ஏடிஎம்களுக்கு போனால் இனி ஹேப்பி தான்.. வங்கிகளுக்கு கடிவாளம் போடுகிறது ஆர்பிஐ.. அதிரடி உத்தரவு
சென்னை : ஏடிஎம்களில் பணம் இல்லை என்றால் வங்கிக்கு அபராதம் விதிக்கும் திட்டத்தை வருகிற அக்டோபர் 1ம் தேதி முதல் நடைமுறைப்படுத்த ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. ஒரு மாத காலத்தில் 10 மணி நேரத்திற்கு மேலாக பணம் நிரப்பப்படவில்லை என்றால் தொடர்புடைய வங்கிக்கு ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏடிஎம்களில் குறிப்பிட்ட வரம்புகளை மீறி அதிக முறை பணம் எடுத்தால் பொதுமக்களுக்கு அதற்கு கட்டணம் விதிக்கப்படுகிறது. வாடிக்கையாளர் கணக்கு வைத்திருக்கும் வங்கி ஏடிஎம் என்றால் ஐந்து முறை இலவசமாக பணம் எடுக்க அனுமதிக்கப்படுகிறது( வங்கிகளை பொறுத்து கொஞ்சம் கூடுதலாகவும் இருக்க வாய்ப்பு உள்ளது).
ஆனால் மற்ற வங்கி ஏடிஎம்களில் 3 அல்லது ஐந்து முறைக்கு மேல் பணம் எடுத்தால் தற்போது 20 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த கட்டணம் வரும் ஜனவரி 1ம் தேதி முதல் 21 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது.

மக்கள் சிரமம்
இதில் சோகமான விஷயம் என்னவென்றால், குறிப்பிட்ட வங்கி ஏடிஎம்களில் பணம் இல்லாததால் அடுத்த வங்கி ஏடிஎம்களில் பணம் எடுப்பவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. கிராமப்புறங்களில் மற்றும் நகர்புறங்களில் இந்த பிரச்சனை அதிகமாக உள்ளது.

500 ரூபாய் நோட்டுகள்
வங்கி ஏடிஎம்களில் பணம் எடுக்க சென்றால் 500 ரூபாய் நோட்டு தான் இருக்கிறது. 100 ரூபாய் இல்லை என்று சொல்லும் சம்பவங்களும் அதிகமாகவே உள்ளது. சென்னை , கோவை போன்ற பெரு நகரங்களில் ஏடிஎம்களில் பணம் சில நேரங்களில் நிரப்பப்படுவது இல்லை. குறிப்பாக சனி மற்றும் ஞாயிறுகளில் இந்த பிரச்சனை அதிகமாகவே இருக்கும். அதேபோல் தொடர் விடுமுறை நாட்களிலும் ஏடிஎம்களில் பணம் நிரப்பப்படாத பிரச்சனை இருக்கிறது.

என்ன தீர்வு
அடுத்த வங்கி ஏடிஎம்களில் அதிக முறை பணம் எடுத்தால் அதற்கு ஜிஎஸ்டி வரியுடன் தனி கட்டணம் வாடிக்கையாளர்கள் கணக்கில் இருந்து எடுக்கலாம் என்று உத்தரவிட்ட ரிசர்வ் வங்கி, சொந்த வங்கி ஏடிஏம்களில் பணம் இல்லாமல் போனால், அதற்கு என்ன தீர்வு என்பதை இதுவரை தெரிவிக்காமல் இருந்தது.

10,000 அபராதம்
இப்போது முதல்முறையாக அதற்கு தீர்வினை உருவாக்க முடிவு செய்துள்ளது.. வங்கி வாடிக்கையாளர்களின் நெடுநாள் கோரிக்கையை ஏற்று அதில் சீர்திருத்தம் கொண்டு வரப்போகிறது. ஏடிஎம்களில் பணம் இல்லை என்றால் வங்கிக்கு அபராதம் விதிக்கும் திட்டத்தை வருகிற அக்டோபர் 1ம் தேதி முதல் நடைமுறைப்படுத்த ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. ஒரு மாத காலத்தில் 10 மணி நேரத்திற்கு மேலாக பணம் நிரப்பப்படவில்லை என்றால் தொடர்புடைய வங்கிக்கு ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications