"கை ரேகை" ஆதாரம்.. வடக்கில் போகாத மாநிலமே இல்ல.. பவாரியா கொள்ளை வழக்கு தீர்ப்பால் ஜாங்கிட் பெருமிதம்
சென்னை: அதிமுக எம்எல்ஏ சுதர்சனம் கொலை வழக்கில் 3 குற்றவாளிகள் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதற்காக தமிழ்நாடு போலீஸ்க்கு முன்னாள் ஐஜி ஜாங்கிட் வாழ்த்து தெரிவித்துள்ளார். பவாரியா கொள்ளையர்களை தேடி வட மாநிலங்கள் முழுக்க தமிழ்நாடு போலீஸ் தேடுதல் வேட்டை நடத்தியதாக கூறிய அவர், கை ரேகை மூலம் கண்டுபிடித்ததாக தெரிவித்துள்ளார்.
அதிமுக முன்னாள் எம்எல்ஏ சுதர்சனம் கொலை வழக்கில் பவாரியா கொள்ளையர்கள் 3 பேர் குற்றவாளிகள் என்று சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 2005ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி வீடு புகுந்து பவாரியா கொள்ளையர்கள் 6 பேர் சுதர்சனத்தை சுட்டுக் கொன்றனர். சுதர்சனத்தை சுட்டுக் கொன்றுவிட்டு வீட்டில் இருந்த 62 சவரன் நகை, பணத்தை கொள்ளையடித்து பவாரியா கும்பல் தப்பியது.

இந்த சம்பவத்தில் பவாரியா கொள்ளையர்கள் 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், அதில் ஓம் பிரகாஷ் என்பவர் உடல்நலக்குறைவால் இறந்தார். இந்த கொள்ளையர்கள் பிடிக்க அப்போதைய ஐஜி ஜாங்கிட் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தீவிரமாக செயல்பட்ட 5 தனிப்படைகள் ஒரே மாதத்தில் கொள்ளையடித்த கும்பல் எந்த மாநிலத்தைச் சேர்ந்தது என்று கண்டுபிடித்தது.
சுதர்சனம் கொலை வழக்கில் 20 ஆண்டுகளுக்கு மேலாக வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த நிலையில் சுதர்சனம் கொலை வழக்கில் பவாரியா கொள்ளையர்கள் 3 பேர் குற்றவாளிகள் என்று தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. தண்டனை விவரங்கள் நவம்பர் 24ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தீர்ப்புக்கு பின் முன்னாள் ஐஜி ஜாங்கிட் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், 20 ஆண்டுகளுக்கு முன் எம்எல்ஏ கொலை செய்யப்பட்ட பின் தான் ஸ்பெஷல் டீம் அமைக்கப்பட்டது. அப்போது கொள்ளையர்களை தேடி வட மாநிலங்களுக்கு சென்றோம். மொத்தமாக 13 பேர் கைது செய்யப்பட்டனர். உத்தரப் பிரதேசத்தில் 2 பேரை என்கவுண்ட்டர் செய்தோம்.
தற்போது குற்றவாளிகள் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு போலீஸ்க்கு என்னுடைய வாழ்த்துக்கள்.. நான் ஓய்வுபெற்று 5, 6 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனாலும் திருவள்ளூர் போலீஸ், பெரியபாளையம் காவல் ஆய்வாளர் ஆகியோர் கடினமாக உழைத்தார்கள். எப்போதும் குற்றவாளிகளை கைது செய்வதோடு, அவர்களுக்கு தண்டவை பெற்றுக் கொடுப்பது மிகவும் முக்கியம். அதற்காக பாராட்டுக்கள்.
எங்களுக்கும், உங்களுக்கும் குற்றவாளிகள் யாரென்று தெரியும். ஆனால் நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டும். நீதிமன்றத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். நல்லபடியாக நிரூபித்து காட்டி இருக்கிறது தமிழ்நாடு போலீஸ். திருவள்ளூரில் இருந்து வட இந்தியா சென்றோம். ஆந்திரா, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் என்று அனைத்து மாநிலங்களுக்கும் சென்றோம்.
இறுதியாக விரல் ரேகை மூலம் கண்டுபிடித்தோம். அதன்பின் ஒவ்வொரு விஷயமாக கண்டுபிடித்தோம். அதில் ஆட்சியில் இருந்தவர்களின் ஆதரவும் இருந்தது. மற்ற மாநில போலீசாரும் ஆதரவு அளித்தார்கள் என்று தெரிவித்துள்ளார். இந்த கதையே தீரன் அதிகாரம் 1 என்று திரைப்படமாக உருவாகியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications