பயங்கரவாத செயல்னு சொல்ல ஏன் இவ்ளோ தயக்கம்.. சாதாரண சிலிண்டர் வெடிப்புக்கா என்ஐஏ விசாரணை? பாஜக விளாசல்
சென்னை: கோவையில் கார் வெடிப்பு சம்பவத்தை என்ஐஏ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்ட அறிக்கையில் பயங்கரவாத செயல் என குறிப்பிடாதது ஏன் என்றும் ஒரு சாதாரண சிலிண்டர் வெடித்ததற்காக என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டது என்றும் தமிழக பாஜக துணை தலைவர் நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து பாஜக நாராயணன் திருப்பதி வெளியிட்ட தனது ட்விட்டர் பதிவில், கோவை பயங்கரவாத சம்பவத்தை NIAவுக்கு மாற்றி பரிந்துரைத்த
@CMOTamilnadu அவர்களின் உத்தரவை படிக்க நேர்ந்தது. அந்த முழு அறிக்கையிலும் 'கார் சிலிண்டர் வெடிப்பு' என்றே குறிப்பிட்டுள்ளது வியப்பையளிக்கிறது.எந்த இடத்திலும் பயங்கரவாத அல்லது தீவிரவாத செயல் போன்ற வார்த்தைகள் இடம்பெறாதது.
தமிழக அரசு இந்த சம்பவத்தை காரில் சிலிண்டர் வெடித்த சாதாரண சம்பவமாக தான் கருதுகிறது என்பதை உரக்க சொல்கிறது. தமிழக அரசுக்கு நம் கேள்விகள்! ஒரு சாதாரண சிலிண்டர் வெடித்த வழக்கை NIA விசாரணைக்கு மாற்ற வேண்டியது எதற்காக? ஒரு சாதாரண சிலிண்டர் வெடித்ததற்கு கோவை மாவட்ட பாதுகாப்பை பலப்படுத்த வேண்டிய அவசியம் என்ன?

சிலிண்டர் வெடித்த வழக்கு
ஒரு சாதாரண சிலிண்டர் வெடித்த வழக்கு என்று தமிழக அரசு கருதுமேயானால், மாநிலம் தாண்டிய பரிமாணங்களும், பன்னாட்டு தொடர்புகளும் வாய்ப்பு இருப்பதாக மாநில அரசு கருதுவதேன்? ஒரு சாதாரண சிலிண்டர் வெடித்ததற்காக மூன்று காவல் நிலையங்களை கோவை நகரில் உடனடியாக அமைத்திட தேவை என்ன?

சிறப்பு படை ஏன்
ஒரு சாதாரண சிலிண்டர் வெடித்ததற்காக ஒரு சிறப்பு படையினை உருவாக்க முடிவெடுத்தது ஏன்? ஒரு சாதாரண சிலிண்டர் வெடித்த வழக்கையடுத்து கூடுதல் உளவு பிரிவு அதிகாரிகள் நியமனம் ஏன்? மேலும், இது போன்ற 'சட்ட விரோத' செயல்களில் ஈடுபடுவோரை பற்றி நுண்ணிய தகவல்களை அளிப்போருக்கு பாதுகாப்பு அளிக்கப்படும் என்றும் கூறியுள்ளார் முதல்வர். ஒரு மிகப்பெரும் பயங்கரவாத தாக்குதல் தவிர்க்கப்பட்டிருக்கிற நிலையில் அதை 'பயங்கரவாத அல்லது தீவிரவாத செயல்' என்று குறிப்பிடாமல் மிகச் சாதாரணமாக சட்ட விரோத செயல் என்று கழுவும் மீனில் நழுவும் மீனாக குறிப்பிட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

மத அடிப்படைவாதம்
மத அடிப்படைவாதம், பயங்கரவாதம், தீவிரவாதம், தேசபாதுகாப்புக்கு அச்சுறுத்தல், வெடி பொருட்கள் போன்ற வார்த்தைகள் தவிர்க்கப்பட்டு. 'சட்ட விரோதம், சிலிண்டர் வெடிப்பு' என்று கவனமாக தயாரிக்கப்பட்டுள்ளது தமிழக அரசின் அறிக்கை. நம்மை நாமே ஏமாற்றி கொள்ளக்கூடாது என்பதை முதல்வர்
@mkstalin அவர்கள் உணர வேண்டும். நடந்திருப்பது படு பயங்கரமான திட்டமிட்ட பயங்கரவாத நடவடிக்கை. கோவை மாநகரத்தில் தீபாவளி பண்டிகையின் போது பொது மக்கள் மீது நடைபெறவிருந்த திட்டமிட்ட மிக பெரிய தாக்குதல் நடவடிக்கை. எல்லாம் வல்ல.

இறைவன் அருள்
இறைவன் அருளால் தவிர்க்கப்பட்டிருக்கிறது.
இதை வேரோடும், வேரடி மண்ணோடும் அகற்ற வேண்டிய மாபெரும் கடமையும், பொறுப்பும் தமிழக அரசுக்கு உள்ளது. இந்த விவகாரத்தில் இது வரை தி மு கவின் அதிகாரபூர்வ நிலைப்பாட்டினை, கண்டனத்தை வெளிப்படையாக தெரிவிக்காததிலிருந்தே இந்த அறிக்கை ஏன்? மிக கவனமாக சில வார்த்தைகளை தவிர்த்திருக்கிறது என்பதை அறிய முடிகிறது. தமிழகம் அமைதியான ஆன்மீக பூமி. இங்கே பயங்கரவாதத்திற்கு இடமில்லை. மத அடிப்படைவாதத்திற்கு இடமில்லை. அதே போல் போலி மதசார்பின்மைவாதிகளுக்கும் இடமில்லை. இவ்வாறு நாராயணன் திருப்பதி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications