படக்னு தகனமேடை சிதையிலிருந்து எழுந்து உட்கார்ந்த வீரர்! பீகாரில் ஆச்சரியம்! சினிமாவை மிஞ்சிய அதிசயம்
சென்னை: இந்த உலகம் எந்த அளவுக்கு போலியானது? தன்னை சுற்றியிருப்பவர்கள் அனைவரும் நல்லவர்களா? உறவுகளும், சொந்தங்களும், ரத்த பந்தங்களும் தன்னிடம் உண்மையாகவே பழகுகிறார்களா? அல்லது போலியாக பழகுகிறார்களா? என்பதை தெரிந்து கொள்ள ஒருவர் ஆசைப்பட்டார்.. இதற்காக விபரீதமான முயற்சியிலும் ஈடுபட்டுள்ளார்.. அதுகுறித்து இங்கே விரிவாக பார்க்கலாம்.
பீகார் மாநிலம் கயாவை சேர்ந்தவர் மோகன் லால்.. இவருக்கு 74 வயதாகிறது.. முன்னாள் விமானப்படை வீரர் ஆவார்.. இவருக்கு 2 மகன்களும், ஒரு மகளும் இருக்கிறார்கள்.. ஓரளவு சொத்துக்களை சேர்த்து வைத்துள்ளார்.. தன்னுடைய ஊருக்கும் தர்ம காரியங்கள் சிலவற்றை செய்திருக்கிறார்.

சொத்துக்கள் - வாரிசு
இந்நிலையில், மோகன்லாலுக்கு திடீரென ஒரு சந்தேகம் எழுந்துள்ளது. அதாவது, சொத்துக்காகத்தான் தன்னிடம் உறவுகள் நெருங்கி பழகுகிறார்களா? தான் இறந்துவிட்டால் துடிதுடித்து அழுவார்களா? அல்லது இறந்தது லாபம் என்று நினைப்பார்களா? தன்னுடைய இறப்பு உண்மையிலேயே யாரை அதிகமாக பாதிக்கும்? என்பதையெல்லாம் தெரிந்து கொள்ள விரும்பினார்.
இதற்காக இறந்தது போல நடிக்கலாம் என்று முடிவு செய்தார். பிணம் போல படுத்துக் கொண்டு, அங்கே நடப்பதை நேரிலேயே கண்காணிக்கவும் திட்டமிட்டார்.
சவம் போல கிடந்தார்
தான் இறப்பதற்கான நாளை குறித்தார்.. அவர் எதிர்பார்த்தபடியே, மோகன் லால் இறந்துவிட்டார் என்ற தகவல் ஊரெல்லாம் பரவியது.. உறவுகள், நண்பர்கள், சொந்தக்காரர்கள் என்று பலரும் திரண்டு வந்தனர்.. சடலமாக படுத்து கிடந்த மோகன்லாலை கண்டு கதறி கதறி அழுதார்கள்.. கண்களை மூடிக் கொண்டு என்ன நடக்கிறது என்பதை கவனித்து கொண்டேயிருந்தார் மோகன்லால்.
மற்றொரு பக்கம் இறுதிச்சடங்குகளுக்கான ஏற்பாடுகள் நடந்தன. அந்த ஊருக்கு ஏற்கனவே மோகன்லால் தகன மேடையை இலவசமாக கட்டி தந்துள்ளார்.. எனவே அதே இடத்துக்கு மோகன் லாரையும் பாடையில் வைத்து எடுத்து சென்றார்கள்..
சிதையிலிருந்து எழுந்தார்
பிள்ளைகள் 3 பேரும் தங்களது இறுதி சடங்குகளை செய்தார்கள்.. மோகன்லாலின் உடல் சிதையின் மேல் வைக்கப்பட்டது. கடைசியாக சிதைக்கு தீ வைக்க மகன் முன்வந்தார்.. அப்போதுதான் மோகன் லால் உடல் லேசாக அசைந்தது.. கண்களின் இமைகளும் துடித்தன.. சிதையிலிருந்த குபீரென எழுந்து, அதே சிதையின் மீது எழுந்து உட்கார்ந்து கொண்டார் மோகன்லால்.
இதை பார்த்ததும் சிலர் அலறியடித்து கொண்டு ஓடினார்கள்.. சிலர் அங்கேயே நின்று அதிர்ச்சியில் நின்றனர்.. பிறகு தகன மேடையிலிருந்து எழுந்து வந்த மோகன்லால், நடந்த விஷயத்தை ஊர் மக்களிடம் சொன்னார்.. இதைக்கேட்டதும் அனைவருமே, அதற்கு மேல் அதிர்ச்சி அடைந்தனர்.. மோகன்லால் இப்படி செய்தது எரிச்சலையும், கடுப்பையும் தந்தாலும், அவர்மீது கொண்ட மரியாதையால் யாரும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
பரபரப்பு, சலசலப்பு
பெரும்பாலும், இறந்தவர் உயிருடன் திரும்பி வந்தார் என்பது போல செய்திகள் பத்திரிகைகளில் வருவதுண்டு. அவ்வளவு ஏன்? இறுதிச் சடங்குகள் நடத்தப்பட்டு, சுடுகாடு வரை சென்றபிறகும்கூட, உயிர் பிழைத்த ஆச்சரியம் பலமுறை நிகழ்ந்திருக்கிறது..
ஆனால், பீகாரில் முன்னாள் விமானப்படை வீரர், உயிரிழந்தது போல் நாடகமாடி தனக்குத் தானே இறுதிச்சடங்கு நடத்தி கொண்டு, கடைசி நேரத்தில் சிதையிலிருந்து எழுந்து வந்த சம்பவம் பெரும் சலசலப்பையும், பரபரப்பையும் பீகாரில் ஏற்படுத்தி வருகிறது. இணையத்திலும் இந்த சம்பவம் வைரலாகி கொண்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications