மாநில வளர்ச்சி குழு துணைத் தலைவராக ஜெயரஞ்சன்- தமிழக பொருளாதார மாற்றம் குறித்து 65 ஆய்வு பணிகள்!
சென்னை: தமிழக அரசின் மாநில வளர்ச்சி குழுவின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள பொருளாதார அறிஞர் பேராசிரியர் ஜெ. ஜெயரஞ்சன், தமிழக பொருளாதார மாற்றங்கள் தொடர்பாக 65 ஆய்வுப் பணிகளை மேற்கொண்டவர்.
தமிழகத்தில் செயல்பட்டு வந்த மாநில திட்டக் குழுவானது கடந்த ஆண்டு மாநில வளர்ச்சி குழு என சீரமைக்கப்பட்டது. இந்த வளர்ச்சி குழுவானது முதல்வர் தலைமையின் கீழ் செயல்படும்.
தற்போது மாநில வளர்ச்சி குழுவின் துணைத் தலைவர், முழு நேர, பகுதி நேர உறுப்பினர்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நியமித்துள்ளார். இதன் துணைத் தலைவராக பேராசிரியர் ஜெ. ஜெயரஞ்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.

பொருளாதார வல்லுநர் ஜெயரஞ்சன்
சென்னை வளர்ச்சி நிறுவனத்தில் (MIDS) முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டவர். கடந்த 35 ஆண்டுகளாக தமிழகப் பொருளாதார மாற்றங்கள் தொடர்பாக ஏறத்தாழ 65 ஆய்வுப் பணிகளை மேற்கொண்டவர். 50-க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை பிரபல ஆய்வு இதழ்களில் வெளியிட்டுள்ளார். பல்வேறு இந்திய ஆய்வு நிறுவனங்கள், சர்வதேச ஆய்வு நிறுவனங்களுக்காக ஆய்வுகள் மேற்கொண்டவர்.

பல்கலை. பேரா. ராம. சீனுவாசன்
சென்னை பல்கலைக் கழகத்தில் பொருளாதார அளவியல் துறை பேராசிரியராக பணிபுரிகிறார் ராம. சீனுவாசன். பொருளியல் பாடத்தில் முனைவர் பட்டம் பெற்றார். 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை தமிழக அரசின் திட்டக் குழுவில் உறுப்பினராக இருந்தார். அதில் முதல் 2 ஆண்டுகள், முழு நேர உறுப்பினராக இருந்தார். 2017-2020-ல் சென்னை பல்கலைக் கழகப் பதிவாளராக பணியாற்றினார். தற்போது சென்னை பல்கலைக் கழக ஆராய்ச்சி பிரிவு டீன், பல்கலைக் கழக ஆட்சி மன்ற குழு உறுப்பினராக உள்ளார்.

பேரா ம. விஜயபாஸ்கர்
சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தில் (MIDS) பேராசிரியராகப் பணியாற்றுகிறார். அனைத்துலக தொழிலாளர் அமைப்பு (ஐ.எல்.ஓ), யுனிசெப், UNRISD ஆகியவற்றின் ஆலோசகராகப் பணியாற்றியவர். டெல்லி ஜே.என்.யூ.வில் பொருளியலுக்கான முனைவர் பட்டம் பெற்றவர்.

தீனபந்து ஐ.ஏ.எஸ் (ஓய்வு)
1982-ம் ஆண்டு ஆட்சிப் பணி அலுவலலர் தீனபந்து. பொருளாதாரத்தில் எம்.ஏ, எம்.பில் பட்டங்கள் பெற்றவர். ஆட்சிப் பணியில் சேருவதற்கு முன்பாக ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் பொருளாதார ஆய்வுத் துறையில் பணியாற்றினார். தமிழக அரசில் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, குடிநீர் வாரியம், கல்வித்துறை, மருத்துவம், நகராட்சி நிர்வாகம் என நீண்ட பணி அனுபவம் கொண்டவர். இலங்கை அகதிகளுக்கு வீட்டு திட்டம், கல்வி உதவி தொகை திட்டம்; சென்னை மாநகராட்சி எல்லை விரிவாக்கம், ராமநாதபுர, ஒக்கேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம், பாதாள சாக்கடை திட்டங்கள் ஆகியவை இவரது காலத்தில் நடைபெற்றன.

பகுதிநேர உறுப்பினர்கள்
பேராசிரியர் டாக்டர் சுல்தான் அஹ்மத் இஸ்மாயில், சுற்றுச் சூழல் அறிவியல் அறக்கட்டளையின் முன்னாள் இயக்குநர்; சர்வதேச அளவில் பல விருதுகளைப் பெற்றவர். 28 ஆண்டுகளுக்கு மேலாக சித்த மருத்துவராக பணியாற்றி வருபவர் கு. சிவராமன்; TAFE லிமிடெட் எனும் வேளாண் கருவிகள் உற்பத்தி செய்யும் நிறுவனத்தின் தலைவர், நிர்வாக இயக்குநர் மல்லிகா சீனிவாசன். இந்தியாவின் முன்னோடி திட்டம் என பாராட்டப்பட்ட உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை திட்ட ஒருங்கிணைப்பாளராக பணியாற்றியவர் டாக்டர் அமலோற்பவநாதன். மன்னார்குடி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் டி.ஆர்.பி. ராஜா.

திருநங்கை நடனக் கலைஞர் நர்த்தகி நட்ராஜ்
தனது நளினமான நடனத்தால் உலகம் முழுவதும் எண்ணற்ற ரசிகர்களை பெற்றவர். நாட்டின் உயரிய விருதான பத்மஶ்ரீ விருது பெற்ற முதல் திருநங்கை நடனக் கலைஞர். தஞ்சாவூர் நடனமுறைகளை வழங்கி வருகிறார்.












Click it and Unblock the Notifications