தமிழகத்தில் போகி பண்டிகை உற்சாகத்துடன் கொண்டாட்டம்- சென்னையில் கடும் புகை மூட்டம்!
சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அச்சத்துக்கு மத்தியில் போகி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. போகி பண்டிகையின் போது பழைய பொருட்கள் எரிக்கப்படுவதால் சென்னையில் புகைமூட்டம் அதிகரித்துள்ளது.
தமிழர் திருநாளான பொங்கல் விழாவுக்கு முதல் நாள் போகி பண்டிகை கொண்டாடப்படும், பழையன கழிதலும் புதியன புகுதலும் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது.
போகி பண்டிகையை முன்னிட்டு தமிழர்கள் இன்று வீடுகளில் உள்ள பழைய பொருட்களை வீதிகளில் கொட்டி எரித்தனர். நகரங்களில், கிராமங்களில் சிறிய பறைகளை முழங்கியபடி சிறுவர்கள் தெருக்களில் வலம் வந்தனர்.
சென்னையில் போகி பண்டிகையின் போது பழைய பொருட்கள் எரிக்கப்பட்டதால் புகை மூட்டம் அதிகமாக உள்ளது. இதனால் சென்னை நகரில் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டனர்.
Recommended Video
போகி பண்டிகையின் போது வீடுகளில் மாலைகளில் காப்பு கட்டும் நிகழ்வு நடைபெறும். இதற்கான ஆவாரம்பூ உள்ளிட்டவைகளின் விற்பனையும் அமோகமாக நடைபெற்று வருகிறது.
போகி பண்டிகையைத் தொடர்ந்து நாளை பொங்கல் திருநாளும் நாளை மறுநாள் மாட்டுப் பொங்கலும் ஜனவரி 16ல் காணும் பொங்கலும் கொண்டாடப்படுகிறது. பொங்கல் விழாக்களை முன்னிட்டு கிராமங்கள் களைகட்டி உள்ளன.
மேலும் தமிழகத்தின் பல பகுதிகளிலும் பொங்கல் விழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு விழாக்களுக்கும் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.