வங்கதேசத்தில் தாக்கப்படும் இந்துக்கள்.. தமிழகத்தில் போராட அனுமதி மறுத்த போலீஸ்! ஹைகோர்ட் அதிரடி
சென்னை: வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறை சம்பவங்களை கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்த அனுமதி கோரிய இந்து முன்னணி அமைப்பின் மனுவை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வங்கதேசத்தில் மாணவர்கள் போராட்டத்தால் கடந்த 5ம் தேதி வங்கதேச பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா நம் நாட்டில் தஞ்சமடைந்துள்ளார். இதையடுத்து கடந்த 8 ம்தேதி வங்கதேசத்தில் இடைக்கால அரசு அமைந்தது. நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையில் இந்த இடைக்கால அரசு செயல்பட்டு வருகிறது.

குறிப்பாக இடஒதுக்கீடு, ஷேக் ஹசீனாவுக்கு எதிராக நடந்த இந்த போராட்டம் தற்போது சிறுபான்மை மக்களுக்கு எதிரானதாக மாறியுள்ளது. அதாவது கடந்த 5ம் தேதி ஷேக் ஹசீனா ராஜினாமா செய்து நம் நாட்டுக்கு வந்த நிலையில் வங்கதேசத்தில் சிறுபான்மை மக்களாக வசிக்கும் இந்துக்கள் மற்றும் அவர்களின் வழிபாட்டு தலங்களில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
கோவில்களில் தீவைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்துக்கள் வசிக்கும் வீடுகள் சூறையாடப்பட்டுள்ளது. இதனால் அங்கு சிறுபான்மையினராக உள்ள இந்துக்கள், சீக்கியர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தான் தங்களுக்கு பாதுகாப்பு கோரியும், தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய வலியுறுத்தியும் சமீபத்தில் 7 லட்சம் இந்துக்கள் தலைநகர் டாக்கா உள்பட 2 இடங்களில் பெரியஅளவில் போராட்டம் நடத்தினர்.
இந்துக்களால் அதிரும் வங்கதேசம்.. 7 லட்சம் பேர் குவிந்து போராட்டம்! திரும்பி பார்க்க வைத்த சம்பவம்
இந்த போராட்டத்தை தொடர்ந்து இந்துக்கள், கிறிஸ்தவர்கள், புத்த மதத்தை சேர்ந்த அமைப்புகளின் நிர்வாகிகள் இடைக்கால அரசின் தலைநகர் முகமது யூனுஸை சந்தித்து பாதுகாப்பு கோரினர். அவர் பாதுகாப்பு அளிப்பதாகவும், தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தான் வங்கதேசத்தில் இந்துக்கள் இனப்படுகொலை செய்வதாக இந்து முன்னணி தெரிவித்துள்ளார். மேலும் அதனை சார்பில் கண்டனம் தெரிவிக்கும் வகையில், இந்து முன்னணி சார்பில் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டது. இதுதொடர்பாக இந்து முன்னணி சார்பில் தமிழக காவல்துறையிடம் அனுமதி கோரப்பட்டது. ஆனால் காவல்துறை அனுமதி மறுத்துவிட்டது. இதனால் இந்து முன்னணியினர் அதிருப்தியடைந்தனர்.
இந்நிலையில் தான் வங்கதேசத்தில் இந்துக்கள் மீதான தாக்குதலை கண்டித்து தமிழகத்தில் போராட காவல்துறை அனுமதி மறுத்ததாக கூறி, சென்னை மாவட்ட இந்து முன்னணி செயலாளர் சிவா விஜயன் மனுத் தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் , போரட்டத்திற்கு அனுமதி கோரி மீண்டும் மனு அளிக்குமாறு இந்து முன்னணி அமைப்புக்கு அறிவுறுத்தினார். அவ்வாறு அளிக்கப்படும் மனுவை பரிசீலித்து அனுமதி அளிக்க உத்தரவிட்ட நீதிபதி ஜி ஜெயச்சந்திரன், விசாரணையை ஆகஸ்ட் 21ம் தேதிக்கு தள்ளிவைத்தார். அதுமட்டுமின்றி எந்தெந்த இடங்களில் அனுமதி அளிக்கப்பட்டது, எந்தெந்த இடங்களில் அனுமதி மறுக்கப்பட்டது என்பது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு அதிரடியாக உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications