பவாரியா கேங்கை சேர்ந்த ஜெயில்தார் சிங்கை இன்று குற்றவாளி என அறிவிக்காத நீதிமன்றம்.. யார் இவர்?
சென்னை: முன்னாள் எம்.எல்.ஏ சுதர்சனம் கொலை வழக்கில் கைதான ஜெகதீஷ், ராகேஷ், அசோக் ஆகியோர் குற்றவாளிகள் என சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்துள்ளது. பவாரியா கும்பலைச் சேர்ந்த மற்றொரு குற்றவாளியான ஜெயில்தார் சிங் குறித்து வரும் 24 ஆம் தேதி உத்தரவிடப்படும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது. யார் இந்த ஜெயில்தார் சிங்?
தமிழகத்தில், 1995 முதல் 2005 ஆம் ஆண்டு வரை, பவாரியா கொள்ளை கும்பல் அட்டூழியம் செய்து வந்தது. பல இடங்களில் பல நாட்களாக நோட்டமிட்டு நேரம் பார்த்து நள்ளிரவில் வீடு புகுந்து கொள்ளை அடிப்பதோடு, கொடூரமாக கொலையும் செய்வது பவாரியா கும்பலின் பாணி. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தொகுதி அ.தி.மு.க எம்.எல்.ஏவாக இருந்த சுதர்சனம் உட்பட 13 பேரை கொலை செய்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது பவாரியா கும்பல்.

அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா, கொள்ளையர்களை சுட்டுப்பிடிக்க உத்தரவிட்டு, ஐ.ஜியாக இருந்த ஜாங்கிட் தலைமையில் ஐந்து தனிப்படைகள் அமைத்தார். தனிப்படை போலீசார், ராஜஸ்தான் உள்ளிட்ட வடமாநிலங்களில் முகாமிட்டு, பவாரியா கொள்ளையர்கள் 13 பேரை கைது செய்தனர். உ.பியில் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
பவாரியா கொள்ளையர்கள் 13 பேரில், 4 பேருக்கு விசாரணை நீதிமன்றம் துாக்கு தண்டனை விதித்தது. பின், சென்னை உயர் நீதிமன்றம் அதனை ஆயுள் தண்டனையாக குறைத்தது. அந்த நால்வரில் பவாரியா கொள்ளை கும்பல் தலைவனான ஓம் பிரகாஷ், வேலுார் சிறையில் உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார். மற்ற மூவர், தண்டனை அனுபவித்து வருகின்றனர். 9 பேர் ஜாமினில் வெளியே வந்து விட்டனர்.
பவாரியா கொள்ளை கொல்லை வழக்கில், ஜெயில்தார் சிங் கடந்த 2022 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். 20 ஆண்டுகளாக தேடப்பட்டுவந்த ஜெயில்தார் சிங்கை கைது செய்தனர் தனிப்படை போலீசார். சேலம் காங்கிரஸ் பிரமுகர் தாளமுத்து நடராஜன் வீட்டில் நடந்த கொலை கொள்ளை வழக்கில் ஜெயில் தார்சிங் கைது செய்யப்பட்டிருந்தார். சுதர்சனம் கொலை வழக்கிலும் ஜெயில்தார் சிங் சேர்க்கப்பட்டார்.
இந்நிலையில் சுதர்சனம் கொலை வழக்கில் கைதான ஜெகதீஷ், ராகேஷ், அசோக் ஆகியோர் குற்றவாளிகள் என சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்துள்ளது. மற்றொரு குற்றவாளியான ஜெயில்தார் சிங் குறித்து வரும் 24 ஆம் தேதி உத்தரவிடப்படும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.
ஆசிரியரான ஜெயில்தார் சிங், பவாரியா கும்பல் தலைவரான ஓம் பிரகாஷின் மருமகன். தமிழ்நாட்டில் கொள்ளையடித்துக் கொண்டு சென்று கொடுக்கும் நகைகளை விற்பனை செய்து, அனைவருக்கும் பங்கிட்டு கொடுக்கும் வேலையை இவர்தான் செய்து வந்தார் என காவல்துறையினர் குற்றம் சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications