பெண் மீது கார் மோதிய விவகாரம்- கோவையில் இந்து முன்னணி- பாஜகவினரிடையே பயங்கர மோதல்- அரிவாள் வெட்டு!
கோவையில் இந்து முன்னணி- பாஜக பயங்கர மோதல்!
கோவை: கோவையில் பெண் ஒருவர் மீது கார் மோதிய விவகாரத்தில் இந்துத்துவா அமைப்புகளான இந்து முன்னணி மற்றும் பாஜகவினரிடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இதில் இந்து முன்னணியை சேர்ந்த 3 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இச்சம்பவம் தொடர்பாக 6 பாஜகவினரை போலீசார் தேடி வருகின்றனர்.
கோவையில் இந்துத்துவா அமைப்புகளிடையே மோதல்கள் அவ்வப்போது வெடித்து கொலைகளில் முடிந்திருக்கின்றன. இதில் பல கொலைகள் அரசியல் ரீதியாக வேறு கோணத்திலும் திசை திருப்பப்பட்டிருக்கின்றன.

இந்நிலையில் கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் பெண் ஒருவர் இரு சக்கர வாகனத்தில் வந்துள்ளார். அந்த வாகனம் மீது கார் மோதியது. காரை ஓட்டி வந்த நபருக்கு ஆதரவாக இந்து முன்னணியில் வாக்குவாதம் செய்தனர்.
அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த பெண்ணுக்கு ஆதரவாக பாஜகவினரும் மல்லுக்கட்டியுள்ளனர். இந்த மோதலில் இந்து முன்னணியைச் சேர்ந்த கார்த்திக், ஜெரால்ட், ஹரீஷ் ஆகியோருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதையடுத்து பாஜக நிர்வாகிகள் அங்கிருந்து தப்பி ஓடினர்.
அரிவாள் வெட்டில் படுகாயமடைந்த இந்து முன்னணி நிர்வாகிகள் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் கொடுத்த புகாரின் பேரில் பாஜகவை சேர்ந்த அசோக், ராசு, சண்முக சுந்தரம் , சச்சு உள்ளிட்ட 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மேலும் தப்பி ஓடிய பாஜகவினரை கைது செய்யவும் போலீசார் தீவிரமாக நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இந்துத்துவா அமைப்பினரிடையே மோதல் ஏற்பட்டு அரிவாள் வெட்டு வரை நிகழ்ந்திருக்கும் இச்சம்பவம் கோவையில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications