பேனர்கள் கிழிப்பு.. எம்ஜிஆர், ஜெ. முகத்தில் கீறல்- ஓபிஎஸ் தரப்பா? - தொண்டர்கள் திரண்டதால் பரபரப்பு!
சென்னை : சென்னை வானகரத்தில் நாளை அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற இருக்கும் பகுதியில் எடப்பாடி பழனிசாமி தரப்பினரால் வைக்கப்பட்ட பேனர்கள் கிழிக்கப்பட்டதால் பரபரப்பு நிலவி வருகிறது.
Recommended Video
பொதுக்குழு நடைபெறும் பகுதியில் ஆய்வு நடத்துவதாகச் சொல்லி ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் வந்து சென்ற நிலையில், பேனர்கள் கிழிக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.
ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களால் பேனர்கள் கிழிக்கப்பட்டதாக எடப்பாடி பழனிசாமி தரப்பினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

நாளை பொதுக்குழு
ஒற்றைத் தலைமை விவகாரத்தால் அதிமுகவுக்குள் பெரும் குழப்பங்கள் நிகழ்ந்து வரும் நிலையில், அதிமுக பொதுக்குழுக் கூட்டம் நாளை சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது. இதற்கிடையே, பொதுக்குழுவுக்கு தடை கோரிய வழக்கின் விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் சூடுபறக்க நடந்த நிலையில், இன்னும் சிறிது நேரத்தில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட இருக்கிறது.

ஏற்பாடுகள் தீவிரம்
சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி திருமண மண்டபத்தில் நாளை அதிமுக பொதுக்குழு நடைபெறுவதையொட்டி ஏராளமான வரவேற்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கட் அவுட், பேனர்கள் வைக்கும் பணிகளிலும், அலங்காரப் பணிகளிலும் நூற்றுக்கணக்கானோர் ஈடுபட்டுள்ளனர். எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளரான பெஞ்சமின் தலைமையில் நடக்கும் இந்த பொதுக்குழு ஏற்பாடுகளை முக்கிய நிர்வாகிகள் இன்று ஆய்வு செய்தனர்.

போலீஸ் பாதுகாப்பு
அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளதால் பொதுக்குழுவிற்கு காவல்துறை தீவிர பாதுகாப்பு அளித்து வருகிறது. பொதுக்குழு நடக்கும் இடத்திற்கு 100 மீட்டர் தொலைவுக்கு முன்பாக, பேரிகார்டுகள் போடப்பட்டு, பலத்த சோதனைக்கு பின்பே உள்ளே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். நாளை சோதனைகள் இன்னும் தீவிரப்படுத்தப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

தீவிர சோதனை
ஈபிஎஸ் - ஓபிஎஸ் தரப்பினரின் மோதல் போக்கால் அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க போலீசார் தொடர்ந்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், கார் பார்க்கிங் உள்பட பொதுக்குழு கூட்டம் நடைபெறும் பகுதி முழுக்க வெடிகுண்டு சோதனையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் பொதுக்குழு கூட்டம் நடக்கும் பகுதியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

பேனர் கிழிப்பு
இந்நிலையில், பொதுக்குழு நடைபெறும் இடத்தில் அமைக்கப்பட்டிருந்த பத்துக்கும் மேற்பட்ட பேனர்கள் கிழிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிமுக பொதுக்குழு நடைபெறும் வளாகத்தில் இருந்த எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, ஓ.பி.எஸ், ஈபிஎஸ் பேனர்கள் கிழிக்கப்பட்டுள்ளன. இதனால் அப்பகுதியில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் குவிந்துள்ளனர்.

குற்றச்சாட்டு
ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள், பொதுக்குழு நடக்கும் இடத்தை ஆய்வு செய்வதாக கூறி அங்கு வந்தனர். ஆனால் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. அவர்கள் வந்து சென்ற பின்பு பேனர் கிழிக்கப்பட்டுள்ளதால், ஓபிஎஸ் தரப்பினர் மீது எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications