சம்பவத்தன்று இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரத்தில் லோகப்பிரியாவை கோகுல கண்ணன் தாக்கியுள்ளார். இதில் லோகப்பிரியா உயிரிழந்துள்ளார். இதனால் பயந்து போன கோகுல கண்ணன் தாய் ராஜேஸ்வரியிடம் நடந்ததை கூறியுள்ளார்.

பிரேத பரிசோதனை அறிக்கை
இதையடுத்து இருவரும் சேர்ந்து லோகப்பிரியாவை தூக்கில் தொங்கவிட்டுள்ளனர். பின்னர் லோகப்பிரியா தற்கொலை செய்துகொண்டதாக நாடகமாடியுள்ளனர். மேலும் தனது மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக லோகப்பிரியாவின் பெற்றோரும் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். மேலும் லோகப்பிரியாவின் மரணம் தற்கொலை இல்லை கொலை என்பது அவரது பிரேத பரிசோதனை அறிக்கை மூலமாக தெரியவந்தது. இதையடுத்து கோகுல கண்ணன் மற்றும் ராஜேஸ்வரியை போலீசார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications