பேராயர் எஸ்றா சற்குணம் பிறந்தநாள்! வீடு தேடிச் சென்று வாழ்த்துக் கூறிய முதலமைச்சர் ஸ்டாலின்!
சென்னை: பேராயர் எஸ்றா சற்குணத்தின் 85வது பிறந்தநாளையொட்டி அவரை நேரில் சென்று சந்தித்து வாழ்த்துக் கூறியிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.
இந்திய சமூகநீதி இயக்கத்தின் தலைவரும், இவாஞ்சலிகல் சர்ச் ஆஃப் இந்தியாவின் பேராயருமான எஸ்றா சற்குணம் கருணாநிதி, ஸ்டாலின், விசிக தலைவர் திருமாவளவன், தேமுதிக தலைவர் விஜயகாந்த், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ என பல அரசியல் தலைவர்களுக்கு நெருக்கமானவராக அறியப்படுபவர்.

தேர்தல் நேரங்களில் கூட்டணிப் பேச்சுவார்த்தைக்கான தூதுவராகவும் இவர் பல தருணங்களில் இருந்திருக்கிறார். திமுக கூட்டணியில் தேமுதிகவை கொண்டு வருவதற்கான முயற்சிகளில் கடந்த காலங்களில் ஈடுபட்டவர். ஆனால் அந்த முயற்சி பலிக்கவில்லை, அது தனிக்கதை.
ஆண்டுதோறும் ஜூலை 19ஆம் தேதி பிறந்தநாள் கொண்டாடும் எஸ்றா சற்குணத்துக்கு அரசியல் கட்சித் தலைவர்களிடம் இருந்து வாழ்த்துக்கு பஞ்சமிருக்காது. அதிலும் குறிப்பாக முதலமைச்சர் ஸ்டாலினும், திருமாவளவனும் நேரடியாக எஸ்றா சற்குணத்தின் வீட்டுக்கே சென்று அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக் கூறுவது வழக்கம்.

அந்த வகையில் இந்தாண்டு தனது 85வது பிறந்தநாள் விழாவை கொண்டாடும் எஸ்றா சற்குணத்தை, கீழ்ப்பாக்கம் இறையியல் கல்லூரி வளாகத்தில் உள்ள அவரது இல்லத்துக்கு சென்று முதல்வர் வாழ்த்து தெரிவித்துள்ளார். அப்போது பிரம்மாண்ட கேக் வெட்டப்பட்டு ஒருவருக்கு ஒருவர் பரிமாறப்பட்டது. தமிழக சிறுபான்மை நல ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ், அமைச்சர்கள் நேரு, பொன்முடி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
பேராயர் எஸ்றா சற்குணத்தின் மகள் கதிரொளி கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து தனது ஆதரவை வழங்கியவர் என்பதும் இப்போது திமுக பக்கம் மாறியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. எஸ்றா சற்குணத்தை பொறுத்தவரை தாம் ஒரு பேராயராக மட்டும் இல்லாமல் அரசியல் குறித்த ஆழ்ந்த ஞானமிக்கவர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications