செக் வைத்த எடப்பாடி பழனிசாமி! அண்ணாமலை அப்செட்? தமிழக பாஜக வேட்பாளர் தேர்வு கூட்டத்தில் மிஸ்ஸிங்!
சென்னை:தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் யார் யார் என்பது குறித்து தேர்வு செய்ய பாஜக தேசிய அமைப்பு பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் அண்ணாமலை பங்கேற்காதது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
வரும் தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ள பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் எவை எவை என்பது வெளியாகிவிட்டது.

அது போல் அதிமுக போட்டியிடும் தொகுதிகள், வேட்பாளர்கள் கொண்ட முதல் கட்ட பட்டியலும் வெளியாகிவிட்டது.
மயிலாப்பூர்
தளி
மொடக்குறிச்சி
உதகை
அவிநாசி
திருப்பூர் தெற்கு
கோவை வடக்கு
கந்தர்வகோட்டை
புதுக்கோட்டை
திருப்பத்தூர்
மதுரை தெற்கு
சாத்தூர்
திருச்செந்தூர்
வாசுதேவநல்லூர்
ராதாபுரம்
நாகர்கோவில்
விளவங்கோடு
ஆவடி
திருவண்ணாமலை
தஞ்சாவூர்
திருவாரூர்
அறந்தாங்கி
ராசிபுரம்
ராமநாதபுரம்
பத்மநாபபுரம்
மானாமதுரை
குளச்சல்
ஆகிய தொகுதிகளில் பாஜக போட்டியிடுகிறது. இந்த நிலையில் தமிழக பாஜக வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான ஆலோசனை கூட்டம் சென்னை கமலாலயத்தில் இன்று நடைபெறுகிறது.
இந்த கூட்டத்திற்கு பாஜக தேசிய அமைப்பு பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் தலைமை தாங்குகிறார். இதில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், கருப்பு முருகானந்தம், சுதாகர் ரெட்டி, சரத்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
ஆனால் தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை பங்கேற்கவில்லை. ஏற்கெனவே அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த தொகுதி பங்கீடு உடன்பாடு ஏற்பட்ட போதும் அண்ணாமலை பங்கேற்கவில்லை.
இந்த நிலையில் நேற்று பாஜகவுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளின் பட்டியல் வெளியானது. அதில் அண்ணாமலை போட்டியிடுவதாக இருந்த சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம் தொகுதிகள் பாஜகவுக்கு ஒதுக்கப்படவில்லை.
அண்ணாமலை கரூர் மாவட்டத்திலேயே பிறந்து வளர்ந்தவர் என்பதாலும் அவருக்கு கோவையில் சில தொகுதிகளில் செல்வாக்கு இருப்பதாலும் கோவை மாவட்டத்தில் உள்ள ஒரு தொகுதியில் போட்டியிட அண்ணாமலை விரும்பியிருந்தார். ஆனால் அதை பாஜகவும் கேட்டு வாங்கவில்லை, அந்த தொகுதிகளை பாஜகவுக்கு ஒதுக்காமல் அண்ணாமலை மீதிருந்த கோபத்தில் எடப்பாடி பழனிசாமி செக் வைத்ததாக சொல்லப்படுகிறது.
பாஜகவுக்கு கோவை வடக்கு ஒதுக்கப்பட்டாலும் அது வானதி சீனிவாசனுக்கு ஒதுக்கப்படலாம். எனவே தனக்கு செல்வாக்குள்ள தொகுதிகளை கூட பாஜக கேட்டு பெறவில்லை என்பது அண்ணாமலையின் மன வேதனையாக இருக்கிறது.
அண்ணாமலையை பாஜக தலைமை சமாதானம் செய்யுமா, இல்லை, அவரை அப்படியே விட்டுவிடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் 27 தொகுதிகளில் ஏதேனும் ஒரு தொகுதியில் பாஜக வேட்பாளராக அண்ணாமலை களமிறக்கப்படுவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications