பேச மாட்டீங்களா.. "உள்துறைக்கு" உத்தரவிடட்டுமா.. ஆர்டர்லி சிஸ்டம் குறித்து டிஜிபிக்கு நீதிபதி உத்தரவு
டிஜிபி சைலேந்திர பாபுவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது
சென்னை: "ஆர்டர்லி முறையை ஒழிக்க ஒரே ஒரு வார்த்தை போதும்.. ஆனால் அந்த வார்த்தை அரசிடமிருந்தோ, காவல்துறை தலைவரிடமிருந்தோ வருவதில்லை.. நாட்டின் 75ஆவது சுதந்திர தினத்திலும் ஆங்கிலேய ஆர்டர்லி முறையை பின்பற்றுவது வெட்கக்கேடானது என்று சென்னை உயர்நீதிமன்றம் காவல்துறைக்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளது
காவல்துறையில் பணியாற்றும் யு.மாணிக்கவேல் என்பவர் வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டதையடுத்து, காவலர் குடியிருப்பில் அவருக்கு ஒதுக்கப்பட்ட வீட்டை காலி செய்யும்படி 2014ம் ஆண்டு அனுப்பப்பட்ட நோட்டீசை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், 2014 ம் ஆண்டிலேயே இடத்தை காலி செய்யுமாறு காவல்துறை உத்தரவிட்டும், அதை உயர் நீதிமன்றம் உறுதி செய்த பிறகும், இந்த ஆண்டு தான் இடத்தை காலி செய்திருப்பதாகவும், ஆனாலும் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது குறித்து கேள்வி எழுப்பினார்...

ஆர்டர்லி
உயர் அதிகாரிகள் அவர்கள் கீழ் உள்ளவர்களை கட்டுப்படுத்த இயலாவிட்டால், நன்மதிப்பை இழக்கவும் நேரிடும் என தெரிவித்ததுடன், உயர் அதிகாரிகளின் வீடுகளில் ஆர்டர்லி, வாகனங்களில் கருப்பு ஸ்டிக்கர், சொந்த வாகனங்களில் அரசு முத்திரை போன்ற விவகாரங்கள் குறித்தும் நீதிபதி சுப்ரமணியம் விசாரித்து வருகிறார். அந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் இதற்கு பதில் அளிக்கப்பட்டது..

எஸ்பிக்கள் மாநாடு
அதில், 19 ஆர்டர்லிக்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளதாகவும், சர்வதேச சதுரங்க ஒலிம்பியாட் போட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளில் கவனம் செலுத்தியதால், சற்று தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர் மாநாட்டிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

குறுக்கிட்ட நீதிபதி
அப்போது நீதிபதி குறுக்கிட்டு, 19 ஆர்டர்லிகள் தான் திரும்பப் பெறப்பட்டுள்ளனரா? என்று கேள்வி எழுப்பினார்.. பிறகு தொடர்ந்து நீதிபதி பேசும்போது, நாம் ஒன்றும் ராஜா ராணி கிடையாது, நாட்டின் அனைத்து குடிமக்களும் ராஜா, ராணிக்கள் தான்.. நாம் அனைவரும் மக்கள் சேவகர்கள் தான். முதன்மை செயலாளர் முறையாக செயல்பட வேண்டும். வெறும் எச்சரிக்கை மட்டும் போதாது. நடவடிக்கையும் அவசியம் எடுக்க வேண்டும்.. மக்களுடன் நேரடி தொடர்பில் இருக்கும் காவல்துறைக்கு ஒழுக்கம் மிக முக்கியமானது.. 75வது சுதந்திர தினம் கொண்டாடும் நிலையில் ஆங்கிலேய ஆர்டர்லி முறையை இன்னும் பின்பற்றுவது வெட்கக்கேடானது..

ஒரே ஒரு வார்த்தை
சட்ட விரோதமாக தங்கியிருந்த எம்பிக்களையே காலி செய்ய உச்ச நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கும் வேளையில், இங்கு சீருடை அணிந்த காவல்துறையினர் சட்டவிரோதமாக காவலர் குடியிருப்பில் தங்கி இருப்பதை தடுக்க முடியவில்லை.. ஆர்டர்லிகளாக உள்ளவர்கள் இது குறித்து எதுவும் பேசமாட்டார்கள்.. ஆர்டர்லி முறையை ஒழிக்க ஒரே ஒரு வார்த்தை போதும்.. ஆனால் அந்த ஒரு வார்த்தை, அரசிடமிருந்தோ, காவல்துறை தலைவரிடமிருந்தோ வருவதில்லை.

கறுப்பு ஸ்டிக்கர்
ஆர்டர்லிகளை வைத்திருக்கக் கூடாது என்கிற தமிழக உள்துறை முதன்மை செயலாளாரின் உத்தரவை பின்பற்றவில்லை என்றால், சம்பந்தப்பட்ட ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க மத்திய உள்துறைக்கு உத்தரவிட நேரிடும்.. ஆர்டர்லிகளை திரும்ப ஒப்படைப்பது உயர் அதிகாரிகளுக்கு சிரமமாக இருக்கும் தான்.. ஆனாலும் மதித்து நடக்க வேண்டும்.. அவர்களுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.
உயர் அதிகாரிகளின் வாகனங்களில் கருப்பு ஸ்டிக்கர் அகற்றுவது தொடர்பான நடவடிக்கைகள் ஏனன் ஆனது என்று அடுத்த கேள்வியை எழுப்பினார் நீதிபதி.

அப்பாயிண்ட்மென்ட்
அதற்கு காவல்துறை தரப்பில், சட்டம் ஒழுங்கு நிலைநாட்டுவது, புகார்களில் நடவடிக்கை என செயல்பட்டு வருகிறது.. 24 மணி நேரம் கூட போதவில்லை.. முகாம் அலுவலகத்தில் இருக்கும் காவலர்களை ஒழுங்குபடுத்தி வருகிறோம். இந்தாண்டு மட்டும் 1000 காவலர்கள் பணி நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.. 24 மணி நேர ரோந்து பணியிலும் காவலர்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள் என்று நீதிபதிக்கு விளக்கம் தரப்பட்டது. இதையடுத்து, நீதிபதி பிறப்பித்த தன் உத்தரவில், "காவல்துறையின் பணியை பாராட்டுகிறேன்.. அதற்காக தமிழகம் போன்ற முன்னேறிய மாநிலத்தில் ஆர்டர்லி முறை இருப்பது ஏற்றுக்கொள்ள முடியாது.

டிஜிபி
அரசு ஒரு உத்தரவு பிறப்பித்தால் அது பின்பற்றப்பட வேண்டும். ஆர்டர்லி பயன்படுத்தும் காவல் உயரதிகாரிகளை கேள்வி கேட்க மக்களுக்கும் உரிமை உள்ளது" என்றார்.. பின்னர், இந்த வழக்கில் டிஜிபி-யை எதிர் மனுதாரராக சேர்த்த நீதிபதி, ஆர்டர்லி முறை ஒழிப்பு தொடர்பாக தமிழக உள்துறை முதன்மை செயலாளர் பிறப்பித்த உத்தரவை செயல்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு, இந்த வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 18ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.












Click it and Unblock the Notifications