குடியுரிமைச் சட்ட விளக்கப் பொதுக்கூட்டம்... பாஜக சார்பில் ஏற்பாடுகள் தீவிரம்
சென்னை: குடியுரிமைச் சட்ட விளக்கப் பொதுக்கூட்டங்களை நடத்துமாறு பாஜக தேசியத் தலைமை அறிவுறுத்தியதை அடுத்து அதற்கான ஏற்பாடுகள் தமிழக பாஜக சார்பில் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து போராட்டங்கள், பேரணிகள் என நடைபெற்று வரும் நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த நடவடிக்கையை தொடங்கியுள்ளது பாஜக.
இந்தியா முழுவதும் சி.ஏ.ஏ.வை பற்றி மக்களுக்கு எடுத்துக்கூறும் வகையில் தெருமுனைக் கூட்டங்களை நடத்த பாஜக ஏற்பாடு செய்து வருகிறது.
இலங்கை சுதந்திர தின விழாவில் தமிழில் தேசிய கீதம் இசைக்க தடை?
போராட்டங்கள்
குடியுரிமை திருத்தச் சட்டத்தை கண்டித்து வடகிழக்கு மாநிலங்களில் பற்றிய போராட்டத் தீ இன்று நாடு முழுவதும் பரவி கொளுந்துவிட்டு எரிகிறது. மாணவர்கள், இஸ்லாமியர்கள், அரசியல் கட்சியினர், எழுத்தாளர்கள் என பல தரப்பினரும் தன்னெழுச்சியாக போராட்டங்களில் பங்கெடுத்து தங்கள் எதிர்ப்பை அழுத்தமாக பதிவு செய்கின்றனர்.
விளக்கம்
இந்நிலையில் இது குறித்து விளக்கம் அளிக்கும் மத்திய அமைச்சர்களும், பாஜக தலைவர்களும், குடியுரிமைச் சட்டம் பற்றி தவறான புரிதல் காரணமாகவே இதுபோன்ற போராட்டங்கள் நடப்பதாகவும், சட்டத்தின் விவரங்களை அறிந்துகொண்டால் யாரும் போராட மாட்டார்கள் என்றும் கூறி வருகின்றனர்.
குற்றச்சாட்டு
மேலும், சில மாநிலக் கட்சிகள் காங்கிரசுடன் இணைந்து அரசியல் லாபத்துக்காக குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக மாணவர்களை தூண்டிவிடுவதாக பாஜக குற்றஞ்சாட்டி வருகிறது. இந்நிலையில் எதிர்க்கட்சிகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தச் சட்டத்தை பற்றி விளக்கக் கூட்டங்களை நடத்தவும் தீவிர ஏற்பாடுகளை செய்து வருகிறது பாஜக.
தெருமுனைக்கூட்டம்
குடியுரிமைச் சட்டம் பற்றி தெளிவாக, நுணுக்கமாக மக்களிடம் எடுத்துக்கூற வேண்டும் எனவும், இதற்காக ஆயிரம் கூட்டங்களை நடத்தி சி.ஏ.ஏ.பற்றி மக்களுக்கு புரிய வைக்க வேண்டும் என்றும் பாஜக தேசியத் தலைமை மாநில நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.