பூமிதான நிலத்தில் வழிகாட்டி மதிப்பு நீக்கம்.. சொத்து அத்துமீறலில் தமிழக பதிவுத்துறை தந்த சர்ப்ரைஸ்
சென்னை: தமிழகத்தில் பூமிதான இயக்கத்தின் கீழ் பெறப்பட்ட நிலங்களை பாதுகாக்கும் நோக்கில், அந்த நிலங்களுக்கு பதிவுத்துறை இணையதளத்தில் உள்ள வழிகாட்டி மதிப்புகளை நீக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம், பூமிதான இயக்க நிலங்கள் தொடர்பான பத்திரப்பதிவுகளை முழுமையாகத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது... இதுகுறித்து அதிகாரிகள் சொல்வதென்ன? சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.
நிலமில்லாத ஏழை மக்களுக்காக தானமாக வழங்கப்பட்ட நிலங்கள் ஆகும். இந்த இயக்கம் 1951 ஆம் ஆண்டு விநோபா பாவே அவர்களால் தொடங்கப்பட்டது. நிலம் சிலரிடமே குவியக் கூடாது என்ற சமூக நீதி சிந்தனையே இந்த இயக்கத்தின் அடிப்படையாகும்.. பெரும் நில உரிமையாளர்கள் தங்களிடம் இருந்த நிலங்களை தன்னார்வமாக தானமாக வழங்கினார்கள்..

அந்த நிலங்களை அரசு நிலமில்லாத விவசாயிகள், தாழ்த்தப்பட்ட மற்றும் பின்தங்கிய மக்களுக்கு பகிர்ந்து வழங்கியது. இவ்வாறு வழங்கப்பட்ட நிலங்களே பூமிதான இயக்க நிலங்கள். இந்த நிலங்கள் வாழ்வாதாரத்திற்காக மட்டுமே வழங்கப்பட்டவை.
பூமிதான இயக்க நிலங்கள்
பொதுவாக இந்த நிலங்களை விற்கவும் அடகு வைக்கவும் மாற்றம் செய்யவும் சட்ட கட்டுப்பாடுகள் உள்ளன. பல இடங்களில் நிலம் பெற்றவர் தானே விவசாயம் செய்ய வேண்டும் என்ற நிபந்தனை உள்ளது. நிபந்தனைகளை மீறினால் அரசு அந்த நிலத்தை மீண்டும் கைப்பற்றலாம்.
தமிழகத்தில், இந்த இயக்கம், 1956 வரை மேற்கொள்ளப்பட்டதில், ஏராளமானோர் உபரி நிலங்களை ஒப்படைத்தனர். தன்னார்வ இயக்கமாக இருந்த இந்த இயக்கத்தை, ஒரு கட்டத்தில் அரசு தலையிட்டு வாரியமாக மாற்றியது. தமிழ்நாட்டில் பட்டா, சிட்டா, அடங்கல் ஆவணங்களில் "பூமிதானம்" என குறிப்பிடப்பட்டிருக்கும். சமூக சமத்துவம் நிலப் பகிர்வு, ஏழைகளின் முன்னேற்றம் என்பதே பூமிதான இயக்கத்தின் முக்கிய நோக்கமாக இருந்து வருகிறது.
தமிழக பதிவுத்துறை
இந்நிலையில், பூமிதான இயக்க நிலங்களை பாதுகாப்பதில் ஏற்பட்ட கவனக்குறைவு காரணமாக, தமிழகத்தில் மொத்தம் 28,050 ஏக்கர் நிலங்கள் பெறப்பட்ட நிலையில், அவை பல்வேறு பகுதிகளில் பரவலாக காணப்படுவதாக கூறப்படுகிறது.
வருவாய் துறையினரின் போதிய கண்காணிப்பு இல்லாததால், இந்த நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.
பூமிதான இயக்க நிலங்கள்
குறிப்பாக, முந்தைய தலைமுறையினர் தானமாக வழங்கிய நிலங்களை, அவர்களுடைய அடுத்த தலைமுறையினர் மீண்டும் ஆக்கிரமித்து பயன்படுத்துவது போன்ற சம்பவங்கள் நடைபெறுவதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், சில இடங்களில் இந்த நிலங்களை ஆக்கிரமித்தவர்கள், மூன்றாம் நபர்களுக்கு விற்பனை செய்வதும் நடந்து வருகிறது.
இதனால், விபரம் அறியாமல் இந்நிலங்களை வாங்கும் பொதுமக்கள், பட்டா மாற்றம் செய்யும் போது தான் உண்மையான நிலைமை தெரியவருவதால் கடும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். இத்தகைய பிரச்னைகளால் பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருக்கவும், பூமிதான இயக்க நிலங்களை பாதுகாக்கவும் தமிழக அரசு தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
ஏக்கர் கணக்கில் நிலம் ஒதுக்கீடு
இதுகுறித்து, வருவாய் துறை உயரதிகாரி ஒருவர் சொல்லும்போது, "'பூமிதான இயக்க வாரியத்திற்கு சொந்தமான நிலங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பெறப்பட்ட நிலங்களை அடையாளம் கண்டு, தகுதியான பயனாளர்களுக்கு ஒதுக்குவதற்கான பணிகளும் நடைபெற்று வருகின்றன.
கடந்த 4 வருஷத்தில், விவசாய பயன்பாட்டுக்காக 122 பேருக்கு 81 ஏக்கர் நிலங்களும், வீடு கட்டி வசிக்க 1,342 பேருக்கு 52 ஏக்கர் நிலங்களும் வழங்கப்பட்டுள்ளது. அரசின் பல்வேறு துறைகளின் பொதுத் திட்டங்களுக்காக 206 ஏக்கர் நிலங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது..
வழிகாட்டி மதிப்பு பூஜ்யம்
எஞ்சியுள்ள பூமிதான இயக்க நிலங்களை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து பாதுகாக்கும் வகையில், அந்த நிலங்களுக்கான வழிகாட்டி மதிப்புகளை நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பதிவுத்துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டு, பூமிதான இயக்க நிலங்களின் வழிகாட்டி மதிப்பை பூஜ்யமாக குறிப்பிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வழிகாட்டி மதிப்புகள் நீக்கப்படுவதன் மூலம், இந்த நிலங்கள் தொடர்பான பத்திரப்பதிவு நடவடிக்கைகள் முற்றிலுமாக தடுக்கப்படும்" என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications