தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு சிஆர்பிஎஃப் பாதுகாப்பு?
சென்னை: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் பாதுகாப்பை அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
கர்நாடகாவில் காவல் துறையில் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்தவர் அண்ணாமலை. இவர் கரூரை சேர்ந்த சின்னதாராபுரத்தை அடுத்த சொக்கம்பட்டியை சேர்ந்தவர்.
விவசாய குடும்பத்தில் பிறந்தவர். இவர் கர்நாடகாவில் உடுப்பி மாவட்டத்தில் உள்ள கார்கலா துணைப்பிரிவின் உதவி காவல் கண்காணிப்பாளராக தனது காவல் துறை பணியை தொடங்கினார்.

பதவி உயர்வு
பின்னர் அதே பகுதிக்கு எஸ்பியாகவும் பதவி உயர்வு பெற்றார். பின்னர் பெங்களூர் தெற்கு காவல் துணை ஆணையராக பதவி வகித்தார். அவர் உடுப்பி, சிக்மக்ளூரிலிருந்து இடமாற்றம் செய்யப்பட்ட போது மக்கள் வீதிகளில் இறங்கி அழுது அவரைத் தடுக்க முயன்றனர். பாபா புத்கிரி கலவரத்திற்கு எதிரான நடவடிக்கையால் அவர் புகழ் பெற்றார்.

காவல் பணியை ராஜினாமா
கடந்த 2019 ஆம் ஆண்டு தனது காவல் பணியை ராஜினாமா செய்தார். இதையடுத்து தமிழகத்திற்கு வந்தார். இயற்கை விவசாயத்தின் மீது ஈடுபாடு கொண்ட அவர் பாஜகவில் கடந்த 2020 இல் இணைந்தார். இதையடுத்து தமிழக சட்டசபை தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

மத்திய அமைச்சர்
இதையடுத்து தமிழக பாஜக தலைவராக இருந்த எல் முருகன் மத்திய அமைச்சரான பிறகு அண்ணாமலை தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்பட்டார். தமிழக பாஜக தலைவராக இருந்த எல் முருகனின் முயற்சியால் இன்று 4 எம்எல்ஏக்கள் தமிழக சட்டசபையினுள் சென்றதாக கூறுகிறார்கள்.

2026 இல் தமிழகத்தில் ஆட்சி
அது போல் அடுத்த 2026 ஆம் ஆண்டு தமிழகத்தில் பாஜக ஆட்சி ஏற்படும் என தற்போதைய தலைவர் அண்ணாமலை அடித்து கூறுகிறார். மேலும் அதற்கான பணிகளை தாம் தொடங்கிவிட்டதாகவும் அவர் கூறி வருகிறார். இவர் மீது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அதீத நம்பிக்கை வைத்துள்ளார்.
Recommended Video

அண்ணாமலைக்கு மத்திய அரசு பாதுகாப்பு
அண்ணாமலையின் செயல்பாட்டால், தமிழக அரசியலில் அவருக்கு அதிக அளவில் எதிர்பார்ப்புகள் உள்ளன. இவர் மீது தாக்குதல் நடத்தவும் வாய்ப்புள்ளதாக அமித்ஷாவுக்கு உளவுத் துறையினர் அறிக்கை அளித்துள்ளனர். இதன் பேரில் அண்ணாமலைக்கு மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் பாதுகாப்பு அளிக்க அமித்ஷா உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications