ஸ்டாலின் பற்றி வாயை விட்ட பாஜக நிர்வாகி.. காலையிலேயே தட்டித் தூக்கிய போலீஸ்! சென்னை கொளத்தூரில் பரபர
சென்னை: சென்னையில் பாஜகவின் மாவட்ட தலைவர் கபிலன் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். பாஜக பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் குறித்து வடசென்னை மேற்கு மாவட்ட பாஜக தலைவர் கபிலன் அவதூறாக பேசியதாக புகார் வந்ததை தொடர்ந்து, பெரவள்ளூர் போலீசார் இன்று காலையில் கபிலனை கைது செய்துள்ளனர்.
கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதி, கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பெரவள்ளூரில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில், முதல்வர் ஸ்டாலின் பற்றி அவதூறாக பேசிய பாஜக வடசென்னை மேற்கு மாவட்ட தலைவர் கபிலனை கைது செய்தனர். இன்று காலையில், வியாசர்பாடியில் உள்ள கபிலனின் வீட்டிற்கு சென்று அவரை போலீசார் கைது செய்து உள்ளனர். முதல்வர் ஸ்டாலின் குறித்து அவதூறாகப் பேசிய புகாரில், பெரவள்ளூர் போலீசார் கைது நடவடிக்கை எடுத்துள்ளனர்.

பாஜக மாவட்ட தலைவர் கைதுக்கு பாஜகவினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பாஜக சமூக வலைதள பிரிவு மாநில தலைவர் பாலாஜி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "இன்று அதிகாலை தமிழக பாஜக வடசென்னை மேற்கு மாவட்ட தலைவர் எம்.கபிலன் அவர்கள் கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசியதற்காக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஜனநாயகத்தை நசுக்கும் இது போன்ற நடவடிக்கைகளை கண்டிக்கிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள பாஜக மாவட்ட தலைவர் கபிலன் ஏற்கனவே சர்ச்சைகளில் சிக்கியவர். பாஜகவைச் சேர்ந்த சென்னை மேற்கு மாவட்ட தலைவர் கபிலன் தன் மீது கை வைத்து தன்னிடம் தவறாக நடந்து கொள்ள முயன்றதாகவும், பதவி வேண்டும் என்றால் பணம் தர வேண்டும் என மிரட்டுவதாகவும் பாஜகவை சேர்ந்த திருநங்கை ஒருவர் போலீசில் புகார் அளித்திருந்தார்.












Click it and Unblock the Notifications