சீமானின் பிடி சென்னையில் நழுவுகிறதா? திமுகவிற்கு செக் வைக்க வந்த விஜய்.. ஆனா கவிழ்ந்தது தம்பிகள் படை
சென்னை: நாம் தமிழர் கட்சியானது, இதுவரை திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாகத் தன்னை முன்னிறுத்தி, ஒவ்வொரு தேர்தலிலும் தனது வாக்கு வங்கியை ஏறுமுகத்தில் வைத்திருந்தது. ஆனால், இந்தத் தேர்தல் ஒரு இக்கட்டான சூழலை உருவாக்கியிருப்பதாக, இதுவரை வெளியாகியுள்ள தேர்தல் பிந்தைய கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் வரவு, சீமானின் அரசியல் நகர்வுகளுக்குப் பெரும் முட்டுக்கட்டையாக மாறியிருப்பது அரசியல் அரங்கில் விவாதங்களை கிளப்பியுள்ளது.
தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதல், விஜய்யின் வருகை ஆளுங்கட்சியான திமுகவிற்கே பெரும் நெருக்கடியைக் கொடுக்கும் என்று பரவலாகப் பேசப்பட்டது. ஆனால், இப்போது வெளியாகியுள்ள பீப்பிள் பல்ஸ் மற்றும் சாணக்யா ஸ்ட்ராட்டஜி போன்ற நிறுவனங்களின் எக்சிட் போல் முடிவுகள் வேறு ஒரு சித்திரத்தைக் காட்டுகின்றன.

தமிழக வெற்றிக் கழகம் சுமார் 18 முதல் 24 இடங்கள் வரை கைப்பற்றக்கூடும் என்றும், 23.6 சதவீத வாக்குகளைப் பெறும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இந்த அதிரடியான வாக்குச் சேகரிப்பு, ஆளுங்கட்சியைக் காட்டிலும் நாம் தமிழர் கட்சியின் "மாற்று அரசியல்" வாக்கு வங்கியையே அதிகம் பாதித்துள்ளதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
3 லிருந்து 4-க்கு சறுக்கிய சீமான்?
கடந்த தேர்தல்களில் எவ்விதக் கூட்டணியுமின்றி தனித்துப் போட்டியிட்டு, கணிசமான வாக்குகளைப் பெற்று தமிழகத்தின் மூன்றாவது பெரிய சக்தியாக உருவெடுத்தார் சீமான்.
இளைஞர்கள் மற்றும் புதிய வாக்காளர்களின் வாக்குகளே சீமானின் பலமாக இருந்தது. ஆனால், அதே இளைஞர் பட்டாளத்தையும், புதிய வாக்காளர்களையும் குறிவைத்து களமிறங்கிய விஜய், சீமானின் கோட்டையில் கைவைத்திருப்பதாகத் தெரிகிறது. இதுவரை வந்த எக்சிட் போல் முடிவுகளின்படி, நாம் தமிழர் கட்சி தனது மூன்றாவது இடத்தைப் பறி கொடுத்து, நான்காவது இடத்திற்குத் தள்ளப்படும் சூழல் உருவாகியுள்ளது. இது சீமானின் அரசியல் பயணத்தில் ஒரு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.
விஜய் கொடுத்த "செக்" - யாருக்கு
"விஜய் வந்தால் திமுகவிற்குத்தான் செக் வைப்பார்" என்று அரசியல் விமர்சகர்கள் கணித்தனர். ஆனால், கள நிலவரப்படி திமுக கூட்டணி 160 இடங்களுக்கும் மேல் பெற்று ஆட்சியைத் தக்கவைக்கும் நிலையிலேயே உள்ளது. அதிமுகவும் தனது வாக்கு வங்கியைத் தக்கவைக்கப் போராடி வருகிறது.
ஆனால், யாருடைய தயவுமின்றி வளர்ந்து வந்த நாம் தமிழர் கட்சிக்குத்தான் விஜய்யின் வருகை மிகப்பெரிய சவாலாக முடிந்துள்ளது. நடுநிலை வாக்காளர்களும், திராவிடக் கட்சிகள் மீது அதிருப்தியில் இருந்த இளைஞர்களும் சீமானை நோக்கிச் சென்ற நிலை மாறி, இப்போது விஜய்யை நோக்கித் திரும்பியிருப்பதை எக்சிட் போல் முடிவுகள் உறுதிப்படுத்துகின்றன.
சீமானின் எதிர்கால வியூகம்
இந்தக் கணிப்புகள் உண்மையானால், நாம் தமிழர் கட்சி தனது தேர்தல் வியூகத்தை முற்றிலுமாக மாற்றியமைக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படும்.
விஜய்யின் வருகை தற்காலிகமான அலையா அல்லது நிரந்தர மாற்றமா என்பது ஒருபுறம் இருக்க, சீமான் தனது தீவிரமான கொள்கை பரப்புரைகளைத் தாண்டி, தேர்தல் அரசியலில் வாக்குகளைத் தக்கவைக்க இன்னும் முதிர்ச்சியான அணுகுமுறையைக் கையாள வேண்டும் என்பதே அரசியல் நோக்கர்களின் கருத்தாக உள்ளது.
தமிழக அரசியல் களம் இப்போது 4 முனைப் போட்டியை நோக்கி நகர்ந்துள்ளது. இதில் விஜய்யால் திமுகவிற்குச் சிக்கல் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், உண்மையில் அது நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சிக்குத்தான் முட்டுக்கட்டையாக அமைந்திருக்கிறது என்பதுதான் இந்தத் தேர்தலின் மிகப்பெரிய திருப்பமாக இருக்க போகிறதோ தெரியவில்லை.
வாக்கு எண்ணிக்கையின்போது, அதிகாரப்பூர்வ முடிவுகள் வரும்போது, சீமானின் அரசியல் எதிர்காலம் மற்றும் விஜய்யின் தாக்கம் குறித்த முழுமையான உண்மை நிலவரம் தெரியவரும்...!!!












Click it and Unblock the Notifications