பாஜகவின் 9 ஆண்டுகால ஆட்சியே ஒரு பேரிடர்.. அதனால் தான் தனியா அறிவிக்கலையோ.. உதயநிதி ஸ்டாலின் பதிலடி!
சென்னை : பாஜகவின் 9 ஆண்டுகால ஆட்சியே மிகப்பெரிய ஒரு பேரிடர் என்பதால், இதை தனியாக ஒரு பேரிடராக பார்க்கவில்லை என சமூக வலைதளத்தில் ஒரு பதிவை பார்த்ததாக சிரித்தபடி கூறியுள்ளார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
மழை வெள்ள பாதிப்பால் லட்சக்கணக்கான மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நிவாரணம் வழங்குவதற்காக, தேசிய பேரிடராக அறிவிக்கவும், நிதி ஒதுக்கவும் கோரியது தமிழக அரசு. ஆனால், மத்திய அரசு சொற்ப நிதியை மட்டுமே ஒதுக்கியுள்ளதால், திமுகவினர் மத்திய அரசை விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில், மழை வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க சட்டத்தில் இடமில்லை என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று கூறினார். நிர்மலா சீதாராமன் பேச்சுக்கு அமைச்சர் உதயநிதி பதில் அளித்துள்ளார். பேரிடர் கால நடவடிக்கைகளை அரசியலாக்க முயற்சிக்கிறார் நிர்மலா சீதாராமன் என்று தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னையில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கான வங்கி கடன் இணைப்பு விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார் அமைச்சர் உதயநிதி. அப்போது பேசிய அவர், "மத்திய அரசிடம் பேரிடருக்கான நிதியை மட்டுமே கேட்டேன். தவறான வார்த்தை எதையும் பயன்படுத்தவில்லை. அப்பன் என்பது கெட்ட வார்த்தையா? மரியாதைக் குறைவான வார்த்தையை நான் பயன்படுத்தவில்லை" எனத் தெரிவித்தார்.
மேலும் பேசிய உதயநிதி, "பேரிடர் கால நடவடிக்கைகளை அரசியலாக்க முயற்சிக்கிறார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். தமிழ்நாட்டு மக்கள் மழை வெள்ளத்தால் எவ்வளவு பெரிய பாதிப்பை அடைந்திருக்கிறார்கள் என்பதை உணர்ந்து மத்திய அரசு கூடுதல் நிதியை ஒதுக்க வேண்டும்." எனக் கேட்டுக்கொண்டார்.
மேலும் பேசிய அவர், "மோடி அரசின் 9 ஆண்டு கால ஆட்சியே மிகப்பெரிய பேரிடர் என்பதால் இதை தனியாக ஒரு பேரிடராக பார்க்க மாட்டோம் என்ற எண்ணத்தில் கூறியிருப்பார்கள் என சமூக வலைதளத்தில் ஒரு பதிவை பார்த்தேன். வார்த்தைக்கு வார்த்தை பேசி நிர்மலா சீதாராமனின் குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்லி அரசியலாக்க விரும்பவில்லை" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications