தமிழக அரசியல் வரலாற்றை மாற்றி எழுதிய தவெக! இதெல்லாம் இனி செல்ஃப் எடுக்காது.. கவனிச்சீங்களா!
சென்னை: வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்களை கொடுத்து ஓட்டு வாங்கிவிடலாம் என்றும், அப்படி கொடுப்பதுதான் தேர்தல் அரசியல் என்றும் நார்மலைஸ் செய்யப்பட்டிருந்ததை விஜய் உடைத்து நொறுக்கியிருக்கிறார். அதேபோல சாதி வாக்கு வங்கியில் இத்தனை ஆண்டுகளாக திராவிட கட்சிகள் செய்ய தயங்கிய வேலையை விஜய் தைரியமாக செய்து அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் தொடர்ந்து எண்ணப்பட்டு வருகின்றன. தற்போதைய நிலவரப்படி விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 107 தொகுதிகளில் முன்னிலையில் இருக்கிறது.

மறுபுறம் ஆளும் கட்சியாக இருந்த திமுக, வெறும் 62 இடங்களில் சுருக்கப்பட்டிருக்கிறது. தவெகவின் வெற்றி, தமிழ்நாடு அரசியல் மாற்றமடைந்திருக்கிறது என்பதை உணர்த்தியிருக்கிறது.
அதாவது, திமுக-அதிமுக ஆட்சிக்காலத்தில் தேர்தல் என்றால் சில எழுதப்படாத விதிகள் கடைபிடிக்கப்பட்டு வரும். அதில் முக்கியமானது வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது. வாக்காளர்களுக்கு காசு கொடுப்பது என்பது ரொம்பவே இயல்பாக்கப்பட்ட ஒரு விஷயம். இதில் இடதுசாரிகள் மட்டும் விதி விலக்காக இருந்தனர். இந்த தேர்தலில் விஜய்யின் தவெகவும் பெரிய அளவுக்கு வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கவில்லை. பணம் கொடுக்காமல், பரிசு பொருட்கள் கொடுக்காமல் தேர்தலை எதிர்கொண்டிருந்தது.
தவெக சார்பில் விநியோகத்திற்கு வைக்கப்பட்டிருந்த சில பரிசு பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக செய்திகள் வந்தாலும், பொருட்கள் விநியோகிக்கப்பட்டதாக பெரிய அளவில் நியூஸ் வரவில்லை.
அதேபோல சாதி அரசியல் திராவிட கட்சிகளிடையே ஊறிப்போய் இருந்தது. எந்த தொகுதியில் எந்த சமூகத்தினரின் ஆதிக்கம் அதிகமாக இருக்கிறது என்பதை பார்த்துதான் திராவிட கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்திருந்தன. இந்த தேர்தலிலும் அப்படித்தான் நடந்திருந்தது.
ஆனால், தவெக இந்த மரபை உடைத்து, தலித் வேட்பாளர்களை அதிக அளவில் பொது தொகுதிகளில் நிற்க வைத்தது. இவர்களின் வெற்றியும் ஏறத்தாழ உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதன் மூலம் சாதி அரசியலை தவெக அசைத்து பார்த்திருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். ஆனால், குறிப்பிட்ட சில தொகுதிகளில், அந்த தொகுதியில் ஆதிக்கம் செலுத்தும் சாதிய வேட்பாளர்களையே தவெக நிறுத்தியதாக குற்றச்சாட்டுகளும் உள்ளன.
எப்படி இருப்பினும் சாதியை கடந்து மக்கள் வாக்களிக்கிறார்கள் என்பது பெரிய விஷயம். இனி வரும் தேர்தல்களிலும் இப்படியே நடக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications