எதிர்க்கட்சிகளுடன் பாஜகவும் ஆலோசனை “யப்பா.. இது ட்விஸ்ட்டா இருக்கே” ராஜ்நாத் சிங் போட்ட போன் கால்!
டெல்லி : குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக எதிர்க்கட்சிகள் இன்று ஆலோசனைக் கூட்டம் நடத்திய நிலையில், பாஜக மூத்த தலைவர் ராஜ்நாத் சிங் இன்று எதிர்க்கட்சித் தலைவர்களுடன் பேசியுள்ளார்.
மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியுடன் ராஜ்நாத் சிங் தொலைபேசி வாயிலாக குடியரசுத் தலைவர் தேர்தல் வேட்பாளர் தொடர்பாக பேசியுள்ளார்.
3 பேர் குழு அமைப்பு... எதிர்க்கட்சிகளின் குடியரசு தலைவர் வேட்பாளர் யார்... டி.ஆர்.பாலு பரபரப்பு..!
காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே, பிஜு ஜனதா தளம் கட்சியின் தலைவர் நவீன் பட்நாயக் மற்றும் சமாஜ்வாடி கட்சித்தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோருடனும் ராஜ்நாத் சிங் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.
குடியரசுத் தலைவர்
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வரும் ஜூலை 24-ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், அடுத்த குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கு ஜூலை 18ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. தற்போதைய சூழலில் நாட்டில் உள்ள அனைத்து எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்.பிக்களின் வாக்குகளில் சுமார் 48 சதவீத வாக்குகளை பா.ஜ.க கூட்டணி பெற்றுள்ளது. பாஜக தனது வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய சுமார் 20 ஆயிரம் வாக்குகள் கூடுதலாக தேவைப்படுகிறது.
வேட்பாளர்
குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வு தொடர்பாக பாஜக மேலிடம் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது. பாஜகவில் ராஜ்நாத் சிங், மற்றும் ஜே.பி.நட்டா ஆகியோருக்கு, குடியரசுத் தலைவர் தேர்தல் வேட்பாளர் குறித்து கட்சிகளுடன் ஒருமித்த கருத்தை உருவாக்குவதற்காக அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. பா.ஜ.க சார்பில் நிறுத்தப்படும் குடியரசுத் தலைவர் வேட்பாளருக்கு எதிராக பொது வேட்பாளரை நிறுத்தி டஃப் கொடுக்க காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் மும்முரம் காட்டி வருகின்றன.
ஆலோசனை கூட்டம்
எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக மகாராஷ்டிரா முன்னாள் முதல்வரும் தேசியவாத காங்கிரஸ் தலைவருமான சரத் பவாரை களமிறக்க பேச்சுவார்த்தை நடைபெற்றது. குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக விவாதிக்க நாடு முழுவதும் உள்ள 22 எதிர்க்கட்சி தலைவர்களுக்கு மேற்கு வங்க முதலமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி கடிதம் எழுதி அழைப்பு விடுத்தார். அதன்படி, குடியரசுத் தலைவர் தேர்தல் வேட்பாளரை தேர்ந்தெடுப்பது தொடர்பாக இன்று எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. காங்கிரஸ், திமுக, சமாஜ்வாடி உள்ளிட்ட முக்கிய கட்சிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றன.
சரத் பவார் மறுப்பு
குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை நிறுத்த அனைத்து எதிர்க்கட்சிகளும் வலியுறுத்திய நிலையில், அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். இதையடுத்து, வேறொருவரை பொது வேட்பாளராக தேர்ந்தெடுக்கலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், மம்தா பானர்ஜி, மல்லிகார்ஜுன கார்கே, சரத் பவார் ஆகிய 3 பேர் அடங்கிய குழு அடுத்த கூட்டம் குறித்து முடிவெடுக்கும் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ராஜ்நாத் சிங்
இந்நிலையில், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியிடம் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான ராஜ்நாத் சிங் தொலைபேசி வாயிலாக குடியரசுத் தலைவர் தேர்தல் வேட்பாளர் தொடர்பாக பேசியுள்ளார். குடியரசுத் தலைவர் தேர்தல் விவகாரத்தில் எதிர்க்கட்சிகளுடன் உடன்பாடு ஏற்படுத்த மத்திய அரசு விரும்புவதாக தகவல்கள் கூறுகின்றன.
கட்சித் தலைவர்களுடன்
காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே, பிஜு ஜனதா தளம் கட்சியின் தலைவர் நவீன் பட்நாயக் மற்றும் சமாஜ்வாடி கட்சித்தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோருடனும் ராஜ்நாத் சிங் தொலைபேசி வாயிலாக பேசியதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ராஜ்நாத் சிங் தன்னிடம் பேசிய தகவலை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும் வெளிப்படையாகவே தெரிவித்துள்ளார்.
பேசியது என்ன
குடியரசுத் தலைவர் தேர்தல் வேட்பாளரை எதிர்க்கட்சிகளின் ஆதரவுடனும் தேர்ந்தெடுக்க பாஜக விரும்புவதாக ராஜ்நாத் சிங் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்து அவர்களின் கருத்தைக் கேட்ட ராஜ்நாத் சிங்கிடம், பாஜக தலைமையிலான கூட்டணியின் வேட்பாளரை அறிவிக்கும்படி எதிர்க்கட்சித் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.